Wednesday, June 16, 2010

ஆப்கானிஸ்தான் கனிம புதையல்

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.


"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி,  என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத்        தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை.  ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.'' - அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ்.

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.


இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் மிகப்பெரும் அளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு
சொல்லப் பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும். ''இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்'' என்கிறார் ஒரு அதிகாரி.  லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம். இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட்

எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம். மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும்
என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம். சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத்தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.   இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ''பில்லியன் டாலர் கேள்வி''!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ''ட்ரில்லியன் டாலர் கேள்வி!''.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது. இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப்
பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில்,
இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியல் அறிஞர்கள். இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படி யெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க

 ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர்
அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப்பார்த்தால், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா'' அல்லது ''தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா'' என்பது தெரியவில்லை.

உயிர்கொல்லிப் பூச்சிகள்

 பூச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.

சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):


ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.






4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):

ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.


3. கொலைகாரத் தேள் (DeathStalker):


இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!



2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)

பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!

 
1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):

இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

செய்தி உதவி: ஃபுல்கர், kichu.cyberbrahma.com