Monday, June 28, 2010

வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்


கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே?

இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.

அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.

அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா?

எந்த நாட்டை போய் சுரண்டலாம்? இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள்,

அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.

ஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம். ‘எங்க சமூகத்தை எவன் எவனோ எமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா?’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.

ரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், லெனின் ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் இருந்திருப்பார்.

ஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.

அமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவதற்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.

புஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.

வர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.

உலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

அப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.

இந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.

பாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்‘ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.

அந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது?

வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.

ஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல்கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.

-வே. மதிமாறன்

செம்மொழி மாநாடு


ஏ.ஆர். ரகுமானின், வன்இசையின் துணையோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சவ்ராஸ்டிரம், தமிழ் பாடகர்கள் ஒன்றிணைந்து, முக்கி… முக்கி…. பாடி செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களின் கூக்குரலில் தமிழர்களின் காது் செவிடாகிவிடும் அளவிற்கு தெருவெங்கும் திரும்ப, திரும்ப ஒலித்தது ‘தமிழ் மொழியாம்… தமிழ் மொழியாம்…’ என்கிற அபயக்குரல்…

கூக்குரலோடும், அபயக்குரல் பாணியிலும் இசையமைத்து, ஈழத்தமிழர்களின் துயரங்களை மறைமுகமாக உணர்த்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் என்று யாராவது ஒரு புண்ணியவன் விளக்கம் எழுதாமல் இருந்தால் அவர்களுக்கு புண்ணியமாக போகும். ஒலிப்பதிவை ஏ.ஆர். ரகுமான் ‘சிறப்பாக’ செய்ய, அதற்கு எற்றாற் போல் ஒளிப்பதிவை கவுதம் மேனன் செய்திருக்கிறார்.


சிதம்பரம் பத்மினி, சிறுமி ரீட்டா மேரி, சின்னாம்பதி கிராமத்து பெண்கள் இவர்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்த காவல்துறையின் வீரதீர தியாக செயல்களை நியாயப்படுத்தி என்ன தப்பு பண்ணாலும் அவர்களை ‘காக்க…காக்க…’என்கிற பெயரில் படம் எடுத்தவர்தான் இந்த கவுதம் மேனன். அதற்காகத்தான் செம்மொழி விளம்பர பிராஜக்ட் அவரிடம் தரப்பட்டதோ என்னவோ? (அவரு பத்து பைசாகூட வாங்கலியாமே அவரே சொல்லியிருக்கார்)

கவுதம் என்பது அவரு பேரு. மேனன் என்பது அவரு படிச்சு வாங்குன பட்டமா? (வசனம் உபயம் ‘வேதம் புதிது’திரைப்படம்)

எப்படியோ… பல மொழி பேசுற மக்களை ஒண்றிணைத்து தமிழுக்கு மாநாடு நடக்குது. வாழ்க தேசிய ஒற்றுமை.

போன ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை தங்க தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின போர்முரசு குஷ்பு தொகுத்து வழங்கினார்.

அந்த மேடையில் குஷ்பு, ‘பெரியாரின் கொள்கைகள்’ என்பதற்கு பதில், ‘பெரியாரின் கொள்ளைகள்’ என்று பேசினார்.


அதுபோல் செம்மொழி மாநாட்டு தொகுப்புரையை கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா தொகுத்து வழங்குவாரோ என்னவோ? தெரியல.


ஒருவேளை அவருதான் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!

அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …

‘நம்ம கலைஜர் மச்சான்… செம..மொலி மாநட்டை..சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’

நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ

thanks to mathimaran.wordpress.com

Thursday, June 24, 2010

எண்ணெய் யுத்தம் போய் எண்ணெய்யுடன் யுத்தம்...

எண்ணெய் யுத்தம்
நூருத்தீன்
2005ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம். அமெரிக்காவின் லூசியானா (Louisiana)மாநிலத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரை கேட்ரினா எனும கடும் புயல் தாக்கி சர்வ நாசமொன்றை உண்டாக்கியது. அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் மீட்புப் பணிகளை சரியான வகையில் கையாள முடியாமல் திணறினர்.எதை ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்கள் அதைச் செய்வதற்கு?
கேட்ரினாவின் மீட்புப் பணிகளில் கிடைத்த அவமானத்தையெல்லாம் புஷ் வழக்கம்போல் துடைத்து, தன் கோட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டார். அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் இயற்கை அழிவாய் அது இடம் பெற்றது. 2010, ஏப்ரல் மாதம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே லூசியானா மாநிலத்தின் கடலில் மற்றொரு பேரழிவு. இம்முறை புயல் இல்லை. கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று பொத்துக் கொண்டது. அதனுடன் ஆஜானுபாகுவான அமெரிக்கா தடுமாறி, அரையடியாகக் குன்றிப்போய் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை, உலகம் கிலியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


படத்தில் நீங்கள் பார்ப்பது, சினிமாவில் வரும் 3D டயனோஸர் குட்டியல்ல. அமெரிக்காவின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கும் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோவின் கிணற்று எண்ணெயில் மூழ்கிச் சாகப் போகும் பல்லாயிரக்கணக்கான கடல் பறவைகளில் ஒன்றுதான் அது. கிணறு என்றால் கொல்லைபுறத்தில் வாளியில் கயிறு கட்டி இறக்கி நீரெடுப்பது போலெல்லாம் அல்லாமல், இது பெரிசு. அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளச் சில தகவல்கள் பார்த்து விடுவோம். ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறு தோண்ட வடிவமைக்கப்பட்டது டீப்வாட்டர் ஹாரிஸான் (Deepwater Horizon) எனப்படும் கடற்தளம். சுமார் 396 அடி நீளமும் 256 அடி அகலமுமான தளம் அது. கடலில் உள்ள எண்ணெய்க் கிணற்றினைத் தேர்ந்தெடுத்து அதை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் வேலை நடந்து கொண்டிருந்தது. 


பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்(BP)தான் இந்தக் களத்தைக் குத்தகைக்கு எடுத்து, லூசியானா மாநிலத்திற்குத் தென்கிழக்கே 64 கி.மீ. தொலைவில், பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ (Gulf of Mexico) கடலுக்கு அடியில் 5000 அடி ஆழத்தில் (சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான்) துளையிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், 20-ந் தேதி, இரவு 9:45 மணி இருக்கும். தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அடுத்து பிரம்மாண்டமாய் வெடித்தது. பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் இறந்து விழுந்தார்கள். 98 பேர்வரை தப்பித்து விட்டார்கள். அடுக்கு மாடி கட்டட உயரத்திற்குக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. காப்பாற்ற விரைந்த படகுகளின் பெயிண்ட்டெல்லாம் அந்தத் தீயின் கொடிய வெப்பத்தில் உருகின. அந்தப் பிரம்மாண்டத் தீயை அணைக்க வாய்ப்பெல்லாம் இல்லாமல் 22ஆம் தேதி தளம் கடலில் முழுவதும் மூழ்கிப் போனது.

"அய்யோ பாவமே!" என்று உச்சுக் கொட்டி அனுதாபப்பட்டு, பேருக்கு ஓர் இரங்கல் தெரிவித்துவிட்டு அடுத்த இரண்டாம் நாள் வேறு செய்திக்கு முன்னுரிமை தரமுடியாமல் மாபெரும் தலைவலி ஒன்று அமெரிக்காவை மெதுவாய், மிக மெதுவாய்ச் சூழ ஆரம்பித்தது. ஜுன் மாதம் தொடங்கியும் அது இன்னும் முடிந்த பாடில்லை.

என்ன பிரச்சினை? எண்ணெய்தான் பிரச்சினை; கச்சா எண்ணெய். இந்த விபத்தினால் கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணற்றின் வாய் பிளந்து கொண்டு, அது பேரல் பேரலாகக் கச்சா எண்ணெயை கடலுக்குள் பீய்ச்சியடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் அளவைச் சரியாகக் கூட நிர்ணயிக்க முடியவில்லை. அவ்வளவு எண்ணெய். விண்கோள் படங்களின் உதவியைக் கொண்டு தோராயமாய் 5000 பேரல் எண்ணெய் கடலில் கலப்பதாய்க்க் கணக்கிட்டுள்ளார்கள். அதாவது தினமும் 160,000 லிட்டர்.  இந்தளவு எண்ணெய் கடலில் கலந்தால் எண்ணாகும்?

ஆரம்பத்தில் BP இதை எளிதாகத்தான் எடுத்துக் கொண்டது. "கடல் அளவைக் கணக்கில் கொண்டால் இதெல்லாம் ஜுஜுபி. அடக்கிடலாம்" என்றார்கள். 700 பணியாட்களும் நான்கு விமானங்களும் 32 படகுகளும் கடலிலிருந்து எண்ணெயை நீக்கி அப்புறப்படுத்த அமர்த்தப்பட்டன. கடல்மேல் மிதக்கும் எண்ணெயைச் சுற்றி மிதவைகளைக் கொண்டு கட்டுப்படுத்தி, அப்படியே கடலில் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொளுத்தி விடலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. "அதெல்லாம் முடியாது, நிலைமை ரொம்ப மோசம்" என்பதைப் பிற்பாடுதான் உணர்ந்தார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமலா இத்தகைய ராட்சஷப் பணிகளில் ஈடுபடுவார்கள்? எல்லாம் இருந்ததுதான். விபத்து ஏற்பட்டால் தானாகவே இயங்கி, கிணற்றை மூடும் பாதுகாப்புச் சாதனம் இருந்தது. ஆனால், இந்த விபத்தில் அதுவும் பழுதடைந்து, அந்த ஒற்றைத் தடுப்பும் செயலற்றுப் போனது. அதனால், கடலின் அடியிலிருந்து எண்ணெய் நிற்காமல் பொங்கி எழுந்து கலக்க ஆரம்பித்து விட்டது. எண்ணெயில் கலப்படம் செய்வது நமக்குத் தெரியும். இங்கு எண்ணெய் கடலையே கலப்படமாக்க, பிரச்சனையின் பிரம்மாண்டம் BPக்கும் அமெரிக்காவிற்கும் மெதுவாய்ப் புரிய ஆரம்பித்தது.


சரி,கடலுக்கு அடியில் ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிப்படகுகளைச் செலுத்தி வால்வுகளை மூடிவிடலாம் என்று யோசித்தார்கள். அதற்காக ஆறு படகுகள் கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டன. அந்த முயற்சி தோல்வியுற்றது. ஏதாவது செய்து கடலில் கொட்டும் எண்ணெயை அடக்கியே ஆக வேண்டும். என்ன செய்வது?யோசித்தார்கள். அடுத்து 125 டன் எடையுள்ள பல அடுக்கு உயரமுள்ள கொள்கலம் ஒன்றைக் கடலுக்குள் இறக்கி, கிணற்றின் வாய்ப்பகுதியில் உட்கார வைத்து, அதன் மூலம் எண்ணெயை உறிஞ்சி, அது கடலில் கலக்காமல் கடலுக்கு மேலேயுள்ள கப்பலுக்கு இழுத்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள் பொறியாளர்கள்.  இவ்வளவு ஆழத்திலெல்லாம் அந்த செய்முறை இதற்குமுன் சோதித்துப் பார்க்கப்படவில்லை. ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். அதனால் அதை முயன்றார்கள். கசியும் வாயு கடலின் ஆழத்திலுள்ள கடும் குளிர் நீரில் இணைந்து, உறைந்து, அந்தக் கொள்கலத்தின் மேல்விதானத்தை அடைத்து விட்டது. கடலுக்குள் இறங்கிய அம்மாம் பெரிய கொள்கலம் பயனற்றுப் போனது.அந்த முயற்சியும் தோற்றது.

அடுத்து, டாப்ஹேட் (top hat) எனப் பெயரிடப்பட்ட சிறிய அளவிலான கொள்கலத்தைக் கடலுக்குள் இறக்கினர். கிணற்றிலிருந்து தள்ளி அதை நிறுத்தி, வெளியேறும் எண்ணெயைக் குழாய் மூலம் உறிஞ்சி, அதேபோல் மேலே கப்பலுக்கு அனுப்பும் திட்டம். அதுவும் சரிவரவில்லை. பிறகு வேறொரு திட்டம் யோசித்து, அதற்கு டாப்-கில் (top kill) என்று பெயரிட்டனர். இவ்வளவு நெருக்கடியிலும் அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் ஒரு பெயர் தேர்ந்தெடுப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திட்டங்களுக்குப் பெயர் வைப்பதற்கே சிலர் ரூம் போட்டு யோசித்து சொல்வார்களோ என்னவோ? இருக்கட்டும். இந்தத் திட்டம் என்னவென்றால் இரண்டு பைப்புகள் மூலம் மிகக் கடினமான திரவங்கள், மண் இவற்றையெல்லாம் செலுத்தி துளையை அடைக்க முயல்வது. அது எண்ணெய் வெளியேறுவதை பெருமளவு தடுத்து விடும்.  அடுத்து சிமெண்ட்டையும் அந்தத் துளைக்குள் அள்ளிக் கொட்டி நிரந்தரமாக அடைத்துவிடலாம் என்று முயன்றனர்.    இது வெற்றி பெறவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் மே 29ந் தேதி அந்த முயற்சியும் தோல்வியுற்றது.


அடுத்து ரோபோ மெஷின்களின் உதவியுடன் கிணற்றில் முறிந்துள்ள பைப்புகளை வெட்டி நீக்கி அதன் மேல் நிரந்தர மூடி பதித்து அடைத்து விடலாம் என்ற முயற்சி. அது என்னடாவென்றால் முறிந்திருந்த பைப்பை அறுக்கும்போது ரம்பம் சென்று மாட்டிக் கொண்டது. அதுவும் வைரம் பாய்ந்த ரம்பம். மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் உலகமகா மேஸ்த்திரிகள். ஒவ்வொரு முயற்சியையும் எளிதாய் வாசித்து விட்டாலும், எல்லாமே கடின முயற்சிகள். குளத்திலோ, ஆற்றிலோ குதித்து செய்யக் கூடியதைப் போன்ற வேலையில்லையே. தரையில் நின்று கொண்டு ஒரு மனிதன் பைப்பை அறுப்பதற்கும், துளையை மூட முயல்வதற்கும் கடலுக்குப் படுகீழே இயந்திரங்களை செலுத்தி ஒவ்வொரு யோசனையாக முயன்று பார்ப்பதற்கும் அளவிட முடியாத வித்தியாசம் உள்ளது.

ஆனால் அதற்காக கிணறோ, கடலோ பரிதாபப்பட்டதாகத் தெரியவில்லை. "என் கடன் எண்ணெய் துப்பிக் கிடப்பதே!" என்று கிணறு ஆக்ரோஷமாய் எண்ணெய் துப்பிக்கொண்டிருந்தது. ஜுன் மாதம் பிறந்தது. போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக 50 நாளும் ஆகிவிட்டது. கடலில் எண்ணெய் கலந்து கொண்டுதான் இருந்தது. BP-யின் பொறியாளர்களும், விக்கிரமாதித்தனாய் முயன்று கொண்டுதான் இருந்தார்கள். அதிகாரிகளோ கடலில் கலந்த எண்ணெய் 5300 சதுர கி.மீ. பரவியுள்ளதாக சொன்னார்கள். லூசியானா மாநிலத்திலிருந்து ஃப்ளோரிடா மாநிலத்துக் கடற்கரைவரை மெதுவாக நகர்ந்து ஏழு மைல் தொலைவிற்கு வந்து விட்டது எண்ணெய்க்கடல் என்று தெரிவித்தார்கள்.


அடுத்து அது இன்னம் பரவி அட்லாண்டிக் சமுத்திரத்திலும் கலக்க வாய்ப்புள்ளதாகக் கவலைப்பட்டார்கள். இறுதியில் 6ஆம் தேதி ஒருவிதமான மூடியை நீர்மூழ்கி ரோபோ இயந்திரங்கள் உதவி கொண்டு உடைந்திருந்த பைப்பின் மேல பொருத்தினர். "அப்பாடா" என்று சற்று ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது அனைவருக்கும். ஆனால் அது முழு நிம்மதியில்லை. மூடி பொருத்தியதன் பயனாய் நாளொன்றுக்கு 10,000 பேரல் எண்ணெயை கடலில் கலக்காமல் கைப்பற்ற முடிந்தது. அதற்கு முன்தினமும் 19,000 பேரல் எண்ணெய் கலப்பதாக உத்தேசித்திருந்தார்கள். ஆக முழுவதும் பிரச்சனை முடிவிற்கு  வராவிட்டாலும் கடலில் கலக்கும் எண்ணெய் அளவைக் கணிசமாய்க் குறைக்க முடிந்துள்ளது.

கடலிலேயே, அந்தக் கிணற்றுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு கிணறு தோண்டி அதன் மூலம் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால்தான் இதனை மூட முடியும் என்பது நிரந்தரத் தீர்வுக்கான ஓர் ஆலோசனை. ஆனால் அதற்குப் பல மாதங்களாகுமாம். என்னவோ ஹாலிவுட் படம்போல் பரபரப்பாய்த்தான் செயல்பட்டார்கள். 'அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளது, தீவரமாய் நடவடிக்கை எடுத்து வருகிறது', என்பதை வலியுறுத்த இதுவரை மூன்று முறை லூசியானா பறந்தார் ஒபாமா. முதல்முறை பாதிப்படைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டவர், "முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று கவலையுடன் எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதிகாரிகளையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். "எல்லாம் சமாளித்து விடுவார்கள்", என்பதுபோல் ஒரு சாரார் கவனித்துக் கொண்டிருந்தனர். கடலுக்கு அடியில் நிகழும் சங்கதிகளை BP தனது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பாக பல கேமரா கோணங்களில் காட்டிக் கொண்டிருக்கிறது.பார்ப்பவர்களுக்கு சினிமாவில் பல மானிட்டர்களில் கலர் கலராய் என்னென்னவோ ஓடுவதுபோல் காட்டுவார்களே அதுபோல் பரபரப்பு. மற்றொரு சாரார் அதைத் தாண்டி கவலையுடன் இழப்புகளையும் பிரச்சினைகளையும் பட்டியலிட ஆரம்பித்தனர்.


"ஒரேயொரு இடத்திலிருந்து அதாவது மெயின் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே எண்ணெய்க் கசிவதாகப் பொய் சொன்னார்கள். மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய், பீச்சி அடித்துக் கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் அடைப்பது மகாக்கஷ்டம்" என்கிறார் எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் டாக் ஹாமில்டன். கடலில் கலந்து வருவது கச்சா எண்ணெய். தார் வஸ்துவும் கலந்து மிகவும்

பிசுபிசுப்பான எண்ணெய்ப் பிசின். எளிதில் ஆவியாகாது. கழுவி சுத்தம் செய்யவும் முடியாது. லேசில் கொளுத்தவும் முடியாது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள வைத்திருக்கும் உபகரணங்களுக் கெல்லாம் இது ஒரு சவால் என்று பொறியியல் வல்லுநர்கள் கவலை கொண்டனர்.
இந்த விபத்தால, 400 வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் 34,000 பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மே 30ஆம் தேதி வரை 491 பறவைகள், 227 கடல் ஆமைகள், 27 டால்பின்கள் இந்த எண்ணெய்ப் பிசினில் நனைந்து, குடித்து, சுவைத்து இறந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீன்பிடித் தொழில் அப்படியே குலைந்துபோய், அந்த மக்களெல்லாம் கோபமும், விரக்தியும், கவலையுமாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிரவும், கடலிலுள்ள மீன்களுக்கும் கடும் ஆபத்தான சூழ்நிலை. இந்த பாதிப்பிலிருந்து சுற்றுப்புற மாசு சகஜ நிலைக்குத் திரும்ப பற்பல ஆண்டுகள் ஆகும் என ஜார்ஜியா பல்கலையைச் சேர்ந்த சமந்தா ஜாய் (Samantha Joye) கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளிலுள்ள பீச்சிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போக, அது சார்ந்த தொழில்களான ஹோட்டல் இன்ன பிறவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுடைய வருமானமும் போச்சு. அதெல்லாம் சரி. இது உலக ஆயில் ஜாம்பவான் BP, உலகப் போலீஸ் அமெரிக்கா என்ற
இரட்டை ஹீரோ பாக்ஸ் ஆஃபீஸ் படம் பம்மாத்துப் படக்கதை. அவர்களுடைய ஜேம்ஸ்பாண்ட் சாகசம் நமக்கு எதற்கு?

அடிநாதமாய் வேறொரு செய்தியொன்று இதில் நமக்கென்று உண்டு. பார்க்கலாம்.  எய்ட்ஸை விடக் கொடிய நோய் ஒன்று உலகம் முழுக்க உண்டு. கைச்சேதம், அதை நாமே உணர்வதில்லை. தொழில் நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இறை நம்பிக்கை, இறை சக்தி என்பதெல்லாம் இன்று ஏதோ ஒரு புத்தக அத்தியாயம் மட்டுமே என்றாகி விட்டிருக்கிறது. தவிர இந்த மேட்டிமையும் வலிமையும் மனிதனுக்கோ, வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் ஆகியனவற்றைத் அனிச்சையாகத் தோற்றுவித்து விடுகிறது. அதனால் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் மட்டுமே மெய் என்ற பொய்ஞான நிலையை எட்டி தனது வலிமை, அறிவு, பணம், இதைக் கொண்டு எதையும் சாதித்து விட முடியும் என்ற போலி தன்னம்பிக்கையில்தான் ஆழ்ந்துள்ளது உலகம். இறைவன் இயற்கையை இலேசாக இரும வைத்தாலோ, மனித வலிமை இயற்கையைத் தவறாய் உரசினாலோ என்னாகும் என்பதுதான் அவ்வப்போது நிகழும் இத்தகைய உதாரணப் பேரழிவுகள். அதைப் படித்துப் பார்க்க பிரம்மாண்ட விளக்கொளியெல்லாம் தேவையில்லை, உள்ளத்தில் சிறிய ஒளியொன்று - இறையச்சம் - அது இருந்தாலே போதும். காட்சியைச் சரியான பிம்பத்தில் கண்டுகொள்ளலாம்.

நாமென்ன? இதற்கு முன்பும் வாழ்ந்திருந்தார்கள்.ஒவ்வொரு கால கட்டத்திலும்   அந்தந்த முன்னேற்றத்திற்கு    ஏற்ப பிரம்மாண்ட சமூகமெல்லாம் வாழ்ந்திருந்தார்கள். பிரம்மாண்டத்திற்கும் வலிமைக்கும் பேர்போன ஆது சமூகம் இருந்தது. தன்னை, கவுளுக்கும் மேலான கடவுள் என்று சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்ன் இருந்தான். எல்லாமும், எல்லோரும் இறந்து போன இறந்த காலம். அது ஏன் பெரும்பாலோருக்குச் சரிவரப் புரிவதில்லை? வான் தாண்டி செவ்வாயும், நீர் தாண்டி கடல் தரையும் தொட முடிந்தால், அனைத்தும் தன் முட்டிக்குள் அடங்கிவிட்டதாக மனித சமூகம் நினைக்க ஆரம்பித்தால் அங்குதானே அதன் தோல்வியே ஆரம்பமாகிறது.

இதோ இந்த விபத்து! அமெரிக்காவைப் பொருத்தவரை மற்றொரு சவால். ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என்றுதான் இதனை அணுகிக் கொண்டிருக்கிறது. BP-யோ திண்று கொழுத்த இலாபத்தின் ஒரு துளியான 20 பில்லியனை இதில் செலவழித்து விட்டு, இயற்கையின் ஒழுங்கு சீர்குலைந்து நாசமானது இருக்கட்டும், இப்படி டாலரெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறதே என்று கலக்கும் ஒவ்வொரு சொட்டையும், காசுபோன துயரத்தில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. Materialistic world!.

இதுவரை கடல் தாண்டி எண்ணெய்க்காக யுத்தம் புரிந்து கொண்டிருந்ததே அமெரிக்கா.  இப்பொழுது அந்த எண்ணெயுடனேயே, தனது கரையிலேயே கடலில் யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?

எண்ணெயுடனேயே யுத்தம் புரிய நேர்ந்ததை என்ன சொல்வது?  என்னத்த சொல்வது?  வல்லரசு நாட்டிற்கோ ஒரு விதமான மமதை, அகங்காரம், கர்வம் என்னத்த சொல்வது?

Thanks to Mr.Nizar Ahamed (PTM)

Wednesday, June 23, 2010

மணவை முஸ்தபா



அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார்.

 
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அறிவியல் தமிழுக்காகத் தன் வாழ்கையையே அர்ப்பணித்தவர். இதுவரை அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.
 
 
யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார்.

அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று (மார்ச்.31) ஆணையிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டுகள் ஆற்றி வருகிறார். மருத்துவக்கலைச் சொல்களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற இவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளதுடன், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் இரண்டு தொகுதிகள் கொண்ட அறிவியல் கலைச்சொல் அகராதி உள்பட பல நூல்களைப் படைத்துத் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளார்.

தற்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள மணவை முஸ்தபா முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு 10.3.2010 அன்று எழுதியுள்ள கடிதத்தில் தமது உடல்நிலை குறித்து எடுத்துரைத்துத்தம் மருத்துவச் செலவிற்குப் பயன்படும் வகையில் தாம் படைத்துள்ள அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத்தொகை வழங்கி உதவுறுமாறு கோரியுள்ளார்.

மணவை முஸ்தபாவின் கோரிக்கையை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, அவர் ஆற்றியுள்ள மிகச்சிறந்த தமிழ்த் தொண்டுகளைப் போற்றி, சிறப்பு நிகழ்வாக அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொது நிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.


அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

1984-ல் தனக்கு கலைமாமணி விருது அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்து விட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல், மருத்துவம், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் இதுவரை ஐந்து பெரும் கலைச் சொல்லகராதிகளை உருவாக்கி சாதனை படைத்தவர் மணவை முஸ்தபா. யுனெஸ்கோ கூரியர்' மாத இதழின் தமிழ் பதிப்பில் சுமார் 35 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவர். ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதி வெளியிட்டவர். அவருக்கு தற்போது சுமார் 73 வயதாகிறது. அந்த மூத்த தமிழறிஞரை அழைத்து வந்து உரிய முறையில் கவுரப்படுத்தியுள்ளது ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை.

இப்பேரவை கடந்த 10 ஆண்டுகளாக டிசம்பர் 11ம் தேதி பாரதியார் பிறந்த நாளன்று பாரதி விழா நடத்தி, பல்வேறு துறைகளின் வல்லுனர்களுக்கு பாரதி விருது வழங்கி மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த வரிசையில் தொ.மு.சி. ரகுநாதன், ஜெயகாந்தன், அருணாராய் ஐ.ஏ.எஸ். ஆகியோரும் உண்டு. இவ்வாண்டும் வழக்கம் போல் ஈரோட்டில் விமரிசையான விழா நடத்தி மணவை முஸ்தபாவுக்கு பாரதி விருது வழங்கி கவுரவித்தது. அவருக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் விருது வழங்கினர். உடல் நல பாதிப்பால் முஸ்தபாவால் பேச முடியாததால் அவரது சார்பில் அவரது மகன் டாக்டர் செம்மல் ஏற்புரையாற்றினர். ஆனலும் முஸ்தபாவின் கம்பீரத் தமிழை பார்வையாளர்கள் கேட்க வேண்டுமென்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விழா ஒன்றில் அவர் பேசிய உரை, வீடியோ காட்சியாக திரையிடப்பட்டது.

மணவை முஸ்தபாவின்  தமிழ்ப் பணிக்கும், படைப்புப் பணிக்கும் ஊக்கமும் உறுதுணையாகவும் இருந்த அவரது துணைவியாரை மேடைக்கு அழைத்து மரியாதை செய்தனர். தனக்கு எல்லாமுமாக இருந்து வரும் தனது வாழ்க்கைத் துணைவிக்கு செய்யப்பட்ட மரியாதையை, வாய் பேச முடியாத நிலையில் உணர்ச்சி பொங்கப் பூரித்துப் பார்த்து நின்ற அந்த படைப்பாளியின் பார்வையில் மிளிர்ந்ததோ ஆயிரம் தாஜ்மகால்கள்! நெகிழ்ந்து போன, அரங்கமோ உணர்ச்சிகரமானது.

Tuesday, June 22, 2010

தமிழக அரசு


தமிழக அரசு

இந்திய அரசியலமைப்பு

அடிப்படை உரிமைகள்

----------------------------------------------------------



செயலாட்சி

ஆளுநர்

 முதல்வர்

அமைச்சரவை
--------------------------------------------------------------------------------
சட்டமன்றம்

பேரவைத் தலைவர்

எதிர்கட்சித் தலைவர்
--------------------------------------------------------------------------------

மாநகராட்சி மன்றம்

மன்றப் பேரவை

மேயர்
--------------------------------------------------------------------------------

நகராட்சி மன்றம்

நகராட்சி மன்றத் தலைவர்
--------------------------------------------------------------------------------
ஊராட்சி மன்றம்

ஊராட்சி மன்றத் தலைவர்
-------------------------------------------------------------------------------
பேரூராட்சி மன்றம்

பேரூராட்சி மன்றத் தலைவர்
--------------------------------------------------------------------------------
நீதிமுறைமை

சென்னை உயர் நீதிமன்றம்

சார் நிலை நீதிமன்றங்கள்

மதுரைக் கிளை உயர் நீதிமன்றம்

புதுவை நீதிமன்றங்கள்

தலைமை நீதிபதி

அரசு தலைமை வழக்குரைஞர்
--------------------------------------------------------------------------------

தேர்தல்கள்

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்

தலைமைத் தேர்தல் அதிகாரி

உள்ளாட்சித் தேர்தல்கள்

தமிழகத் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையர்
--------------------------------------------------------------------------------

தமிழக அரசியல்

தேசியக் கட்சிகள்

தமிழகக் கட்சிகள்
--------------------------------------------------------------------------------

தமிழகக் கூட்டணி

இடது முன்னணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
--------------------------------------------------------------------------------

உள்ளாட்சிகள்

உள்ளாட்சி மன்றங்கள்

மாநகராட்சிகள்

நகராட்சிகள்

சிறப்பு நிலை நகராட்சிகள்

தேர்வு நிலை நகராட்சிகள்

முதல் நிலை நகராட்சிகள்

இரண்டாம் நிலை நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊராட்சிகள்
--------------------------------------------------------------------------------

தமிழகத் தேர்தல்கள்


நேரடித் தேர்தல்

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.
--------------------------------------------------------------------------------

மறைமுகத் தேர்தல்

இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.

1 தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நட்த்தப்பெரும் தேர்தல்கள்

2 மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள்


தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நட்த்தப்பெரும் தேர்தல்கள்

நேரடித் தேர்தல்கள்

 தேர்தல்கள் தொகுதிகள்

1 சட்டப் பேரவை 234

2 மக்களவை 39

மறைமுகத் தேர்தல்கள்


தேர்தல்கள் தொகுதிகள் / இருக்கை

1 மாநிலங்களவை 18

2 குடியரசுத் தலைவர் 1

3 குடியரசுத் துணைத் தலைவர் 1

--------------------------------------------------------------------------------

மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள்

உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள்[2]

எண் அலுவலகம் இருக்கைகள் / அலுவலகம்

1 மாநகராட்சி மேயர் 6 (தற்பொழுது 10)

2 மாநகராட்சி உறுப்பினர்கள்

(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 474

3 நகராட்சித் தலைவர்கள் 102

4 நகராட்சி உறுப்பினர்கள் 3,392

5 மூன்றாம் படி நகராட்சித் தலைவர்கள் 50

6 மூன்றாம் படி நகராட்சி உறுப்பினர்கள் 969

7 மாவட்ட ஊராட்சி வட்ட (வார்டு) உறுப்பினர்கள் 656

8 ஊராட்சி ஒன்றிய வட்ட உறுப்பினர்கள் 6,570

9 பேரூராட்சித் தலைவர்கள் 561

10 பேரூராட்சி வட்ட உறுப்பினர்கள் 6,825

11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,618

12 கிராம ஊராட்சி வட்ட உறுப்பினர்கள் 97,458

--------------------------------------------------------------------------------

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்கள்[2]

1 நகராட்சி அமைப்புகள்

2 மாநகர மேயர் மற்றும் துணை மேயர்

3 நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

4 மூன்றாம் படி நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

5 பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்

6 சட்டப்படித் தேவைப்படக்கூடிய நிரந்தர உறுப்பினர்க்ள
--------------------------------------------------------------------------------
thanks விக்கிபீடியா

Wednesday, June 16, 2010

ஆப்கானிஸ்தான் கனிம புதையல்

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.


"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி,  என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத்        தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை.  ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.'' - அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ்.

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.


இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ''மோப்பம் பிடித்தவர்கள்'' அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் மிகப்பெரும் அளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு
சொல்லப் பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும். ''இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்'' என்கிறார் ஒரு அதிகாரி.  லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம். இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட்

எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம். மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும்
என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம். சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத்தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.   இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ''பில்லியன் டாலர் கேள்வி''!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ''ட்ரில்லியன் டாலர் கேள்வி!''.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது. இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப்
பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில்,
இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியல் அறிஞர்கள். இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படி யெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க

 ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர்
அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப்பார்த்தால், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா'' அல்லது ''தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா'' என்பது தெரியவில்லை.

உயிர்கொல்லிப் பூச்சிகள்

 பூச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.

சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):


ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.






4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):

ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.


3. கொலைகாரத் தேள் (DeathStalker):


இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!



2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)

பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!

 
1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):

இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

செய்தி உதவி: ஃபுல்கர், kichu.cyberbrahma.com

Monday, June 14, 2010

சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்! (I.A.S)


இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.

 

சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:

1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)

3. இந்திய காவல் பணி (Indian Police Service)

4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')

6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')

7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')

8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')

9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)

10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')

11. இந்தியக்குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service,Group 'A')

12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')

13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')

14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)

16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')

17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')

18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)

19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)

20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)

21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

 
22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'

23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'

24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'

25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B

26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'

இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்

தேர்வுத் திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)

2. பிரதானத்தேர்வு (Main Exam)

3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)

ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

தேர்வு எழுத தகுதிகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.

வயது வரம்பு:

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.

பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பித்தல்

ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.

முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

 முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.

பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)

3. தாவரவியல் (Botany)

4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)

6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)

8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)

12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)

18. அரசியல் அறிவியல்(Political Science)

19. உளவியல் (Psychology)

20. பொது நிர்வாகம் (Public administration)

21. சமூகவியல் (Sociology)

22. புள்ளியியல் (Statistics)

23. விலங்கியல் (Zoology)
போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.

பிரதானத்தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.

பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது


* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி

(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்

* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.

பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany)

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)

1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி

7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம்

13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி

19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச்

25. ஜெர்மனி 26. ரஷ்யன்

பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.

நேர்முகத்தேர்வு    (Personality Test)

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

Thanks : பொது அறிவு உலகம்