Saturday, April 10, 2010

ஓ! பத்திரிக்கையாளர்களே உங்கள் பேனாக்களை பிணத்தின் கையில் கொடுங்கள்.

ஓ! பத்திரிக்கையாளர்களே உங்கள்
பேனாக்களை பிணத்தின் கையில் கொடுங்கள்.

காரிருள் அகத்தில் நல்ல கதிர் ஒளி நீதான் என பத்திரிக்கையை புகழ்ந்தார் பாவேந்தர். காரிருளை அகற்ற வேண்டிய பத்திரிக்கைகள் கலவர தீ மூட்டி குளிர்காய்வதில் அவ்வப்போது ஈடுபடுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. இஸ்லாத்தின் கடவுள் தத்துவத்தை புரியாமல் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் வரைந்து முஸ்லீம்களை காயப்படுத்துவதும் பிறகு மன்னிப்புகோரும் அயோக்கியத்தனத்தை அறங்கேற்றுகிறது சில பத்திரிக்கைகள்.

இறைவனுக்கு இனைவைத்தல் ஆகாது என்பது இஸ்லாத்தின் கடவுள் கோட்பாடு. இறைவனுக்கு இணையாக எதை வைப்பது? அதற்கு முடிவு ஏது? இப்படி இறைவனுக்கு இனைவைக்க தொடங்கியதால் நம் தேசத்தில் கடவுள்களின் எண்ணிக்கையும் கலவரங்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆதித்தமிழர்களின் கடவுள் கோட்பாடு திருமூலரின் ஒன்றே குலம் ஒருவனே தேவன். பேரறிஞர் அண்ணா,"கடவுளை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்றார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று வான்புகழ் கொண்ட வள்ளுவன் குறள் தீட்டினான். "நாதமுனி இருக்கையில் நட்டகல்லும் பேசுமோ?" என்று சிவவாக்கிய சித்தர் கடவுளை பற்றி செப்புகிறார். வானாகி, வளியாகி, ஒளியாகி என்று கடந்த பரம்பொருளை கடவுளாக பாவித்து மாணிக்கவாசகர் பாடினார். கந்தழி என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் வருகிறது. கந்தழி என்றால் கடந்தவன் என்று பொருள் கடந்த பரம்பொருளை கடவுளாக தமிழர்கள் வணங்கியதை மயிலை வெங்கடசாமி குறிப்பிடுகிறார்.
அன்பை மட்டும் பேசினார் புத்தர். கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாக வணங்கப்படுவதை இன்று பார்க்கிறோம். மகாவீரர் கடவுளாக வழிபடுவதை பார்க்கிறோம். கடவுளின் அருள் வேண்டி புகழ்பாடிய ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும், பூஜை புனஸ்காரம் செய்யபடுகிறது. ஆயிரம் தெய்வங்கள் உண்டு என்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று பாரதி ஒரு கடவுள் தத்துவத்தை பாடினார். அந்த பாரதி இன்று கடவுளாக வழிபடுவதை பார்க்க முடிகிறது. கற்பம் தறிப்பதைக் கூட மனிதன் நிருத்திகொண்டான். ஆனால் கடவுளை பிரசவிப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. ஆதி தமிழனின் கடவுள் கோட்பாட்டை இன்றைய தமிழன் புரிந்து கொள்ளாத காரணத்தினால் ஜாதிகளும், பேதங்களும் சண்டை சச்சரவுகளும் கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படுவதை பார்க்க முடிகிறது.

இஸ்லாத்தில் இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது. அப்படி இணைவைத்தால்? யாரை இணைவைப்பது என்று கேள்வி எழுகிறது. யார்? மந்திரம் ஓதுவது என்ற சிக்கல் எழுகிறது. தமிழிலா? அல்லது சமஸ்கிருதத்திலா? என்ற சர்ச்சை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோவில் பிரச்சனை கோர்ட்ட் வரை சென்றிருப்பதை பார்க்க முடியும். மனித மனத்தின் பலகீனத்தை புரிந்துகொண்ட நபிகள் நாயகம் அவர்கள் அன்பு மதிப்பாகி, மதிப்பு பக்தியாகி, பக்தி முக்தியாகி இறைவனுக்கு நிகராக யாரும் என்னை வைத்து விட கூடாது. கடவுளாக பூஜை புனஸ்காரம் செய்து விடக் கூடாது என்பதற்காக என்னை உருவமாகவோ, படமாகவோ, சிற்பமாகவோ, கர்ட்டூனாகவோ, வரைவதை கடுமையாக தடுத்தார்கள். இன்றுவரை யாரும் செய்யாத காரியத்தை, முஸ்லீம்கள் அனுமதிக்காத காரியத்தை சில கயமைத்தன பத்திரிக்கைகள் காழ்புணர்ச்சியோடு வெளியிடுவது கண்டனத்திற்குரியது.

மனித குலத்தின் எதிரிகள் சமூக நல்லிணக்கத்தை உடைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கின்றனர். பிறர் மதத்தின் அடிப்படை நம்பிக்கையை, கொள்கையை, உணர்வை புரிந்து கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன், என்று எழுதுவது, கர்ட்டூன் வரைவது, பதற்றத்தையும், கொந்தளிப்பையும், பல் சமய நண்பர்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்.அன்று ஜெர்மானிய எழுத்தாளர்கள். தங்கள் எழுதுகோலால் உடைந்த ஜெர்மனியை ஒன்றாக்கினார்கள். இங்கும் சில எழுத்தாளர்கள், காயம் தேடும் காக்கைகளாக தமிழ்நாட்டில் வலம் வருகிறார்கள். ஓ! எத்தி பிழைக்கும் எச்சில் எழுத்தாளர்களே, உங்கள் பேனாவிற்கு வலிமை இருந்தால், தேச ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எழுதுங்கள்.இல்லை என்றால் வேசித்தனம் புரியும் உங்கள் நீச பேனாவை பிணத்தின் கையில் கொடுங்கள் அங்கேயாவது அது பெருமையாக இருக்கட்டும்..
இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி(IDMK)



No comments:

Post a Comment