Tuesday, December 14, 2010

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்


விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.

இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.

1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.

2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத் தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச் சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும் நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.

3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும் அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.

4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன் லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக் கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.

5.உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும் பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.

7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும். மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி மாற்றவும்.

8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள் போலத் தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும் தளங்களை நம்பக் கூடாது.

9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின் முகவரியில் “https” என்ற முன்னொட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல “http ” உடன் “s” இணைந்து இல்லை என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.

10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு.

11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என மெயில்கள் வந்தால், சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும் தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

Thanks to Mr.Mohamed Bijili...

Thursday, September 23, 2010

dwdsdw

Tuesday, August 24, 2010

கருவேல மரம்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது,

இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
மது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Friday, August 20, 2010

வதந்தி(தீ)

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...." 

"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

"அதில்லை..."

"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"

"இல்லை"

"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"

"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று

சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?
மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதிலை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான்.

ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"

"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?

இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்....

Wednesday, July 28, 2010

கருப்பு பெட்டி

விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.

இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள்   வைக்கப்பட்டுள்ள  ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்.  பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும்          பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.

விபத்து எப்படி நடந்தது? என்பதை அறிய, இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்தான் உதவியாக இருக்கும்.


* ‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.

* ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.

* பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.

* சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.

*விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.

*இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.

* 2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.

* 1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.

* கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.

* இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.

* பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.

*1953ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள டேவிட் வாரன் விமான ஆய்வு மையத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்

விமான விபத்துகளை பதிவு செய்யும் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார். விமானம் விபத்துக்குள்ளானால் அந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிவதற்கு கருப்பு பெட்டி உதவுகிறது. விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருப்பதால்தான் விமான விபத்து நிகழ்ந்துவிட்டால் தீவிரமாக கருப்பு பெட்டியை தேடுகிறார்கள். 1934ம் ஆண்டு டேவிட் வாரனின் தந்தை விமான விபத்தில் இறந்து போனார். அப்போது அந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்படி ஒரு நிலை இருக்கிறதே இதை மாற்ற வேண்டும். தரையில் நடக்கும் விபத்துக்கான காரணங்கள் தெரிவது போல் வானில் நடக்கும் விபத்துக்கான காரணங்களும் தெரியவேண்டும். அதற்கான கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கருப்பு பெட்டியை கண்டுபிடித்தார். இந்த கருப்பு பெட்டி 1953ம் ஆண்டிலிருந்து விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கருப்பு பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் காலமானார்.

thanks nakeeran

Monday, July 26, 2010

விமானம் எப்படி பறக்கிறது..?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும் சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது... இந்த விடயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு


A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.

1) Weight=Lift
 2) rag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்.


விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். சரி... பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின். அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.  (பலருக்கு ஒரு விடயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான்.இது சற்று சுவாரஸ்யமானது.


எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும். இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விடயம் உள்ளது. காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

சரி எப்படி குறைந்த காற்றழுத்தம் இறக்கையின் மேலே உருவாகுது எனப்புரியாதவர்களுக்கு, இந்த படத்தை பார்த்தால் எல்லாம் புரியும். விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா? அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு சுட்டுப்போட்டாலும் வராது )

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது. விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா? அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது. ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது (சந்திரனில் கூட பறப்பதற்கு இறக்கை உபயோகப்படாது).

அடுத்த முறை விமானத்தில் பயனம் செய்யும்போது மேற்கூறிய அத்தனையும் உங்கள் நியாபகத்திற்கு வரும்தானே. சும்மா ஏர் ஓஸ்டஸ்ஸை பார்ப்பதை விட்டுவிட்டு இந்த விஞாண பிண்ணணியை நினைத்து களியுங்கள்...



thanks towww.thiagu1973.blogspot.com

Thursday, July 15, 2010

கருப்பு பணம்

 கருப்பு பணம்
கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர் வரை எல்லோரும் பங்கெடுத்து முழு வீச்சுடன் கருப்பு சந்தை வளர்சிக்கு பணி செய்கின்றோம். வரி கட்டாமல் வியாபாரம் தெருவுக்கு தெரு உண்டு. தெருவில் சாக்கடை புரண்டாலும் கவலை இல்லை. கோடையில் சின்னம்மை தாக்கினாலும் கவலை இல்லை.வரி கட்டாவிட்டாலும் கவலை இல்லை. மரத்து போய் விட்டதா இல்லை இது போதும் என்று நிறைவடைந்து விட்டோமா என தெரியவில்லை.

1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. கடுமையான வரிச்சட்டங்கள், அளவுக்கு அதிகமான முத்திரைதாள் கட்டணம் போன்றவையே கருப்பு பணத்தினை தீ மூட்டி வளர்க்க முதல் காரணம். பின்னாளில் இவை தளர்த்த பட்ட போதும ஏமாற்றி பழகியது வசதியாய் இருந்ததால் வரி கட்டுதல் அநாவசியமாய் போய் விட்டது. அதற்கு அடுத்த காரணம் ஊழல்.

மக்களுக்கு அரசு நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இல்லை. தொகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி பக்கம் வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எல்லாம் உண்டு. புழங்கும் இந்த கருப்பு பண அளவை நினைத்து பாருங்கள். இன்று உள்ள எல்லா அரசியல் கட்சிக்கு இதில் பங்கு உண்டு. மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் அறவே இல்லை.

சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது. இது இல்லாமல் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டாகவும் கருப்பு பணம் அதிகம் இருக்கின்றது. அதிக மதிப்புள்ள பணத்தினை சந்தையில் குறைத்து, வங்கி கணக்குகள் வழியே வர்த்தக பரிமாற்றங்கள் வர வழி செய்வது முக்கியமாகும். கருப்பு சந்தையின் அளவு விரியும் போது அதன் சுமை வரி செலுத்துவோரின் மேல் அதிகமாகும். அதன் விளைவாக ஒழுங்காய் வரி செலுத்துபவரும் அதை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

இந்தியா வல்லரசு ஆக வேண்டிய அவசியத்தை விட தொழில் வளத்தில், மக்கள் வளத்தில் முன்னேறிய நாடாக வேண்டிய அவசியம் நிறைய உண்டு. எளிமையான வரி அமைப்பு, அரசின் சிவப்பு நாடா அகன்ற தொழில் ஊக்குவிப்பு முறைகள், உள்கட்டுமான உயர்வுகள், அதிகரிக்கும் வரி செலுத்துவோர், குறைந்த பட்ச நேர்மை உள்ள அரசியல்வாதி போன்றவைதான் அடிப்படை தேவை. பாகிஸ்தானோடும், சீனாவோடும் ராணுவ அளவில் ஓப்பிடு செய்து கொண்டு மதச்சண்டைகளில் இன சண்டைகளில் நேரத்தை செலவீடு செய்தால் நிலையான முன்னேற பாதையில் உள்ள அரசு என்பது கனவில்தான் இருக்கும்.
Thanks to sinthipoma.blogspot.com

Monday, July 12, 2010

தங்கத்தின் விலை

பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, “இன்று இதுதான் விலை’ என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, “இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்’ என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது.

தங்கத்தின் கதை:

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 – கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மொத்தத் தங்கம்:

தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

சொக்கத்தங்கம்:

பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

நன்றி:-13-12-2009 தினமலர் and :-www.tntj.net

Sunday, July 11, 2010

கால் சென்டர்


கால் சென்டர்களை ஆதரிப்பவர்களின் தரப்பு வாதம் என்னவென்றால்“ எந்த ஒரு நன்மையும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது கூடவே நாலு தீமையும் நுழையத்தான் செய்யும் ! நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர ஒரேயடியாக அந்த நன்மைக்கே முட்டுக்கட்டை போடுவது கடைந்தெடுத்த பத்தாம் பசலித் தனம் !” ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ’ வரவேற்க வேண்டியவையே என்று நம் பெரியவர்களே சொல்லவில்லையா ?’ “Work hard, Party hard! (கடினமாக உழை ! மிகக் கடினமாக பார்ட்டி கொண்டாடு !) என்ற கொள்கை உடையவர்கள் இந்தத் துடிப்பு மிகு இளைஞர்கள் ! இதில் என்ன தவறு? இரண்டு மூன்று தலைமுறை பழசாய்ப் போனவர்களெல்லாம் பொறாமையில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக நியாயம் போல் தோன்றும் இந்த வாதங்களில் பூசி மெழுகப்படும் விஷ(ய)ங்களை நாம் கூர்ந்து நோக்க வேண்டும் ! வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே , தன் தந்தையின் மாத சம்பளத்தை விட அதிகம் வாங்கும் ஒரு பையனோ பெண்ணோ , சற்று மிதப்புடன் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப் போய் விடக்கூடிய ஒரு சில்லறைக் குற்றம்தான் ! ஆனால் , வார இறுதியில் கொண்டாடப் படும் week end பார்ட்டிகள்தான் இந்த BPO க்களின் மாபெரும் சாபக்கேடு !


சிகரெட் , மது (பொதுவாக பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம் எனக் கொள்க !) என்றால் இயல்பாகவே நம் பெண்களுக்குள்ள அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம் அத்தனையையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசிய புண்ணியத்தை இந்தக் கால் சென்டர்கள் தேடிக் கொண்டுள்ளன !

இந்திய (குறிப்பாகத் தமிழ் ) சமூகத்தில் கடந்த பல நூறு ஆண்டுகளாக நெறிகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட சீரழிவை , நான்கைந்து வருடங்களிலேயே அசுரத்தனமாக மிஞ்சிக் காட்டிய பெருமையும் இவற்றையே சாரும் ! புகை , பீர் மற்றும் ரம் , விஸ்கி போன்றவை தண்ணீர் போலப் புழங்கும் ஒரு சூழலில் , ஆண்கள் பெரும்பாலானோர் தன் வயம் இழந்த சூழ்நிலையில் , திருமணம் ஆகாத பெண்கள் வளைய வருவது மேல்தட்டு வர்க்கத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ! என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள மத்யமர்களுக்கு எந்நாளும் ஒத்து வராது !

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியது போல் ‘நம் ஆட்களுக்கு அளவாகக் குடிக்கவும் தெரியாது !’ இன்றுதான் உலகின் கடைசி நாள் என்பது போல் அரக்கத் தனமாகக் கொண்டாடப் படும் இந்த வார இறுதிப் பார்ட்டிகளில் பெண்கள் பலரும் குடித்து விட்டு ‘அவுட் ’ ஆகி விழுவதும் , ‘கால் சென்டரில் இதெல்லாம் சகஜமப்பா !’ என்று சில தடியன்கள் அவர்களை ‘க்வாலிஸ் ’ வண்டியில் தூக்கி வந்து வீட்டில் பெற்றோரிடம் நடு நிசியில் தள்ளி விட்டுப் போவதும் எத்தனையோ வீடுகளில் நடக்கின்றன ! காலையில் அதே பெண் எழுந்து , தேள் கொட்டிய திருடனாய் இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் தன் உரிமைகளைப் பற்றி ஆவேசமாய் சர்ச்சை செய்வதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே !


பெண்களின் ஒழுக்க உணர்வு தளர்ந்தால் சமூகம் குட்டிச் சுவராக சில பத்தாண்டுகளே போதுமே ! பொருளாதார மேதைகள் நமக்குக் காட்டும் ரசவாதமான 10% GDP வளர்ச்சிக்கு நாம் கொடுத்துத் தொலைக்க வேண்டிய விலை இது என்று புறந்தள்ளி விட்டுப் போக முடியுமா பண்பாட்டின் இந்த அதல பாதாளச் சீர்கேட்டை ? நாளை சமூகத்தை மீட்டெடுக்க எத்தனை மகான்கள் முயன்றாலும் முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது போன்ற சமுதாயச் சிக்கல்களுக்கெல்லாம் ‘RESET’ பட்டன் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லையே !!!

Thanks to cinemavirumbi.blogspot.com

Monday, June 28, 2010

வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்


கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள்,

அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

செம்மொழி மாநாடு


ஏ.ஆர். ரகுமானின், வன்இசையின் துணையோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சவ்ராஸ்டிரம், தமிழ் பாடகர்கள் ஒன்றிணைந்து, முக்கி… முக்கி…. பாடி செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களின் கூக்குரலில் தமிழர்களின் காது் செவிடாகிவிடும் அளவிற்கு தெருவெங்கும் திரும்ப, திரும்ப ஒலித்தது ‘தமிழ் மொழியாம்… தமிழ் மொழியாம்…’ என்கிற அபயக்குரல்…

கூக்குரலோடும், அபயக்குரல் பாணியிலும் இசையமைத்து, ஈழத்தமிழர்களின் துயரங்களை மறைமுகமாக உணர்த்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் என்று யாராவது ஒரு புண்ணியவன் விளக்கம் எழுதாமல் இருந்தால் அவர்களுக்கு புண்ணியமாக போகும். ஒலிப்பதிவை ஏ.ஆர். ரகுமான் ‘சிறப்பாக’ செய்ய, அதற்கு எற்றாற் போல் ஒளிப்பதிவை கவுதம் மேனன் செய்திருக்கிறார்.


சிதம்பரம் பத்மினி, சிறுமி ரீட்டா மேரி, சின்னாம்பதி கிராமத்து பெண்கள் இவர்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்த காவல்துறையின் வீரதீர தியாக செயல்களை நியாயப்படுத்தி என்ன தப்பு பண்ணாலும் அவர்களை ‘காக்க…காக்க…’என்கிற பெயரில் படம் எடுத்தவர்தான் இந்த கவுதம் மேனன். அதற்காகத்தான் செம்மொழி விளம்பர பிராஜக்ட் அவரிடம் தரப்பட்டதோ என்னவோ? (அவரு பத்து பைசாகூட வாங்கலியாமே அவரே சொல்லியிருக்கார்)

கவுதம் என்பது அவரு பேரு. மேனன் என்பது அவரு படிச்சு வாங்குன பட்டமா? (வசனம் உபயம் ‘வேதம் புதிது’திரைப்படம்)

எப்படியோ… பல மொழி பேசுற மக்களை ஒண்றிணைத்து தமிழுக்கு மாநாடு நடக்குது. வாழ்க தேசிய ஒற்றுமை.

போன ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை தங்க தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின போர்முரசு குஷ்பு தொகுத்து வழங்கினார்.

அந்த மேடையில் குஷ்பு, ‘பெரியாரின் கொள்கைகள்’ என்பதற்கு பதில், ‘பெரியாரின் கொள்ளைகள்’ என்று பேசினார்.


அதுபோல் செம்மொழி மாநாட்டு தொகுப்புரையை கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா தொகுத்து வழங்குவாரோ என்னவோ? தெரியல.


ஒருவேளை அவருதான் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!

அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …

‘நம்ம கலைஜர் மச்சான்… செம..மொலி மாநட்டை..சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’

நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ

thanks to mathimaran.wordpress.com

Thursday, June 24, 2010

எண்ணெய் யுத்தம் போய் எண்ணெய்யுடன் யுத்தம்...

எண்ணெய் யுத்தம்
நூருத்தீன்
2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana)மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர்.எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு?
கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது. 2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக்கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம். ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. 


பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது.

"அய்யோ பாவமே!" என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

என்ன பிரச்சினை? எண்ணெய்தான் பிரச்சினை; கச்சா எண்ணெய். இந்த விபத்தினால் கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணற்றின் வாய் பிளந்து கொண்டு, அது பேரல் பேரலாகக் கச்சா எண்ணெயை கடலுக்குள் பீய்ச்சியடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அளவைச் சரியாகக் கூட நிர்ணயிக்க முடியவில்லை. அவ்வளவு எண்ணெய். விண்கோள் படங்களின் உதவியைக் கொண்டு தோராயமாய் 5000 பேரல் எண்ணெய் கடலில் கலப்பதாய்க்க் கணக்கிட்டுள்ளார்கள். அதாவது தினமும் 160,000 லிட்டர்.  இந்தளவு எண்ணெய் கடலில் கலந்தால் எண்ணாகும்?

ஆரம்பத்தில் BP இதை எளிதாகத்தான் எடுத்துக் கொண்டது. "கடல் அளவைக் கணக்கில் கொண்டால் இதெல்லாம் ஜுஜுபி. அடக்கிடலாம்" என்றார்கள். 700 பணியாட்களும் நான்கு விமானங்களும் 32 படகுகளும் கடலிலிருந்து எண்ணெயை நீக்கி அப்புறப்படுத்த அமர்த்தப்பட்டன. கடல்மேல் மிதக்கும் எண்ணெயைச் சுற்றி மிதவைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி, அப்படியே கடலில் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொளுத்தி விடலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. "அதெல்லாம் முடியாது, நிலைமை ரொம்ப மோசம்" என்பதைப் பிற்பாடுதான் உணர்ந்தார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமலா இத்தகைய ராட்சஷப் பணிகளில் ஈடுபடுவார்கள்? எல்லாம் இருந்ததுதான். விபத்து ஏற்பட்டால் தானாகவே இயங்கி, கிணற்றை மூடும் பாதுகாப்புச் சாதனம் இருந்தது. ஆனால், இந்த விபத்தில் அதுவும் பழுதடைந்து, அந்த ஒற்றைத் தடுப்பும் செயலற்றுப் போனது. அதனால், கடலின் அடியிலிருந்து எண்ணெய் நிற்காமல் பொங்கி எழுந்து கலக்க ஆரம்பித்து விட்டது. எண்ணெயில் கலப்படம் செய்வது நமக்குத் தெரியும். இங்கு எண்ணெய் கடலையே கலப்படமாக்க, பிரச்சனையின் பிரம்மாண்டம் BPக்கும் அமெரிக்காவிற்கும் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது.


சரி,கடலுக்கு அடியில் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிப்படகுகளைச் செலுத்தி வால்வுகளை மூடிவிடலாம் என்று யோசித்தார்கள். அதற்காக ஆறு படகுகள் கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டன. அந்த முயற்சி தோல்வியுற்றது. ஏதாவது செய்து கடலில் கொட்டும் எண்ணெயை அடக்கியே ஆக வேண்டும். என்ன செய்வது?யோசித்தார்கள். அடுத்து 125 டன் எடையுள்ள பல அடுக்கு உயரமுள்ள கொள்கலம் ஒன்றைக் கடலுக்குள் இறக்கி, கிணற்றின் வாய்ப்பகுதியில் உட்கார வைத்து, அதன் மூலம் எண்ணெயை உறிஞ்சி, அது கடலில் கலக்காமல் கடலுக்கு மேலேயுள்ள கப்பலுக்கு இழுத்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள் பொறியாளர்கள்.  இவ்வளவு ஆழத்திலெல்லாம் அந்த செய்முறை இதற்குமுன் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். அதனால் அதை முயன்றார்கள். கசியும் வாயு கடலின் ஆழத்திலுள்ள கடும் குளிர் நீரில் இணைந்து, உறைந்து, அந்தக் கொள்கலத்தின் மேல்விதானத்தை அடைத்து விட்டது. கடலுக்குள் இறங்கிய அம்மாம் பெரிய கொள்கலம் பயனற்றுப் போனது.அந்த முயற்சியும் தோற்றது.

அடுத்து, டாப்ஹேட் (top hat) எனப் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கொள்கலத்தைக் கடலுக்குள் இறக்கினர். கிணற்றிலிருந்து தள்ளி அதை நிறுத்தி, வெளியேறும் எண்ணெயைக் குழாய் மூலம் உறிஞ்சி, அதேபோல் மேலே கப்பலுக்கு அனுப்பும் திட்டம். அதுவும் சரிவரவில்லை. பிறகு வேறொரு திட்டம் யோசித்து, அதற்கு டாப்-கில் (top kill) என்று பெயரிட்டனர். இவ்வளவு நெருக்கடியிலும் அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் ஒரு பெயர் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதற்கே சிலர் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ என்னவோ? இருக்கட்டும். இந்தத் திட்டம் என்னவென்றால் இரண்டு பைப்புகள் மூலம் மிகக் கடினமான திரவங்கள், மண் இவற்றையெல்லாம் செலுத்தி துளையை அடைக்க முயல்வது. அது எண்ணெய் வெளியேறுவதை பெருமளவு தடுத்து விடும்.  அடுத்து சிமெண்ட்டையும் அந்தத் துளைக்குள் அள்ளிக் கொட்டி நிரந்தரமாக அடைத்துவிடலாம் என்று முயன்றனர்.    இது வெற்றி பெறவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் மே 29ந் தேதி அந்த முயற்சியும் தோல்வியுற்றது.


அடுத்து ரோபோ மெஷின்களின் உதவியுடன் கிணற்றில் முறிந்துள்ள பைப்புகளை வெட்டி நீக்கி அதன் மேல் நிரந்தர மூடி பதித்து அடைத்து விடலாம் என்ற முயற்சி. அது என்னடாவென்றால் முறிந்திருந்த பைப்பை அறுக்கும்போது ரம்பம் சென்று மாட்டிக் கொண்டது. அதுவும் வைரம் பாய்ந்த ரம்பம். மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் உலகமகா மேஸ்த்திரிகள். ஒவ்வொரு முயற்சியையும் எளிதாய் வாசித்து விட்டாலும், எல்லாமே கடின முயற்சிகள். குளத்திலோ, ஆற்றிலோ குதித்து செய்யக் கூடியதைப் போன்ற வேலையில்லையே. தரையில் நின்று கொண்டு ஒரு மனிதன் பைப்பை அறுப்பதற்கும், துளையை மூட முயல்வதற்கும் கடலுக்குப் படுகீழே இயந்திரங்களை செலுத்தி ஒவ்வொரு யோசனையாக முயன்று பார்ப்பதற்கும் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது.

ஆனால் அதற்காக கிணறோ, கடலோ பரிதாபப்பட்டதாகத் தெரியவில்லை. "என் கடன் எண்ணெய் துப்பிக் கிடப்பதே!" என்று கிணறு ஆக்ரோஷமாய் எண்ணெய் துப்பிக்கொண்டிருந்தது. ஜுன் மாதம் பிறந்தது. போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக 50 நாளும் ஆகிவிட்டது. கடலில் எண்ணெய் கலந்து கொண்டுதான் இருந்தது. BP-யின் பொறியாளர்களும், விக்கிரமாதித்தனாய் முயன்று கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரிகளோ கடலில் கலந்த எண்ணெய் 5300 சதுர கி.மீ. பரவியுள்ளதாக சொன்னார்கள். லூசியானா மாநிலத்திலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்துக் கடற்கரைவரை மெதுவாக நகர்ந்து ஏழு மைல் தொலைவிற்கு வந்து விட்டது எண்ணெய்க்கடல் என்று தெரிவித்தார்கள்.


அடுத்து அது இன்னம் பரவி அட்லாண்டிக் சமுத்திரத்திலும் கலக்க வாய்ப்புள்ளதாகக் கவலைப்பட்டார்கள். இறுதியில் 6ஆம் தேதி ஒருவிதமான மூடியை நீர்மூழ்கி ரோபோ இயந்திரங்கள் உதவி கொண்டு உடைந்திருந்த பைப்பின் மேல பொருத்தினர். "அப்பாடா" என்று சற்று ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது அனைவருக்கும். ஆனால் அது முழு நிம்மதியில்லை. மூடி பொருத்தியதன் பயனாய் நாளொன்றுக்கு 10,000 பேரல் எண்ணெயை கடலில் கலக்காமல் கைப்பற்ற முடிந்தது. அதற்கு முன்தினமும் 19,000 பேரல் எண்ணெய் கலப்பதாக உத்தேசித்திருந்தார்கள். ஆக முழுவதும் பிரச்சனை முடிவிற்கு  வராவிட்டாலும் கடலில் கலக்கும் எண்ணெய் அளவைக் கணிசமாய்க் குறைக்க முடிந்துள்ளது.

கடலிலேயே, அந்தக் கிணற்றுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு கிணறு தோண்டி அதன் மூலம் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால்தான் இதனை மூட முடியும் என்பது நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆலோசனை. ஆனால் அதற்குப் பல மாதங்களாகுமாம். என்னவோ ஹாலிவுட் படம்போல் பரபரப்பாய்த்தான் செயல்பட்டார்கள். 'அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது, தீவரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது', என்பதை வலியுறுத்த இதுவரை மூன்று முறை லூசியானா பறந்தார் ஒபாமா. முதல்முறை பாதிப்படைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதிகாரிகளையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். "எல்லாம் சமாளித்து விடுவார்கள்", என்பதுபோல் ஒரு சாரார் கவனித்துக் கொண்டிருந்தனர். கடலுக்கு அடியில் நிகழும் சங்கதிகளை BP தனது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக பல கேமரா கோணங்களில் காட்டிக் கொண்டிருக்கிறது.பார்ப்பவர்களுக்கு சினிமாவில் பல மானிட்டர்களில் கலர் கலராய் என்னென்னவோ ஓடுவதுபோல் காட்டுவார்களே அதுபோல் பரபரப்பு. மற்றொரு சாரார் அதைத் தாண்டி கவலையுடன் இழப்புகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட ஆரம்பித்தனர்.


"ஒரேயொரு இடத்திலிருந்து அதாவது மெயின் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே எண்ணெய்க் கசிவதாகப் பொய் சொன்னார்கள். மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய், பீச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் அடைப்பது மகாக்கஷ்டம்" என்கிறார் எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் டாக் ஹாமில்டன். கடலில் கலந்து வருவது கச்சா எண்ணெய். தார் வஸ்துவும் கலந்து மிகவும்

பிசுபிசுப்பான எண்ணெய்ப் பிசின். எளிதில் ஆவியாகாது. கழுவி சுத்தம் செய்யவும் முடியாது. லேசில் கொளுத்தவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வைத்திருக்கும் உபகரணங்களுக் கெல்லாம் இது ஒரு சவால் என்று பொறியியல் வல்லுநர்கள் கவலை கொண்டனர்.
இந்த விபத்தால, 400 வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் 34,000 பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி வரை 491 பறவைகள், 227 கடல் ஆமைகள், 27 டால்பின்கள் இந்த எண்ணெய்ப் பிசினில் நனைந்து, குடித்து, சுவைத்து இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீன்பிடித் தொழில் அப்படியே குலைந்துபோய், அந்த மக்களெல்லாம் கோபமும், விரக்தியும், கவலையுமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிரவும், கடலிலுள்ள மீன்களுக்கும் கடும் ஆபத்தான சூழ்நிலை. இந்த பாதிப்பிலிருந்து சுற்றுப்புற மாசு சகஜ நிலைக்குத் திரும்ப பற்பல ஆண்டுகள் ஆகும் என ஜார்ஜியா பல்கலையைச் சேர்ந்த சமந்தா ஜாய் (Samantha Joye) கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளிலுள்ள பீச்சிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போக, அது சார்ந்த தொழில்களான ஹோட்டல் இன்ன பிறவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுடைய வருமானமும் போச்சு. அதெல்லாம் சரி. இது உலக ஆயில் ஜாம்பவான் BP, உலகப் போலீஸ் அமெரிக்கா என்ற
இரட்டை ஹீரோ பாக்ஸ் ஆஃபீஸ் படம் பம்மாத்துப் படக்கதை. அவர்களுடைய ஜேம்ஸ்பாண்ட் சாகசம் நமக்கு எதற்கு?

அடிநாதமாய் வேறொரு செய்தியொன்று இதில் நமக்கென்று உண்டு. பார்க்கலாம்.  எய்ட்ஸை விடக் கொடிய நோய் ஒன்று உலகம் முழுக்க உண்டு. கைச்சேதம், அதை நாமே உணர்வதில்லை. தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இறை நம்பிக்கை, இறை சக்தி என்பதெல்லாம் இன்று ஏதோ ஒரு புத்தக அத்தியாயம் மட்டுமே என்றாகி விட்டிருக்கிறது. தவிர இந்த மேட்டிமையும் வலிமையும் மனிதனுக்கோ, வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் ஆகியனவற்றைத் அனிச்சையாகத் தோற்றுவித்து விடுகிறது. அதனால் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமே மெய் என்ற பொய்ஞான நிலையை எட்டி தனது வலிமை, அறிவு, பணம், இதைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்ற போலி தன்னம்பிக்கையில்தான் ஆழ்ந்துள்ளது உலகம். இறைவன் இயற்கையை இலேசாக இரும வைத்தாலோ, மனித வலிமை இயற்கையைத் தவறாய் உரசினாலோ என்னாகும் என்பதுதான் அவ்வப்போது நிகழும் இத்தகைய உதாரணப் பேரழிவுகள். அதைப் படித்துப் பார்க்க பிரம்மாண்ட விளக்கொளியெல்லாம் தேவையில்லை, உள்ளத்தில் சிறிய ஒளியொன்று - இறையச்சம் - அது இருந்தாலே போதும். காட்சியைச் சரியான பிம்பத்தில் கண்டுகொள்ளலாம்.

நாமென்ன? இதற்கு முன்பும் வாழ்ந்திருந்தார்கள்.ஒவ்வொரு கால கட்டத்திலும்   அந்தந்த முன்னேற்றத்திற்கு    ஏற்ப பிரம்மாண்ட சமூகமெல்லாம் வாழ்ந்திருந்தார்கள். பிரம்மாண்டத்திற்கும் வலிமைக்கும் பேர்போன ஆது சமூகம் இருந்தது. தன்னை, கவுளுக்கும் மேலான கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் இருந்தான். எல்லாமும், எல்லோரும் இறந்து போன இறந்த காலம். அது ஏன் பெரும்பாலோருக்குச் சரிவரப் புரிவதில்லை? வான் தாண்டி செவ்வாயும், நீர் தாண்டி கடல் தரையும் தொட முடிந்தால், அனைத்தும் தன் முட்டிக்குள் அடங்கிவிட்டதாக மனித சமூகம் நினைக்க ஆரம்பித்தால் அங்குதானே அதன் தோல்வியே ஆரம்பமாகிறது.

இதோ இந்த விபத்து! அமெரிக்காவைப் பொருத்தவரை மற்றொரு சவால். ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்றுதான் இதனை அணுகிக் கொண்டிருக்கிறது. BP-யோ திண்று கொழுத்த இலாபத்தின் ஒரு துளியான 20 பில்லியனை இதில் செலவழித்து விட்டு, இயற்கையின் ஒழுங்கு சீர்குலைந்து நாசமானது இருக்கட்டும், இப்படி டாலரெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறதே என்று கலக்கும் ஒவ்வொரு சொட்டையும், காசுபோன துயரத்தில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. Materialistic world!.

இதுவரை கடல் தாண்டி எண்ணெய்க்காக யுத்தம் புரிந்து கொண்டிருந்ததே அமெரிக்கா.  இப்பொழுது அந்த எண்ணெயுடனேயே, தனது கரையிலேயே கடலில் யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?

எண்ணெயுடனேயே யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?  என்னத்த சொல்வது?  வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் என்னத்த சொல்வது?

Thanks to Mr.Nizar Ahamed (PTM)