Thursday, April 29, 2010

இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம்

"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." அல்குர் ஆன் 4:7

அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.

சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று கூறியிருப்பதால் இந்த வாரிசுரிமை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது கட்டாயம் ஆகும்.

சொத்துரிமை பிரச்சினை சிக்கலாகி குடும்பப் பிரச்சினை தோன்றினால் மட்டுமே அரபுக் கல்லூரிகளுக்கு தீர்ப்புக் கேட்டு எழுதி அதன்படி செயல்படுகின்றனர். இல்லையெனில் யூகத்தின் அடிப்படையில் தான் பாகப்பிரிவினை செய்து கொடுப்பதைப் பார்க்கிறோம்.

சில குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போதே சீர்வரிசை, வரதட்சணை, நகை நட்டுக்கள் என அதிகமாகச் செலவு செய்து விட்டோம் என்று கூறி விடுகின்றனர். இது வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளின் தீய விளைவாகும். சிலர் தாயாரின் சொத்துக்கள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண் மக்களுக்கு உரியவை என்றும் (யூகத்தின் அடிப்படையில்) பிரித்து விடுகின்றனர். எனவே, இந்நிலை மாற வேண்டும். வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்கு என்ன? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி பிரித்தளிப்பதும் அவசியம்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின் மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும், "இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் மீது கூறப்படும் ஒரேயொரு குறை என்னவெனில் அது பின்னங்களாக இருப்பதும் அதனால் சொத்து சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து விடுவதும் தான். குறிப்பாக ஒரு வீடு அல்லது ஒரு வயல் சிறு சிறு துண்டுகளாய்ப் பிரிக்கப்படும்போது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பது நாம் அறிந்ததே. "ஆனால் அந்தக் குறையும் கூட பிற வாரிசுகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் முன்னுரிமையை அந்நியரை விட மற்ற வாரிசுதாரர்களுக்கு வழங்குவதன் மூலம் இஸ்லாமிய சட்டம் போக்கிவிடுகிறது" என்றும் G.C. வெங்கட சுப்பாராவ் கூறுகிறார்.

அதாவது, இருவருக்குச் சொந்தமான சொத்தில் தமது பங்கை ஒருவர் விற்க விரும்பினால் அவர் தமது பங்காளிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
"பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டு விட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம் : புகாரி 2257

இந்தச் சொத்துரிமைப் பங்கு விகிதாச்சாரங்கள் நம்மையெல்லாம் படைத்த இறைவனே ஏற்படுத்திய கணக்கீடு ஆகும். மனிதர்களாகிய நாம் அதை ஏற்படுத்தி இருந்தால் நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற ரீதியில் பாகுபடுத்தி இருப்போம். ஆனால், கருணையாளனான அல்லாஹ் யாருக்கும் எந்தப் பாதகமுமின்றி எல்லோருக்கும் சொத்துக் கிடைக்கும் வகையில் பங்கீடு செய்துள்ளான்.

Thanks இஸ்லாம்கல்வி.காம்

மெகா ஆங்கில டிக்ஸ்னரி

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.

நமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம் தெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும் நம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை உதாரணமாக நாம் டிக்ஸ்னரியில் Teaching என்ற வார்த்தைக்கு Teach என்று தேடினால் தான் முடிவுகள் கொடுக்கும் அதேப்போல் இல்லாமல் நாம் கொடுக்கும் ஆங்கில வர்த்தைக்கு துல்லியமான அர்தத்தை சொல்ல இந்த இணையதளம் வந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவு.

இணையதள முகவரி: http://advertt.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் வார்த்தையை கொடுத்து தேடினால் நாம் கொடுத்த வார்த்தைக்கான துல்லியமான முடிவை இந்த் இணையதளம் காட்டுகிறது. வீக்கிப்பிடியாவில் இந்த வார்த்தை வருகிறது என்றால் அதன் பொருள் என்ன என்று தெளிவாக விளக்கி காட்டுகின்றனர்.அடுத்து சாதாரண டிக்ஸ்னரியில் நாம் கொடுத்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் வேறு எங்கெல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் துல்லியமாக கூறுகின்றனர். அதோடு இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்துள்ள யூடியுப் வீடியோவையையும் இத்துடன் காட்டுகின்றனர். நாம் தேடும் அத்தனை வார்த்தைக்கான அர்த்தமும் உள்ள இந்த இணையதளம் ஒரு மெகா ஆங்கில டிக்ஸ்னரி தான்.

அன்புடன்.... பயாஸ்பஷீர்


நன்றி நிசார் அஹ்மத் .J

பெரியாரின் பார்வையில் இந்துக்களும் , முஸ்லிம்களும்

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.


ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

நன்றி : கீற்று.காம்