Sunday, April 18, 2010

இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி

இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி

இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் என்ற தலைப்பில் கொளத்தூர் மணி அவர்கள் பண்ருட்டியில் ஆற்றிய உரை இடஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளில் மிக முக்கியமானது, இடஒதுக்கீடு என்கிற சமூக நீதிக்கு எதிராக எப்படியெல்லாம் 'மனு' நீதிமன்றங்கள் நடந்து கொள்கின்றன என்பதையும் க்ரீமிலேயர், என இடஒதுக்கீடு தொடர்பான அத்தனை நியாயங்களையும் எடுத்து விளக்கியுள்ளார். இந்த ஒரு பேச்சே இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் அத்தனை விதண்டாவாதங்களுக்கும் பதிலாக இருக்கின்றது. இடஒதுக்கீடு தொடர்பாக இதை ஒரு முக்கிய ஆவணமாக கருதுவதால் சேகரிக்கின்றோம்...





இடஒதுக்கீடும் நீதிமன்றங்களும் - கொளத்தூர் மணி



தமிழக சிந்தனையாளர் பேரவையின் சார்பாக இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிற சிந்தனையாளர் பேரவையின் தலைவர் மதிப்பிற்குரிய தோழர் இராஜமாணிக்கம் அவர்களே, இங்கு திரையிடப்பட்ட 'கலகக்காரர் தோழர் பெரியார்' என்ற ஒரு அருங்காவியத்தைப் படைத்து, எழுதி, நடித்து, இயக்கி இன்று 'சிந்தனையாளர் விருதை'யும் பெற்று அமர்ந்திருக்கிற தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிற்குரிய நாடகத்துறைப் பேராசிரியர் தோழர் மு. இராமசாமி அவர்களே, இங்கு பல்வேறு செய்திகளைப் பகிர்ந்துகொண்டு எழுச்சியூட்டி அமர்ந்திருக்கின்ற பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தோழர் வேல்முருகன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் விழித்துப் பேசிய அருமைப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.





நேரம் கடந்துவிட்டது என்றாலும், சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கிற வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள் என்பதால் குறுகிய நேரத்தில் உங்களோடு சில செய்திகளை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இட ஒதுக்கீடு, அதற்கு வந்திருக்கின்ற இடைகாலத் தடை, இதை விவரிக்கப் போகும் முன்னால் இட ஒதுக்கீடு என்பதை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை முதலில் விளக்கியாக வேண்டும். இட ஒதுக்கீடு இப்பொழுது அரசுப்பணிகளுக்கு மட்டும் இருக்கிறது, அதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிக்கும் திட்டமும் அல்ல; வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிற திட்டமும் அல்ல. இருக்கிற வேலைகளுக்கு இருக்கிற இடங்களைப் பகிர்ந்துகொள்கிற ஒரு ஏற்பாடு. அதற்கு முன்னால் அது வகுப்புவாரி உரிமையாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகத் (proportional representation) தான் இருந்தது. தமிழ்நாட்டில் நூறு இடங்களும் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதற்கு நமக்கு எண்பது ஆண்டு வரலாறு உண்டு.





தமிழ்நாட்டில் 1920-ஆம் ஆண்டிலிருந்து இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கும் முன் கோல்ஹாப்பூர் போன்ற சிற்றரசுகள் 1902-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தினார்கள். மைசூர் சிற்றரசும் 1921-யில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் பிரிட்டீஷ் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான், சென்னை மாகாணத்தில் தான் அந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. நடைமுறைக்கு வந்த அந்த இட ஒதுக்கீடு, சென்னை மாகாண அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு சென்னை மாகாண அரசில் இருக்கிற பணிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு மட்டுமில்லை, பெரியார் போன்ற புரட்சியாளர்களின் போரட்டத்தின் காரணமாக அது விரிவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீடு இருந்தது. 1934-ஆம் ஆண்டு இதற்கான ஒரு சிறப்புச் சட்டம்

நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீடு சட்டமென்று மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி சென்னை மாகாணத்தில் மட்டும் சென்னை மாகாணத்திலிருந்த பணிகளில் கூட அஞ்சல் நிலையங்களில், அப்பொழுதிருந்த இம்பீரியல் வங்கியில், அப்பொழுது தனியார் இயக்கிவந்த தென்னிந்திய இரயில்வே, தென் மராத்தா இரயில்வே, 1944-யில் அரசுடைமையான பின்னால் அதில், எல்லாவற்றிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.



ஆனால் அந்த இட ஒதுக்கீடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட ஆகஸ்டு 15, 1947க்குப் பின் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை, சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை செப்டம்பர் 30-ஆம் நாள் இரத்து செய்துவிட்டார்கள். ஒன்றரை மாதம் தான் அவர்களால் பொறுத்துகொள்ள முடிந்தது. விடுதலை வந்தது யாருக்காக என்று பெரியார் சொல்வார்: வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பன கொள்ளைக்காரனுக்கு made over செய்யப்பட்டது என்று சொல்வார். அவனால் விடுதலை பெற்ற ஒன்றரை மாதத்தில், நமக்குக் கொடுத்து வந்த இட ஒதுக்கீடுகளை மத்திய அரசில் கொடுத்து வந்த இட

ஒதுக்கீடுகளை அவன் இரத்து செய்தான். உள்துறை இரத்து செய்தது, இரயில்வே துறை இரத்து செய்தது, எல்லோரும் இரத்து செய்தார்கள், ஒரே நாளில். இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு மத்திய அரசில், மத்திய அரசு சட்டத்தைக் கொண்டு வந்தது, விரைவாகப் பேச வேண்டியதுள்ளது, அரசியல் சட்டம் எழுதப்பட்டது. அரசியல் சட்டத்தில் சில

விதிகளைச் செய்தார்கள். பாதுகாப்புக் கொடுப்பதற்காக, பல்வேறு விதிகள் செய்யப்பட்டன. 16 என்ற விதி வேலை வாய்ப்புகளுக்காக, 46 அதிலே (weaker section) நலிவடைந்த பிரிவினர் அவர்களுடைய மேம்பாட்டிற்காக, எனப் பல சட்டங்களைச் செய்தார்கள். ஆனால் அந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை உறுதிசெய்தது. சட்டத்தில் எழுதி வைத்தார்கள், சிறப்பு ஒதுக்கீடு செய்யலாம் என்று. 16(4) என்ற விதி சொன்னது: எந்தச் சமுதாயப் பிரிவினருக்கு அரசுப்பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுகிறதோ அவர்களுக்கு சிறப்பு உதவி செய்யலாம் என்று சொன்னார்கள். அதில் போடப்பட்ட சொற்கள் "பேக்வேர்ட் கிளாஸ்" என்று சொன்னார்கள். அந்த சொல் தான் தாழ்த்தப்பட்டோரை, பழங்குடியினரை எல்லோரையும் குறித்தது. ஆனால் அதில் இன்னொன்று சொன்னார்கள், அரசு விவாததில் இருக்கிறது, அரசியல் சட்டம் எழுதப்பட்ட பொழுது அதில் போடப்பட்ட வார்த்தை 'in the opinion of the government' என்று தான் சொன்னார்கள் அதை. அரசின் பார்வையில் எந்தெந்தச் சமுதாயத்திற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதுகிறதோ அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யலாம் என்பது தான் அந்தச் சட்டப் பிரிவு சொன்னது. இது அரசியல் நிர்ணய சபையில் விவாதம் வந்த போது கூட கேட்டார்கள், யார் இந்த பேக்வேர்ட் கிளாஸ் என்று கேட்டால், அதற்கு அம்பேத்கார் சொன்னார், 'in the opinion of the government' - அரசு யாரைக் கருதுகிறதோ என்று பதில் சொன்னார் - அது பதிவாகியிருக்கிறது. இப்பொழுது எதையெதையோ சொல்லியெல்லாம் அரசியல் நிர்ணய சபை வாதித்தை சொல்கிறார்கள். ஆனால் 'in the opinion of the government' என்பதை விட்டுவிட்டார்கள். சரி, இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் இருந்தது. ஆனால் கல்வியில் வழங்கப்படவில்லை. நம்முடைய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது; அறிமுகப்படுத்தப்பட்ட போது வேலை வாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு அதற்கான பிரிவுகள் இருந்ததே தவிற கல்விக்கு எவ்வித ஒதுக்கீடும் இல்லாத காலம் இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டில் இங்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஒரு பெண் தொடர்ந்த வழக்கு நம் தமிழ்நாட்டு 'கம்யூனல் ஜீ.ஓ' என்ற வகுப்புவாரி ஆணையை இரத்து செய்தது. அது நீண்ட கதை.





அந்த வழக்கைப் போட்ட செண்பகம் துரைராஜ்- நீதிமன்றம் நமக்கு எப்படியெல்லாம் தடையாக இருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும். உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு செல்லாது என்று சொன்னார்கள். உச்சநீதிமன்றத்திற்குப் போனது அரசு. பெரியார் சொன்னார்: "அசலே அநியாயம் அப்பீல்ல அதே காயம், அப்படித்தான் ஆகப்போகுது, உச்சநீதிமன்றத்தில் போனால் என்ன ஆகும் என்று சொன்னார்".

ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த செண்பகம் துரைராஜ் என்ற பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள். வழக்கே நான் பார்ப்பனத்தி என்பதால் தான் எனக்கு இடம் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிற இடஒதுக்கீட்டுக் கொள்கை தடைசெய்துவிட்டது என்று வழக்கு போட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்திற்குப்

போனபின்னல்தான் தெரிந்தது, அந்தப்பெண் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடவில்லை. சரி போடமுடியவில்லை, போடுகிற வயதையும் தாண்டியவர், 34 வயதானவர் அவர். விண்ணப்பிக்கிற வயதைக் கடந்துவிட்டவர் அவர். விண்ணப்பம் போடலாம் என்றாவது பழைய தேதி போடலாம் என்றால் போடவே முடியாது. விண்ணப்பிக்கிற தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில் தான் இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதற்குப்பின்னால் நடந்த போராட்டம் அந்தச் சட்டத்திருத்தத்தை ஜவகர்லால் நேரு அவர்கள் முன்மொழிகிறபோது கூட அவர் சொன்னார் சட்டத்திருத்தாம் ஏன் வருகிறது என்று சொல்லவேண்டும், அறிமுக உரையாற்றவேண்டும், ஆற்றுகிறபோது அவர் சொன்னார், சென்னை மாகாணத்தில் நடந்த நிகழ்வுகள் நம்மை சட்டத்திருத்தைச்

செய்ய வலியுறுத்துகிறது என்று சொன்னார். அவர் சொன்னது ' . . . . in madras province' என்று தான் சொன்னார். அதன் காரணமாக சட்டத்திருத்தம் என்றுதான் சொன்னார். சட்டத்திருத்தம் வந்தது. அதில் போடப்பட்ட சொல்தான் அரசியல் சட்டம் 14-யில் 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று மட்டும் இருக்கிறது போதுமான 'backward classes not adequately representated' என்றுதான் 14(4) சொல்கிறது. ஆனால் 15(4) என்கிற ஒரு புதுப்பிரிவு சேர்க்கப்பட்டது, அந்தப்பிரிவு கல்விக்காக அதை சொல்கிறபோது சொற்களைப்போட்டார்கள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சொல் அந்த சட்டதிருத்தத்தில் தான் வந்தது (socially and educationally backward). அப்போதும் சிலபேர் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார்கள். எகனாமிகலி என்ற சொல்லையும் சேர்க்கவேண்டும். சமூதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கிய சமூகத்திற்கு என்று இருப்பதை பொருளாதத்திலும் பின்தங்கி என்ற சொல்லை சேர்க்கவேண்டி வந்தது,





அப்பொழுது எல்லோரும் மறுத்தார்கள், நேரு மறுத்தார், அப்போது அம்பேத்கார், அரசியல் நிர்ணய சபை, அப்பொழுது நாடாளுமன்றம் இல்லை, நாடாளுமன்றம் 1952- யில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது அம்பேத்கார் மறுத்தார், எல்லோரும் விளக்கிச் சொன்னார்கள், வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 1950 ஜனவரியில் வந்த சட்டத்திற்கு சட்டத்திருத்தம் 1951 ஜூன் மாதத்தில் வருகிறது. ஒன்னாம் நாள் ஒன்றாம் தேதி தான்

வாக்கெடுப்பிற்கு விடுகிறார்கள்- பொருளாதார ரீதியாக என்ற சொல்லை சேர்க்கக் கூடாது என்று எல்லோரும் வாதிக்கிறார்கள். வாக்கெடுப்பிற்கு விடுகிறார்கள். பொருளாதார ரீதியாக என்ற சொல் சேர்க்கப்படக்கூடாது என்று 243 பேர் வாக்களித்தார்கள்; வேண்டும் என்று 5 பேர் வாக்களித்தார்கள். ஆக இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் அச்சொல் மறுக்கப்பட்டது - பொருளாதார ரீதியாக என்று. இதை நான்

ஏன் சொல்கிறேன் என்று சொன்னால், அரசியல் சட்டத்தை எழுதிய அரசியல் நிர்ணய சபை, அது கலைக்கப்படவில்லை, நடைமுறையில் இருந்துகொண்டு வருகிறது. அது 243 க்கு 5 என்ற கணக்கில் மறுக்கப்பட்டது பொருளாதார ரீதியாகஎன்ற சொல் சேர்ப்பதற்கு. ஆனால் இப்பொழுது நீதிபதிகள் பொருளாதார ரீதியாக என்பதைத்தான் 'கிரீமி லேயர்' என்று சொல்கிறார்கள். இரண்டரை இலட்சம் வருமானம் வந்தால் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்கிறார். ஆனால் இவர் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார். மறுக்கப்பட்டது, அப்பொழுது தீர்மானம் கொண்டு வந்தவர் யார் என்றால் அதற்குப் பின்னால் இப்பொழுது பாரதீய ஜனதாவாக இயங்கிக் கொண்டிருக்கிறஅமைப்பின் தாய் அமைப்பான ஜனசங்கத்தை உண்டாக்கிய சியாம் பிரசாத் முகர்ஜி (எஸ். பி. முகர்ஜி) என்பவர் தான் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் பொருளாதார ரீதியாக சேர்க்கவேண்டுமென்று. அப்பொழுது தொடங்கி அவர்களுடைய இயக்கம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது. ஆக மறுக்கப்பட்டது என்பது ஒரு செய்திக்காகச் சொல்கிறேன். அதற்குப் பின்னால் தான் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிந்தங்கிய என்கிறபோது தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு என்று மூன்றையும் சொன்னார். 16(4) வெறும் பேக்வார்ட் கிளாஸஸ் என்று மட்டும் சொல்லியது. இது விளக்கமாக மூண்றையும் சொல்லியது.



பெரியார் கூட கேட்டார்: நீ தெருவுக்கு நாலு பைப் போட்டுக் கொடுத்துடுற, தண்ணீ பிடிச்சுக்கன்னு சொன்ன, ஆனால் டேங்குக்கு தண்ணீ விடலையேன்னார். எனக்கு வேலை வாய்ப்புக்கு இட ஒதுக்கீடு கொடுத்துட்டீங்கள், எங்க ஆள் படிக்கவேயில்லையே, அப்பறம் எப்படி வேலைவாய்ப்புக்கு போய் நிற்பான். பைப்பை மட்டும் போட்டுக் கொடுத்துட்ட, முதல்ல டேங்குக்கு தண்ணீ விடுன்னார். எனவே அந்தத் திருத்தம் வந்தது. அதனால் தான் நமக்கு கல்வியில் இடஒதுக்கீடு செய்யலாம் என்ற நிலை உண்டானது, சட்ட ரீதியாக. 1951-யில் வந்த சட்டம், மத்திய அரசின் நாடாளுமன்றமாக அப்போது கருதப்பட்ட அரசியல் நிர்ணய சபை கொண்டு வந்த சட்டத்திருத்தம், அதே மத்திய அரசால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தான் அங்குள்ள வெட்கக் கேடான செய்தி. கல்வியில் இட ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லிவிட்டார்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள், திருத்தம் வந்துவிட்டது, ஆனால் அந்தச் சட்டத்திருத்தம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு, அதை

ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தார்கள். 1953-ஆம் ஆண்டு - அரசியல் சட்டத்திலேயே சில பிரிவுகளை வைத்தார்கள்; 340 என்ற ஒரு பிரிவு இருக்கிறது, அதுதான் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு மேம்பாடுக்கான சிந்தனைகளை செய்வதற்கு ஒரு குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரைக்கிறது, பரிந்துரைத்தது, அமைத்தார்கள்,



1953-யில் அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவர் காகா கலேகர் என்பவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்பதைபற்றி ஆலோசிப்பதற்கு . . . . . தலைவராகக்கொண்ட குழுவை

அமைக்கிறார். அந்தக்குழு தான் ஆய்வுசெய்தது. அது இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து 1955-யில் ஒரு அறிக்கை கொடுக்கிறது. அது சில சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்துகிறது. 2000 சாதிகளை

வகைப்படுத்துகிறது. வகைப்படுத்தியதோடல்லாமல், இன்னொரு சிறப்பான புரட்சிகரமான ஒன்றைச் செய்தார். பெண்கள் எல்லோரும் பிற்படுத்தப்பட்டவர் என்று அறிவித்தார், என்று பரிந்துரை எழுதினார்கள். தொழிற்கல்வியில் 65 விழுக்காடு, மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தார். அப்பறம் அடுத்தது ஒவ்வொன்றாக சொல்லும் போது 50, 25 என்று குறைத்து சொன்னார். ஆனால் அவர் பரிந்துரைத்தது 75 விழுக்காடு. அறிக்கையை அப்படி எழுதிவிட்டு, அறிக்கையை அரசுக்கு அனுப்பினார். அதிலே ஒரு கடிதம் வைத்து அனுப்பினார். இந்த அறிக்கைகளிலெல்லாம் சொன்னார்கள், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு அறிக்கையில் எழுதியிருக்கிறேன். ஆனால் சாதி அடிப்படையில் எனக்கு இட ஒதுக்கீடு தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று குழுவின் சார்பாகக் கடிதம் வைத்து அனுப்பினார்.





எப்படி இவருடைய அறிவு நாணயம் இருக்கிறது என்று பாருங்கள். குழு கூடி இரண்டாண்டு ஆய்வு செய்து அறிக்கை எழுதிவிட்டு, அறிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டு அதோடு இணைப்புக்கடிதத்தில் மட்டும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பரிந்துரை செய்தார். அதில் இன்னொன்றையும் செய்தார். இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோமே 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே; மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக எடுக்கலாம் என்று 1881-யில் தான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முந்தியே மக்கள்தொகை கணக்கெடுப்பு வந்திருச்சு 1871-யில் சென்னை மாகாணத்திலிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பினுடைய தலைமை அலுவலர் தான் டபிள்யூ. கார்னீஷ் என்பவர் இருந்தார். அவர்தான் சொன்னார் நம் அரசின் ஆய்வில் ஒன்று தெரிகிறது, அரசு மக்கள் நோயை பார்ப்பனக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கிறது (spectacles of Brahmin). அதற்கு prescription நோய் தீர்ப்பதுதற்கும் பார்ப்பன மருத்துவத்தைத் தான் தருகிறது. 1881யில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் சாதியைக் குறிப்பிட்டு எடுத்தார். 1931 வரை நடந்தது. 1941-யில் இரண்டாம் உலகப்போர். சரிவர கணக்கெடுப்பு நடத்தமுடியவில்லை. 1951-யில் விடுதலை பெற்ற இந்தியா எடுக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லிவிட்டது. இதுவரை எடுக்கப்படவேயில்லை. சாதிவாரி எடுக்கப்பட்ட கடைசி கணக்கெடுப்பு 1931. அதற்குப் பின்னர் எடுக்கப்படவில்லை. இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டுகிறபோதெல்லாம் அந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்துகொண்டுதான் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக இல்லை.



ஆக 1955-யில் காகா கலேகர் பரிந்துரையில் ஒன்றாகக் கொடுத்தது: சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சொன்னது. 1931-μடு நிறுத்திவிட்டீர்கள், 1941-யிலே எடுக்கல, 1951-யில எடுக்கல. 1955-யில் பரிந்துரை கொடுத்தார்கள் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்று, அதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் மிக நீண்டகாலம் பிற்படுத்தப்பட்ட மக்களைப்பற்றி கவனிக்கவில்லை என்பதுமட்டுமல்ல 1961-ஆம் ஆண்டு எப்படி இந்தப் பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் என்ன முற்போக்கு பேசினாலும், நாங்கள் அடிக்கடி சொல்வது நாத்திகம் பேசுவதால் பெரியாரை வெறும் நாத்திகராக மட்டும் பார்த்துவிடாதீர்கள், அதற்கும் மேல் ஒரு சமுதாய அக்கறை இருந்தது. அவருடைய கவனம் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது இருந்தது. ஏனென்றால் நாத்திகன் என்று பார்த்தால் நாட்டின் பெருங்கேடாக இன்று விழைந்திருக்கிற இந்துத்துவா என்ற சொல்லாடலைக் கொண்டு வந்த சாவர்க்கர், அதற்காக இந்து மகா சபையை நடத்தியவன், அதற்கு எதிராகப் போனதால் காந்தியைக் கொல்ல திட்டமிட்ட சாவர்க்கர் நாத்திகன். கடவுள் நம்பிக்கை இல்லை.





ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று சொல்பவன். பார்ப்பனனுக்குத் தான் அதிகாரம் வேண்டும் என்று சொன்னவன். வேதம் தான் உயர்ந்தது என்று சொல்பவன். இந்து மகா சபையினுடைய கொள்கையே வேத காலத்திற்குத் திரும்புவோம் என்பது தான். ஒரே ஒரு சொல்தான் கொள்கை அவங்களுக்கு, இந்தியாவை வேதகாலத்திற்கு திருப்பியும் கூட்டிட்டுப் போகனும். எப்படி இருக்கும் என்று அப்ப்றம் நீங்கள் யோசித்துக் கொள்ளலாம். அவன் நாத்திகன். நம்ம கமலஹாசன் கூட நாத்திகர் தான். ஆனால் இட ஒதுக்கீடு தப்பு என்கிறார். அப்படித்தான் நேருவும் நாத்திகர். நேருவும் தன்னை சோசலிசவாதியாகச் சொன்னார். அவர்தான் முதல் சட்டத் திருத்தம் வந்தபோது 'எக்கனாமிகலி' என்ற சொல் சேர்க்கக்கூடாதென்று வாதாடினார். 1961-யில் எல்லா அரசுகளுக்கும் ஒரு கடிதம் எழுதப்பட்டது, 'டெமி அபுசியல் லெட்டர்' - எழுதப்பட்டது. பிரதமரே எழுதினார். எல்லா முதலமைச்சர்களுக்கும். இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 'பாக்வார்ட் கிலாஸ்'என்று சொல்கிற போது முடிந்தவரை பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குக் கொடுங்கள். சாதி ரீதியாக கொடுப்பதை நான் விரும்பவில்லை. 1951-யில் எதிர்த்துப் பேசியவர் 1961-யில் பேசுகிறார் - எல்லா முதலமைச்சர்களுக்கும் எழுதுகிறார், சாதி அடிப்படையில் கொடுப்பதற்கு மத்திய அரசு விரும்பவில்லை என்று எழுதுகிறார்.





அமைச்சராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை எப்படியிருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன். பெரியார் சொல்வார், வெளிப்பகட்டிற்கு புரட்சியாளனாகவும் உள்ளே பார்ப்பனனாகவும் வாழ்ந்தவர் நேரு என்று சொல்லுவார். அவருடைய அப்பா இறந்த பொழுது பூணூல் போட்டுக்கிட்டு சட்டையில்லாமல் சடங்கு செய்ததற்காகச் சொல்கிறார். அதை விடுங்கள். அடுத்து இப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்பதைப்பற்றி ஆய்வதற்கு அடுத்த குழு அமைக்கவே இல்லை. 1953-யில் அமைத்தது, மீண்டும் 1979-யில் தான் சரண்சிங் அவர்கள், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தார், அவர்தான் நியமிக்கிறார், மொரார்ஜி பிரதமர், அவரும் ஒத்துக்கொள்கிறார். சரண்சிங் மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற நூலை எழுதியவர், அது நமக்குத் தெரியாது. விவசாயிகள் நலன்களுக்காகப் போராடிய ஒரு புரட்சியான சிந்தனையாளர் என்று தான் தெரியும். அவர் மாகாணத்திற்கு ஒரு பெரியார் வேண்டும் என்ற ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டவர். அவர்தான் இந்த மண்டல் குழுவை நியமித்தார். இப்பொழுது தலைவராகப் போடப்பட்டவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர். ஒரு வழக்கறிஞர், முதலமைச்சராக இருந்தவர், விந்தேஸ்வரி பிரசாத் மண்டல் - வி.பி.மண்டல் என்கிறவர் தலைமையில் அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு உட்கார்ந்த இடத்திலிருந்து ஆய்வு செய்யவில்லை. இந்தியாவில் அப்பொழுது 406 மாவட்டங்கள் இருந்தன. 405 மாவட்டங்களில் போய் அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். ஒரே ஒரு மாவட்டத்திற்கு போகமுடியவில்லை, பெரும் மழை காரணமாக அஸாமிலி இருந்த அந்த மாவட்டத்திற்கு போகாமல் வந்துவிட்டார்கள். 405 மாவட்டத்திற்குப் போகிறார்கள். எம்.என்.சீனிவாஸ் போன்ற மானுடவியல்

அறிஞர்களுடைய கருத்துக்களை கேட்டார்கள். டாடா நிறுவனம், டெல்லி

பல்கலைக்கழத்தின் மானுடவியல் பிரிவு போன்ற அமைப்புகளை வைத்து ஆய்வு செய்தார்கள். அவர்களிடம் அறிக்கையெல்லாம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு அறிவியல் பூர்வமாக பட்டியலிட்டார். இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள், ஒரு நீதிபதி உட்கார்ந்து கொண்டு. அவர் எப்படியெல்லாம் பட்டியலிட்டார் என்பதை மண்டல் அறிக்கையை படிக்கும்போது நமக்குத் தெரியும்.



பிற்படுத்தப்பட்ட மக்களை சமூக ரீதியாக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தான் எடுக்கவேண்டும் என்றாலும் கூட அவர் பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டார். சமூக ரீதியாக என்று பார்க்கிறபோது 17 வயதிற்குக் கீழ் திருமணமாகிற பெண்கள் முதலில் ஒன்று எடுக்கிறார், அது கிராமத்தில் இருந்தால், நகரத்தில் இருந்தால் என்று விழுக்காடு கணக்கு எடுத்தார். 25 விழுக்காடு மாநில சராசரிக்கு அதிகமாக திருமணம் செய்பவர், நகரமாக இர்ந்தால் 10 விழுக்காடு திருமணம் செய்த சாதிகள் என்று பிரிக்கிறார். உடலுழைப்பை 50 விழுக்காடு அதிகமாக செய்கிற சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று சொலிகிறார். அதை நான்கு போட்டு அது ஒவ்வொன்றுக்கும் 3 மதிப்பெண்கள் போடுகிறார். கல்வி என்று வருகிற போது தொடக்கக் கல்விக்கே போகாதவர்கள் மாநில சராசரிக்கு மேல் 25 விழுக்காடு இருந்தால் அந்தச் சாதிகள்; பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் விலகுகிறவர்கள் 'டிராப் அவுட்ஸ்' மாநில சராசரியை விட 25 விழுக்காடு அதிகமாக இருக்கிற சாதிகள், இதையெல்லாம் இப்படியொரு பட்டியல் எடுக்கிறார். அதற்கெல்லாம் 2 மதிப்பெண்கள். அப்பறம் பொருளாதார ரீதியாக என்று வருகிறபோது μலைக்குடிசையில் வசிப்பவர்கள் மாநில சராசரியை விட 25 விழுக்காடு அதிகமாக இருக்கிற சாதிகள்; குடி நீருக்காக அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து போகிறவர்கள்; மாநிலத்தில் கடனை மாநில சராசரிக்கு மேல் பெற்றிருக்கிற குடும்பங்கள் இப்படியெல்லாம் கணக்கெடுத்து 22 மதிப்பெண் போட்டு அதில் எந்த சாதி 11 மதிப்பெண்களுக்கு மேலிருக்கிறதோ அந்த சாதியெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அறிவிக்கிறார்; இவ்வளவு ஆராய்ச்சிக்குப் பின்னால் அவர் அறிவிக்கிறார். அறிவித்தது மட்டுமல்ல அந்த சாதிகளை வகைப்படுத்தி எழுதிவிட்டு இந்த சாதிகளுக்குப் பரிந்துரை தருகிறார்; பரிந்துரையைப் பற்றி விரிவாகப் பேசினால் நேரமாகிவிடும். பரிந்துரையில் இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கிறது ஒரே ஒரு செய்தியை மட்டும் தான். ஆறு பரிதுரைகளைக் கொடுத்தார்.





1. கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு

2. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு

3. கடன் கொடுப்பதில் 27 விழுக்காடு இதெல்லாம் சொல்கிறார்; அதுமட்டுமல்ல

4. நில உடமை என்பது இந்த நாட்டில் உற்பத்தி சக்திகள் எல்லாம் ஆதிக்க சாதிகள் கையில் இருப்பதால் தான் இவர்கள் இந்து பொருளாதார வளர்ச்சியில்லை, எனவே உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார் - அதை யாரும் பேசுவதே இல்லை.

5. அரசு உதவி பெறும் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்று பரிந்துரை செய்தார்

6. அதேபோல மீனவர் போன்ற மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தாழ்த்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றியமைக்குமாறு சொன்னார்;



அவர்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கவேண்டுமென்று சொன்னார் அதையெல்லாம் விட்டுவிடுங்கள், ஒன்றே ஒன்று பேசிக்கொண்டிருக்கிறோம், இடஒதுக்கீடு. ஆனால் அவர் வகைப்படுத்தி பட்டியலிட்டது பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை பேர் என்று பட்டியலிட்டார். எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பட்டியலிட்டார் - இந்துக்களில் 44 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள்; இஸ்லாமிய, கிருத்துவம், சீக்கியம் போன்ற மதங்களில் இருப்பவர்கள் 8 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள். மொத்தாம் 52 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர். பின் ஏன் 52 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டு 27 விழுக்காட்டிற்குப் பரிந்துரை செய்தார் என்கிற போது தான் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் நமக்கு குறுக்கே வருகின்றன. இட ஒதுக்கீடு தமிழ்நாட்டைப் பொருத்தவரை எல்லா 100 இடங்களையும் பிரித்துக்கொடுத்தார்கள். பார்ப்பனர்களுக்கு 16- அதிகம் தான் என்றாலும் 8 ஆகப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்தார்கள்; தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1 இடம் மட்டும் கொடுத்தார்கள், 8 இடங்கள், 12-யில் ஒரு இடம். பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 6 இடம் என்று சொன்னார்கள் - அவர்களுக்கு ஒரு 44 விழுக்காடு கிடைத்தது; கிருத்தவர்களுக்கு 8 -அய்ரோப்பியர்கல், ஆங்கிலோ இந்தியர்கள் எல்லாம் சேர்ந்து 8; முஸ்லீம்களுக்கு 8 என்று பிரித்துக் கொடுத்தார்கள் - 100 வேலையையும் பிரித்துக் கொடுத்தார்கள். அதற்குப் பின்னால் மீண்டும் பெரியார் சொன்னார் - பார்ப்பனர் அல்லாதாருக்கு என்றால், இட ஒதுக்கீடு முதன் முதலில் எப்படி வந்தது என்றால் வேதத்தில் இருந்தது,



அய்யா சொன்னார், அதற்குப் பின்னால் இட ஒதுக்கீடு காங்கிரஸ்காரம் தான் கேட்டான். 1885-யில் காங்கிரஸ் என்று ஒரு கட்சி தொடங்கப்பட்டது; இந்திய விடுதலைக்காக தொடங்கப்பட்ட கட்சியல்ல காங்கிரஸ்,

நமக்கெல்லாம் தெரியும். வரலாறு படித்தால் தெரிந்துகொள்ளலாம். இந்தியர்களுக்கு பிரிட்டீஷ் அரசின் மேல் வளர்ந்து கொண்டிருக்கும் பெறுப்பை தணிப்பதற்கு 'சே·ப்டி வால்வ்' ஆகத்தான் உருவாக்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ் என்ற கட்சி. அதனைத் தொடங்கியவர் தலைமை ஏற்றவர்கள் ஆங்கிலேயர்கள். ஏ.μ.ஹியூமும் வெர்ட்டர் பிரௌனும் தான். இந்தியர்கள் யாரும் ஆரம்பிக்கவில்லை என்பது வேறு. அதில் சேர்ந்த இந்தியர்களும் 1884-யில் இங்கிருந்து பல சாதனைகளைப் புரிந்து விடைபெற்றுச் செல்கின்ற ரிப்பன் பிரபுவை வழியனுப்பச் செல்கிறபோது பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசிகளாக இருக்கிற 300 பேர் μரிடத்தில் கூடுகிறார்கள். கூடிய அவர்களிடைய ஒரு ஒற்றுமை இருக்கிறது - அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். நாம் ஏன் ஆண்டுதோறும் சந்திக்கக் கூடாது என்று யோசிக்கிறார்கள். 1885 ஜூன் மாதம் சென்னையில் சந்திக்கிறார்கள். அப்பறம் 1885 கடைசியில் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து காங்கிரஸ் என்று அமைக்கிறார்கள். ஆரம்பித்தது எப்படியோ இருக்கட்டும், அவர்கள் ராஜ விசுவாசத் தீர்மானம், பிரிட்டீஷ் அரசு நீடு வாழ்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டுமென்று இரண்டாவது தீர்மானம், மூன்றாவது தீர்மானம் ஒன்றைப் போட்டார்கள் - இந்திய வேலைகளை இந்தியமயமாக்கு என்பது அந்தத் தீர்மானம் - அதற்கு முன் டெபுடி கலெக்டருக்கு மேல் இந்தியர்கள் இல்லை, மாவட்ட நீதிபதிகளாக இந்தியர்கள் இல்லை, எங்களுக்கும் வேலை கொடு என்று போட்டார்கள்; ஆங்கிலேயன் அளித்தான். இந்தியர்களுக்கு என்று வாங்கிய வேலைகளை பார்ப்பனர்களே வைத்துக் கொண்டார்கள். வாங்கியது என்னவோ இந்தியர்களுக்கு வைத்துக்கொண்டது என்னவோ பார்ப்பனர்கள். இதனால் தான் எழுதிருத்து வந்தது. 85-90 யில் கொடுத்தான். 1906-லேயே இஸ்லாமியர்கள் அகாகான் தலைமையில் குரல் எழுப்பினார்கள். மராத்தியத்தில், சென்னை மாகாணத்தில் எதிர்ப்புக் குரல் வந்தது. அப்பறம் இட ஒதுக்கீடு வந்தது, அது ஒரு நீண்ட கதை, அது வேண்டாம். ஆனால் அதே போலத்தான் பார்ப்பனர் அல்லாதாரின் இட ஒதுக்கீடை பார்ப்பனர் அல்லாத உயர்சாதிக்காரர்கள் பிடித்துக் கொண்டார்கள்.





இந்தியர்களுக்கென்று வாங்கியதை பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டதைப் போல, பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று வாங்கியதை உயர் சாதிக்காரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். பெரியார் 1926-யில் தனது குடியரசில் எழுதினார், பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டைக் கூட்டுகிற போது - நீதிக்கட்சிகாரர்களே நீங்கள் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 5 விழுக்காடு கூட இருக்காத ராஜாவை, மிராசுதாரை, ஜமீந்தார்களை நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்; நான் பார்ப்பனர் அல்லாதார் என்றால் நூற்றுக்கு 95 ஆக இருக்கிற உழைக்கும் மக்களை கருதிக்கொண்டு பேசுகிறேன். வாருங்கள் நாம் உட்கார்ந்து கொண்டு பேசுவோம் - பார்ப்பனர் அல்லாதார் என்றால் யார் என்று பேசுகிறார். அப்பொழுதிருந்து அவர் குரலெடுக்கிறார் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு தனியாக இட ஒதுக்கீட்டைக் கொடு - அது பின்னால் கொடுக்கப்பட்டது. 12-யை 14-ஆகப் பிரித்து பிற்படுத்தப் பட்டோருக்கு 14 இடங்கள் தான் கொடுத்தார்கள். 14-யில் 2 நமக்குக் கொடுத்தார்கள். அப்பறம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கும் 14-ஆக உயர்த்தினார்கள். அதுதான் சிறப்பு. 8-ஆக இருந்ததை 14-ஆக உயர்த்தினார்கள். இப்படியெல்லாம் சிறப்பு. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு முதன் முதலாக 1943-யில் தான் இட ஒதுக்கீடு. 8.3 விழுக்காடு தான். அம்பேத்கர் வைசிராய் குழுவில் உறுப்பினராக ஆன பின்னாடி கொண்டு வருகிறார். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது 12.5 தான்.





1970-யில் தான் 15-ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14-உம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 14-உம் கொடுத்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டது, கொஞ்சம் கொஞ்சமாக நாம் வாங்கினோம். . . . . . . . . ஏதோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் மத்திய அரசில் இல்லவே இல்லை. அப்ப இல்லாத இடங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் யாரும் கேட்கவில்லை. பெரியார் கேட்டார். 1934-யில் சென்னை மாகாணத்திற்கு மட்டும் கொடுத்துட்டான். நீ சத்தம் போடாதே, உங்களுடைய ஊரில் கொடுத்து விடுகிறேன். அங்க எல்லாம் கேட்காதே என்று சொல்லிவிட்டான். ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதற்கும் வருவதற்கு மண்டல் பரிந்துரையின் காரணமாகத் தான் கொண்டுவரலாம் என்று 1980-யில் அறிக்கை கொடுத்தார். 31.12.1980-யில் அறிக்கை கொடுத்தார். அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு போராட்டம். அதற்கு 3, 4 ஆண்டுகள் ஆனது. நடைமுறைப் படுத்து என்று ஒரு போராட்டம். 1990 ஆம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிக்கை கொடுத்தது 1980, நடைமுறைப்படுத்தப்பட்டது 1990 யில். வி.பி.சிங் நடைமுறைப் படுத்தினார். அது கூட எப்படி நடைமுறைப்படுத்தினார். பயந்து பயந்து செய்தார்.





இப்பொழுது நீதிபதிகள் சாதாரணமாக சொல்லிவிட்டார்கள். அரசு பட்டியல் எல்லாம் எடுக்கவில்லையென்று. அவர் போட்ட சட்டத்தில் 13.8.1990-யில் தான் உத்தரவு போடுகிறார். அதில் தெளிவாக சொன்னார் -



1. சிவில் பணிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு (மிலிட்டரி என்றால் பிரச்சனை வந்து விடுமேயென்று) சிவில் சர்வீஸசுக்கு மட்டும் என்றார், அடுத்து



2. வேலை வாய்ப்புக்கு மட்டும் என்று சொன்னார் அதில் கூட விதிவிலக்குகளை வைத்தார் - நீதித்துறையில் இல்லை, அறிவியலில் உயர் ஆய்வுக்கு இல்லை, இப்படியெல்லாம் சில விதிவிலக்குகளை வைத்தார். அதற்குப் பின்னர் ஒன்று சொன்னார், பிற்படுத்தப்பட்டோர் எல்லோருக்கும் இல்லை - பிற்படுத்தப்பட்டவர்களில் மத்திய அரசுப் பட்டியலிலும் மாநில அரசுப் பட்டியலிலும் இரண்டிலும் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு என்று சொன்னார். மண்டல் பரிந்துரைத்தது 3740 சாதிகள்; ஆனால் இரண்டு பட்டியலிலும் இர்ந்தவர்கள் 2000 சாதிகள். ஏறக்குறைய 60 விழுக்காட்டி னருக்குத்தான் கொடுக்கப்பட்டது, 40 விழுக்காட்டினருக்கு இல்லை. இப்படியெல்லாம் கவனாமாக ஒவ்வொரு சொல்லாக போட்டு நடைமுறைப்படுத்தியதும் பெரும் போராட்டம். அதில் கூட இந்த 27 விழுக்காடு ஏன் கொடுக்கப்பட்டது 52 விழுக்காட்டிற்குப் பதிலாக ஏன் 27 விழுக்காடு கொடுத்தார்கள்? இதற்குத் தான் மைசூர் அரசில் நடந்த ஒரு வழக்கு - மைசூர் அரசர் கிருஷ்ணராஜ உடையார் இருந்தார். ஒரு சிறப்பு - சாகுமகாராஜ் என்பவர் தான் கோல்ஹாபூர் சமஸ்தானத்தில் முதன்முதலாக இடஒதுக்கீடு கொண்டு வந்தார். நூற்றுக்கு 50 இடங்கள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று சொன்னார். தாழ்த்தப்பட்டவர்களின் உயர்வுக்கு அவர் தான் பாடுபட்டவர். அவர் தாழ்த்தப்பட்டவர்களை உணவுக் கடை வைக்கச் சொல்லிப் பணம் கொடுத்தவர். தாழ்த்தப்பட்டவர்களை படிக்க வைக்கப் பணம் கொடுத்தவர். தாழ்த்தப்பட்டவர் தேனீர் கடையிலே அரசர் போய் குடிப்பார். மந்திரிகள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு போய் அரசர் போய் உணவு சாப்பிடுவார். இப்படியெல்லாம் புரட்சி செய்தவர். அந்த சாகும்காராஜும், மைசூரில் இட ஒதுக்கீடு கொடுத்த கிருஷ்ணராஜ உடையாரும், சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை முன்னின்று வழிநடத்தியவரான டி.எம். நாயரும் – மூன்று பேரும் இலண்டனில் ஒன்றாகப்படித்தவர்கள். ஒன்றாக இருந்தவர்கள், ஒன்றாக சிந்தித்தவர்கள், ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இருந்தார்கள். இந்தியாவிற்கு வந்த பின்பு மூன்று பகுதிகளில் இந்தப் புரட்சியைத் தொடங்கினார்கள். அது தான் ஒரு சிறப்பு. கிருஷ்ணராஜ உடையார் பாரிஸ்டர் படித்தவர், அவர் ஒரு ஆய்வுக் குழுவை நியமிக்கிறார். யார் தலைமையில் என்றால், மைசூர் அரசின் தலைமை நீதிபதி, ஒரு ஆங்கிலேயர் லெஸ்லீ மில்லர் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கிறார். யார் யார் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒரு பட்டியல் எடுக்கச் சொல்கிறார். அந்தக் குழு பட்டியல் எடுத்துப் பரிந்துரை தருகிறார். பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை தருகிறார். உடனே மைசூர் அரசர் 75 விழுக்காட்டு இடங்களை இட ஒதுக்கீடு செய்கிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்கிறார். பின்பு அது 68ஆக 65ஆக 60ஆகவும் ஒரு சமயம் 68 ஆக இருந்த போது ஒருவன் வழக்கு மன்றத்திற்குப் போனான். பாராஜி என்னும் வழக்கு, அது உச்சநீதிமன்றம் வரை போய் வழக்காடினான். இவ்வளவு இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி திறமை எல்லாம் போய்விடும் என்று வாதாடினான். ஒரு திட்டம் எதுவும் கிடையாது. அங்கே 5 நீதிபதிகள் தீர்ப்பு சொன்னார்கள் - 50க்கு மேலே இட ஒதுக்கீடு போகக் கூடாது. அது என்ன அறிவியல் அடிப்படையா? இவன் எல்லாம் கேட்கிறான், என்ன அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்கிறீர்கள் என்று. 50 விழுக்காடு என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு.



இப்பொழுது ஏதேதோ விளக்கங்கள் சொல்கிறார்கள். அதன் காரணமாகத் தான் 50க்கும் மேலே போகக் கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 இடங்களும் பழங்குடி மக்களுக்கு ஏழரை இடங்களையும் பரிந்துரை செய்துவிட்டு, ஏனென்றால் அவர்களுக்கு நாடாளுமன்றங்களில் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடுக்கு ஏற்கனவே இடம் இருக்கிறது, 330, 332 என்ற பிரிவுகள் - அது என்ன சொல்கிறது என்றால் முடிந்த அளவிற்கு அவர்களுடைய மக்கள்தொகைக்கு இணையாக இடம் ஒதுக்கப்பட வேண்டும், சட்ட மன்றத்தில் நாடாளுமன்றத்தில் என்று அச்சட்டங்கள் சொல்கின்றன. அதே மாதிரி தான் கல்வியிலும் இட ஒதுக்கீட்டிற்கு, வேலை வாய்ப்பிலும் அவர்களுடைய விழுக்காட்டிற்கு முழுசாக 15, 7 1/2 மொத்தம் 22 1/2 சொல்லியாச்சு. அப்ப மீதி இருப்பது 27, ஏனென்றால் 50க்குள் இருக்க வேண்டும். அதனால் தான் 27. மொத்தமா சேர்த்தால் 49 1/2. அதனால் தான் அவர் 27-ஐப் பரிந்துரை செய்தார். மக்கள் தொகை 52 விழுக்காடு என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒன்று தடையாக இருக்கிறது என்று சொல்லி, 27 ஐப் பரிந்துரை செய்கிறார். முதலில் உச்ச நீதிமன்றத்தின் தடை எங்கிருந்து வந்தது என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் அதைச் சொன்ன நீதிபதி, முற்போக்கு இல்லாத, என்னென்றால் நீதிபதிகள்

ஆவதெல்லாம் வருகிற வாய்ப்பு தானே, ஒரு முறையாக இல்லை, லாட்டரி டிக்கட் மாதிரி தான் வைத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அதற்குப் பின்னால் ஏராளமான நீதிபதிகள் 50 விழுக்காடு தப்பு என்று நிறைய பேர் சொல்லிவிட்டார்கள்.





கிருஷ்ண அய்யர் சொன்னார், μ. சின்னப்ப ரெட்டி சொன்னார், பகவதி சொன்னார், ஹெக்டே சொன்னார், ஏராளமான நீதிபதிகள் 50 விழுக்காடிற்கு எந்த அடிப்படையும் இல்லை, அரசியல் சட்டம் சொல்லவில்லை என்று பல்வேறு தீர்ப்புகளில் சொன்னார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இரண்டு நீதிபதிகள், மூன்று நீதிபதிகள் சொன்னார்கள். அங்கே அய்ந்து நீதிபதிகள் சொன்னார்கள். எனவே அதை மாற்ற முடியவில்லை. இவர்கள் எல்லாம் ஒருவேளை ஒரே பென்ச்சில் உட்கார்ந்திருந்தால் 50 விழுக்காடு செல்லாது என்று சொல்லியிருக்கலாம். கெட்ட வாய்ப்பாக இங்கே ஒரு ரெண்டு பேர் சொல்வார்கள், அங்கே ஒரு மூன்று பேர் சொல்வார்கள், அங்கே ஒரு மூன்று பேர் சொல்வார்கள். ஒரு நீதிபதி அழகாகச் சொன்னார், நீ தாண்ட வேண்டிய தூரம், அந்த லீப், என்பது கடக்க வேண்டிய தூரத்தை வைத்துதான் குறிக்கப்படவேண்டும். 3 1/2 பள்ளத்தை தாண்ட வேண்டு மென்றால் உன்னுடைய தாண்டுதல் 3 1/2 இருக்கவேண்டும். இல்லையில்லை சட்டப்படி நீ இரண்டே முக்கால் அடிதான் தாண்ட வேண்டும் என்றால் குழிக்குள் விழுந்து விடுவோம். அதைத் தான் சொன்னார் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கடக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய 50 விழுக்காட்டிற்குள் இருக்கவேண்டுமென்பது தப்பு என்று சொன்னார் அந்த நீதிபதி. இப்படி ஏராளமான தீர்ப்பு வந்தாலும் கூட அதுபோல அய்ந்து நீதிபதிகள் ஒரே இடத்தில் உட்கார்ந்து சொல்லவில்லை. எனவே தான் 27 கொடுத்தார். இந்த 27-ம் கூட வேலைவாய்ப்பில் மட்டும் கொடுத்தார்கள். அதுவும் இரண்டு பட்டியலும், மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றாக இருக்கிறவர்களுக்கு மட்டும் கொடுத்தார்கள். அதிலே பல சமுதாயங்கள் வாய்ப்புகளை இழந்தன. 2000 சாதிக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு. அதற்குப் பின்னால் ஒரு குழு வந்து 200 சாதிகளை சேர்த்தார்கள். மீதி பேருக்கு இன்னும் இல்லை. இது வேலை வாய்ப்பில் கொடுத்தது, கல்வியைப் பற்றி யாரும் பேசவே இல்லை. 1990-யில் ஆணை போட்டு, 2006 வரைக்கும் 16 ஆண்டுகள் இதைப் பற்றிப் பேச்சேயில்லை. எங்களைப் போன்ற சிறு இயக்கங்கள் குரல் எழுப்பியதைத் தவிர பெரிய இயக்கங்கள் யாரும் பேசவேயில்லை.



எப்போது சொன்னார்கள் என்றால், நாம் தனியார் கல்லூரிகளின் மீது இடஒதுக்கீடு பற்றி வழக்கு போட்டோம். ·பைல் பவுண்டேசன் என்ற வழக்கு - அதில் தீர்ப்பு சொன்னார்கள், கல்வி நிலையங்களையெல்லாம் இட ஒதுக்கீடு கொடு என்று உனக்குச் சொல்ல அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சொன்னது. எனவே ஒரு அரசியல் சட்ட திருத்தம் வந்தது. அந்த அரசியல் சட்ட திருத்தம் தான் கல்வி நிலையங்களில்

இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசியது. அதனாலே நமது மக்கள் விழித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்டார்கள். அரசு சட்டமாக போட்டது. அதற்கு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து சட்டத்தைப் போட்டு விட்டார்கள். ஆனால் அந்த சட்டம் தான் என்ன கதியாயிற்று என்று பார்க்கும் போது தான் நமக்குத் தெரியும், இவ்வளவு நாளாக நமக்கு இல்லை உயர் கல்வி நிலையங்களைப் பற்றி நாம் எல்லாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருக்கிறோம், அப்படி ஒரு கல்வி நிறுவனங்கள் இருப்பது இந்தச் சிக்கல் வரும் வரை நமக்குத் தெரியாது. நம்ம பையன், போனா பி.ஏ எகனாமிக்ஸ் போவான் இல்லை என்றால் பி.எஸ்.சி பாடனி போவான்; ஆனால் அவனுக்கு வழி காட்ட ஆளிருக்கிறது. நாம் யோசித்துக் கொண்டே இருப்போம் ஹிஸ்டரியிலே இடம் இருக்கிறது, போய் சேர்ந்து கொள் என்று தான் சேர்ந்து கொண்டு இருந்தார்கள். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் என்றெல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரியும், μஹோ,இப்படியெல்லம் ஒரு படிப்பு இருக்கிறதா? நீங்கள் மேல் நிலைக் கல்வியில் இருக்கிற ஆசிரியர்கள் எல்லாம் வழி காட்ட வேண்டும். அடுத்து எங்கே படிக்க வேண்டும் என்று; அவர்களுக்கே நிறைய பேருக்கு தெரியாது. இப்பொழுது நல்ல வேலை இந்தச் சிக்கல் வந்த பின்னாடி தான் இது வெளியே வந்தது. இந்த நிறுவனங்கள் என்ன பித்தலாட்டம் செய்து கொண்டிருந்தன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.





இப்பொழுது ஏ.ஐ.ஐ.எம்.எஸ் பற்றி நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசினார்கள். அந்த வேணுகோபால் செய்கிற அக்கிரமம், அவனைப் பற்றித் தனியாகச் சொல்வது அப்பறம், அதிலே எப்படி விதி வைத்திருந்தான் என்பதை பற்றிச் சொன்னால் எவ்வளவு எல்லாம் பார்ப்பனர்கள் தங்களுக்காக செய்துகொள்கிறார்கள் என்பது புரியும். எல்ல கல்லூரிகளிலும் நீங்கள் பார்க்கலாம், பட்டப் படிப்பிற்கு ஒரு 100 இடம் இருந்தால் பட்ட மேல் படிப்பிற்கு 20 இடம் தான் இருக்கும். எம்.பி.பி.எஸ் க்கு 100 இடம் இருந்தால் எம்.டி க்கு 10 அல்லது 20 இடங்கள் தான் இருக்கும். அவ்வளவு தான் இப்பொழுதெல்லாம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விதியே தலைகீழாக இருக்கிறது. எம்.பி.பி.எஸ் க்கு 40 இடம், முதுகலை படிப்பிற்கு 120 இடம், எப்படி பாருங்கள். புதிதாக ஒரு விதியை செய்தார். அந்த நிறுவனத்தில் படிக்கிற மாணவர்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று சொல்லிவிட்டான். மூன்றில் ஒரு பங்கு. எனில் 120 முதுகலைப் படிப்பு இருக்கிறது; அங்கே எம்.பி.பி.எஸ் படித்த 40 பேரும் அப்படியே முதுகலைப் படிப்பிற்கு போய் சேர்ந்து விடுவான்.



இப்படி ஒரு விதியை மிக நீண்ட காலமாக வைத்திருந்து, நம்மவர்கள் யாரும் கவனிக்கவில்லை. 1996 யில் தான் கவனத்திற்கு வந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன்; அங்கே இடம் கிடைக்காதவன்; வழக்குப் போட்டான். லஹோட்டி, இப்பொழுது ஓய்வு பெற்று இருக்கிற அப்பொழுதைய தலைமை நீதிபதியிடம் தான் வழக்கு சென்றது. அப்பொழுது பட்டியலை எடுத்துப் பார்க்கிற பொழுது தெரிகிறது, இவன் தகுதி திறமை பேசுகிறான்; இப்பொழுது தகுதி திறமை என்பது மதிப்பெண் அடிப்படையில் பேசப்படுகிறது.வேறென்ன அளவுகோல் இருக்கின்றது; அந்த மதிப்பெண்ணை நிர்ணயிக்க தேர்வு முறை; தேர்வு முறை என்பது மனப்பாடம் பண்ணுகிறவன் - நல்லா வாந்தி எடுத்தவன் நிறை மதிப்பெண் பெறுகிறான். அது தான் நமது தேர்வு முறை - அறிவை சோதிப்பது அல்ல மனப்பாடத்தை சோதிக்கின்ற முறை. அப்படை யென்றால், அந்த மனப்பாடத்தை சோதிக்கின்ற தேர்வை எழுதுவதற்கு - நம்முடைய மாணவன் ஓராசிரியர் பள்ளியில் படிக்கிறான்; வீட்டிற்குப் போனால் அய்யாம் வந்தால் சொல்வதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ - கல்வியறிவில்லாத பெற்றோர்கள்; தனிப்பயிற்சி வைக்க வசதியில்லை; உயர்நிலைப் பள்ளிக்கு பல கிலோமீட்டர்கள் போக வேண்டும்; கல்லூரிக்கு 20 கிலோமீட்டர்கள் போகவேண்டும்; தேர்வு எழுதினால் தேர்வுத் தாளைத் துரத்தவோ, அங்கு போய் மதிப்பெண் பெறுகிற வித்தை அவனுக்குத் தெரியாது; அவனுடைய பெற்றோர்கள்களுக்குத் தெரியாது. இதையெல்லாம் வைத்து வாங்குகிற மதிப்பெண், இதை வைத்துத் தான் இப்போது இட ஒதுக்கீட்டிற்கு தகுதி திறமை பேசுகிறார்கள். இந்தச் சூழல் இவன் வாங்குகிற 60 மதிப்பெண் அவன் வாங்குகிற 100 க்குச் சமம். ஆனால் நம்முடைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது நீங்கள் சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பார்த்தால் தெரியும். அவனுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு ஓப்பன் காம்படிஷன் என்பதில் 350 பேர் நம்மாள், 15ஆவது இடத்தில் ஒரு பார்ப்பான் வந்தான். 14 மாணவர்கள் நம்ம பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தான். அப்படியெல்லாம் நமது மாணவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஓப்பன் காம்படிஷனுக்கும், பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கும் இருக்கும் மதிப்பெண் வேறுபாடு அரை விழுக்காடு. மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒன்றரை மதிப்பெண் தான் வேறுபாடு. ழ்த்தப்பட்டவர்களுக்கு இரண்டரை மதிப்பெண் வேறுபாடு. பழங்குடி மக்களுக்கு 4 மதிப்பெண் வேறுபாடு - அவனுக்கும் இவனுக்கும். இவ்வளவு தடைகளைத் தாண்டி நம்ம மாணவன் வாங்குகிற 60 யே 100 க்குச் சமம். அரை மதிப்பெண் வேறுபாட்டிற்குத் தான் தகுதி திறமை போய்விடும் என்கிறார்கள். அதற்கெல்லம் தான் நாம் சொல்கிறோம், மருத்துவக் கல்லூரியை அரசு கட்டி வைத்திருக்கிறது என்றால், தனி மனிதனை பட்டம் பெற வைத்து சம்பாதிக்க வைக்க அல்ல, இந்த நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக; மக்கள் நலத்தை மேம்படுத்துவதற்காகத் தான் மருத்துவக் கல்லூரியை அரசு கட்டி வைத்திருக்கிறது. மக்களுக்கு நல்ல மருத்துவம் போகவேண்டும் என்றால், மக்களோடு இணந்து நெருங்கிப் பழகுகிற மனப்பான்மை

அவனுக்கு இருக்க வேண்டும். அவன் தான் நமக்கு மருத்துவம் செய்ய முடியும்.





நம்மளை பார்ப்பான் தொடக்கூடாது என்று நினைத்தான் என்றால் எப்படி? நீங்கள் பார்க்கலாம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் யில் 27 விழுக்காட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடந்தது. 20 நாட்கள் வேலைக்குப் போகாமல் உயர் சாதிக்காரர்கள் போராட்டம் பண்ணினார்கள். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நம்முடைய மாணவர்கள், வேலை நேரத்தில் செய்யாமல் உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரசு மருத்துவ மனைக்கு வருபவன் யாராக இருப்பான் - நம்முடைய சகோதரர்கள்; அவனுடைய் துக்கம் துயரம் அவனுக்குத் தெரியும். எனவே அவன் உணவு இடைவேளையின் போதுதான் ஆர்ப்பாட்டம் செய்தான். இவன் வேலைக்கேப் போகாமல் ஆர்ப்பாட்டம் பண்ணினான். இதுதான் உயர்சாதிக்காரனுக்கும், நம்ம மாணவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அப்ப, அந்த மருத்துவனாக, அவனோடு இணக்கமுள்ள கருத்துள்ள அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி. ஒரு நிலையத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்டவர், பஞ்சை பராரியாக தலையை விரித்துக் கொண்டு முதியோர் ஓய்வூதியத்திற்குப் போகிற போது, அங்கு இருக்கிற ஒரு வட்டாட்சியரோ, அல்லது தலைமை நிலைய துணை வட்டாட்சியரோ, உயர்சாதிக்காரனாக் இருந்தால் போனால் போ என்பான். ஆனால் நம்ம ஆளாக இருந்தால் பரிவோடு பார்ப்பான் - கொஞ்சம் பேராவது. அதைத் தான் கல்சுரல் காம்பிடன்ஸ் என்று சொன்னார்கள். அவனுக்கும் நமக்கும் பண்பாட்டு இணக்கம் இருக்க வேண்டும். இதே சிக்கல் அமேரிக்காவில் வந்தது. கருப்பர்களுடைய மருத்துவத்தை, அவர்களுடைய உடல் நலத்தை அவர்களுடைய பொது நலத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை ஆய்வதற்கு ஒரு குழுவைப் போட்டார்கள்.





சாலிவன் என்பவர் மருத்துவத் துறை செயலாளராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர்கள் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். அந்தக் குழு ஆய்வு செய்து ஒரு அறிக்கையைப் போட்டது. கருப்பர்களுடைய பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மருத்துவர்களாக, சுகாதார அதிகாரிகளாக கருப்பர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரை எழுதப்பட்டது. அப்பொழுது தான் 'கல்சுரல் காப்மிடன்ஸ்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். கருப்பருக்குத்தான் இன்னொரு கருப்பரோடு பண்பாட்டு இணக்கம் இருக்கும்; பண்பாட்டு உடன்பாடு இருக்கும்; அவன் செய்வான். அதற்குத் தான் அப்படிப் பார்த்தால் நம்ம சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் கொடுத்தால் தான் நம்ம மக்களுடைய உடல்நலம் மேம்படும். அது ஒன்று. ஆனாலும் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் குறைகிறது அதிலே தகுதி திறமை குறைகிறது என்று சொல்கிறான். பெரியார் பல கேள்விகளைக் கேட்டார் - இட ஒதுக்கீட்டில் எங்கள் ஆள் வந்தால் தகுதி திறமை போய்விடும் என்கிறாயே நீதானே இந்தனை ஆண்டுகள் ஆட்சி பண்ணினாய்; இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை பிரதமராக, ஆட்சித் தலைவர் அவர் தான், இருந்தது யார்? பார்ப்பான் தானே இருந்தீங்க இது வரைக்கும். மன்மோகன் சிங்கை விட்டுவிட்டுப் பாரு! இடையில் வேண்டுமானால் சாஸ்திரி, வி.பி.சிங், இப்படிப் பார்த்தால் உயர் சாதிக்காரர்கள், அதிலேயும் கூட வந்தவர்கள். பிற்படுத்தப்பட்டவர்களாக வந்த தேவ கௌடாவைக் கணக்கெடுத்தால் மாதக் கணக்கில் தான் இருந்திருக்கிறார். தகுதி திறமைக்குப் பேர் போன நீங்கள் தான் ஆட்சித் தலைவராக இன்று வரை இருக்கிறீர்கள் இந்தியாவில். இந்தியாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் யில் 4 விழுக்காடு தான் நிரப்பப்பட்டுள்ளது. மீதி நீங்கள் தானே இருந்தீர்கள். அப்படியென்றால் ஆட்சித் துறையில் நீங்கள், அரசியல் துறையில் நீங்கள் தான், மாநிலத்தில் ஐ.ஏ.எஸ், காவல் துறை எல்லாம் நீங்கள் தான், நீதித் துறையில் நீங்கள் தான். இந்தியா என்ன முன்னேறி விட்டது? என்று கேட்டார். ஒலிம்பிக்கில் எத்தனை பதக்கம் வாங்கிட்டு வந்தாய்? தகுதி திறமையைப் பார்த்து என்று கேட்டார். பொருள் உற்பத்தியில் உலகத் தரத்தில் ‘குளோபல் பிராண்டு’ என்று சொல்கிறார்களே எத்தனை விழுக்காடு உங்களுடையது? உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 0.6 விழுக்காடு தான். அதிலே கருப்புக் கல், ஜவுளி, டயர் இது மூன்றும் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கிறது. மீதி போனால் இவன் அனுப்புவது 0.3 தான். இதிலே தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போய்விடும் என்கிறான். உலக அளவில் இந்தியாவின் யோக்கியதைஅவ்வளவு தான். ஆனால் இவன் சொலிகிறான் நாம் போய்விட்டால் தகுதி திறமை போய்விடும் என்று குளோபள் பிராண்டு என்று ஒன்று கூட இல்லை. உலக அளவில் அறியப்பட்ட உற்பத்திப் பொருள் இந்தியாவிலிருந்து எதுவும் கிடையாது. பிராகடர் அண்ட் காம்பில் என்றோ கால்கேட் என்றோ எதுவும் கிடையாது; இந்தியாவில் எதுவும் இல்லை. அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த இட ஒதுக்கீட்டில் கூட வேலை வாய்ப்பிலிருந்து கல்விக்கு வந்து 27 தரலாம் என்று சொல்கிறபோது கூட நாடாளுமன்றம் ஒரு மனதாக

முடிவு செய்கிறது; அமைச்சரவை ஒரு மனதாக முடிவு செய்கிறது. நம்ம சட்ட மன்ற உறுப்பினர் சொன்னதைப் போல அமைச்சரவையில் இருக்கின்ற சிலர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிற, நீதித் துறை அமைச்சராக இருக்கிற பரத்வாஜ் என்கிற பார்ப்பனர்; நம்முடைய சிதம்பரத்திற்கும் பங்குண்டு என்று சொல்கிறார்கள்; இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு தடையாக இருக்கிறார்கள்.



இன்னொரு குழுவைப் போடுகிறார்கள், இன்னொரு ஆய்வுக் குழு, அது சுதர்சன் நாச்சியப்பன் பரிந்துரை செய்தார்; இன்னொரு குழு, வீரப்ப மொய்லி தலைமையில், அவர் பரிந்துரை செய்கிறார் - சரி, இந்த 27 யை ஒரே சமயத்தில் தர வேண்டாம், பார்ப்பன மாணவர்கள் அதற்கே அந்த 27 கே முடியாது என்கிறான். சுமார் 60 ஆண்டுகளாக இடஒதுக்கீடே இல்லாத பிற்படுத்தப்பட்ட மக்கள், இப்பொழுது 60 விழுக்காடு மக்கள்தொகை இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 இடம் கொடுப்பதற்குக் கூட முடியாது என்கிறான். அவனிடம் போய் சமாதானம் பேசுகிறார்கள். “சரிங்க, சமாதானமாக போகலாம், 3 ஆண்டுகளில் கொடுக்கிறோம்”.

“அதெல்லாம் இல்லை, கொடுக்க முடியாது”. “உங்களுக்கு குறையாமல் கொடுக்கிறோம்” எப்படி சம்மாதனப்படுத்துவது, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஏ.ஐ.ஐ.எம்.எஸ் எப்படி தந்தாங்கன்னா, உங்களுக்கு இதுவரை நீங்கள் அனுபவித்து வந்தது 77 இடங்களுக்கு மேல் அனுபவித்து வந்தீர்கள், பதினைந்தும் ஏழரையும் சேர்ந்து 22 1/2 போக மீதி 77 ம் உங்களிதாக இருந்தது. தனிக்காட்டு ராஜாவாக அனுபவித்து வந்தார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 கொடுத்தால் 50 ஆகக் குறைந்து விடுமே என்று தானே பயப்படுகிறீகள்; நீங்கள் பயப்படாதீங்க, உங்களுக்கு குறையாது, 77 இடங்கள் உங்களுக்கு தரும்படியாக நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்ன ஏற்பாடு என்றால், ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். ஏ.ஐ.ஐ.எம்.எஸ் யில் எல்லாம் இடங்களை 154 ஆக உயர்த்துவது. பிற்படுத்தப்பட்ட மக்களால் பதிக்கப்பட்ட 27 விழுக்காட்டு இடங்களை அதிலே உனக்கு வந்து விடுகிறது. உனக்கு பழையபடி 77 இடம் வந்து விடும். அவன் சொல்கிறான், “எனக்கு வரவதைப்பற்றிக் கவலை இல்லை, அவன்களுக்குக் கொடுக்காதே”. இதற்கு என்ன காரணம் என்பதைத் தான் ஆய்வு செய்யவேண்டும். காரணம், அவர்கள் அடுத்த போடியாளராக பிற்படுத்தப்பட்ட மக்களைக் கருதுகிறார்கள். தங்களுக்கு போட்டியாளராக தாழ்த்தப்பட்ட மக்களைக் கருதவேயில்லை. ஏனென்றால்

அவர்கள் இதுவரை நுழையவேயில்லை. ஒரு விழுக்காட்டினர் தான் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இருக்கிறார்கள். அடுத்தப் போட்டியாளனாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களை அனுபவிக்க விட்டால் வந்துவிடுவான் என்று கருதுகிறான். கிரீமி லேயர் என்ற ஒன்றை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று சொன்னால் - இப்பொழுது ஐ.ஐ. டி யில் சேர வேண்டுமென்று சொன்னால் மூன்று இடங்களில் தான் பயிற்சி நிலையங்கள்

இருக்கின்றன. ராமய்யா இன்ஸ்டிடியூட் என்று ஹைதராபாத்திலே, கோட்டாவில் இருக்கும் பன்சால் இன்ஸ்டிடியூட், டெல்லியில் இருக்கிற வித்யா மந்திர் ஆகிய மூன்றில் பயிற்சி பெற்றவர்கள் தான் ஐ.ஐ.டி யில் படிக்கின்ற முக்கால் பேர். சென்னை ஐ.ஐ.டி யில் படிக்கிறவர்களில் 80 விழுக்காட்டினர் ராமய்யா இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்கள், அதனால் தான் ஆந்திரா மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதில் அய்ந்து மாதம், நான்கு மாதம் தனிப்பயிற்சி, சிறப்புப் பயிற்சி கொடுக்கிறான். அதற்குக் கட்டணம் இரண்டு இலட்சம் ரூபாய். ஆனால் சட்டம் என்ன சொல்கிறது: இரண்டரை இலட்சம் ரூபாய் வருமானம் வந்தால் உனக்கு இட ஒதுக்கீடு இல்லை. எனில், பிற்படுத்தப்பட்ட மாணவன் எவன் நுழைவான்? இப்படிப்பட்ட சூழ்ச்சிகரமான விசயம் தான் கிரீமி லேயர்.



வி.பி. சிங்கிற்கு அடுத்து ஒரு புத்திசாலி வந்தார். அவர் தான் பி.வி. நரசிம்ம ராவ். தனது தொடக்க அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் யிலிருந்து ஆரம்பித்தவர். பின்பு அவர் காங்கிரஸில் உறுப்பினரார். தமிழ்நாட்டைப்

பொறுத்தவரை தான் காங்கிரஸ், பி.ஜே.பி என்று பேசிக்கொள்கிறோம். வடநாட்டைப் பொறுத்தவரை எல்லோரும் அந்த சிந்தனை தான். ஹாப்பன் டு பி இன் காங்கிரஸ் ஆர் ஹாப்பன் டு பி இன் பி.ஜே.பி. அவனுக்கு இந்துத்துவா சிந்தனை தான். பி.வி.நரசிம்ம ராவ் திருப்பி ஒரு உத்தரவு மாற்றிப் போட்டான். வி.பி. சிங் தான் உத்தரவு போட்டார், முடிந்து விட்டது அல்லவா. 92 யில் தீர்ப்பும் கொடுத்தாச்சு, 93 யில் நியமனமும் ஆரம்பித்து விட்டது. 93-யிலே இவன் புதிதாக ஒரு உத்தரவு போடுகிறான். என்னவென்றால், 27 விழுக்காட்டில் poorer section of the backward class என்ற ஒரு சொல்லைச் சேர்க்கிறார்; புதிதாக ஒரு உத்தரவு. வி.பி. சிங் தப்பாக

போட்டுவிட்டாராம், இவர் மாற்றுகிறாராம். அடுத்து இன்னொன்று சொல்கிறார், எந்தவித ஒரு இட ஒதுக்கீட்டிலும் உட்படாத சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகளுக்குப் 10 இடம் என்று ஒதுக்குகிறார். தீர்ப்பிலே சொல்லிவிட்டான் 50 க்குமேலே போகக் கூடாது என்று. ஏற்கனவே 49 1/2 விழுக்காடு முடிந்துவிட்டது, இதுக்குமேலே எப்படி 10 கொடுப்பாய்? இருந்தாலும் தெரிந்தே உத்தரவு போடுகிறார்; 10 விழுக்காடு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு. அதுவும் எல்லோருக்கும் இல்லை. எந்த ஒரு இட ஒதுக்கீட்டிலும் வராத சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு. அப்படியென்றால், யாருக்கு என்றால், பார்ப்பானில் ஏழைகளுக்கு என்று தனியாக ஒரு உத்தரவு போடுகிறான். இது எல்லாம் உச்ச நீதிமன்றத்திற்குப் போனது, அவனும் தீர்ப்பு சொன்னான். வி.பி.சிங் உத்தரவு செல்லும், பி.வி. நரசிம்ம ராவ் உத்தரவு செல்லாது என்று சொல்லிவிட்டான். ஆனாலும் ஒன்று சொன்னான். இந்த கிரீமி லேயர் என்பதை அப்பொழுது தான் முதன் முறையாகச் சொன்னார்கள்.வசதி படைத்தவனை ஒதுக்கிவிட வேண்டுமென்று சொன்னார்கள். அதில் கருத்து வேறுபாடு இருக்கிறது, அது தப்பு என்பது வேறு. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளலாம், வேலை வாய்ப்பில் எதற்கு வசதிவாய்ந்தவனுக்கு அதிக வாய்ப்பு என்றாலும் கூட கல்வியில் எப்படி அதை நடைமுறைப் படுத்தலாம். வசதி இருந்தும் கல்வியில்லாதவன் தான் இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்கிறான்.



அந்த சமுதாயத்திற்கு தான் இட ஒதுக்கீடு கேட்கிறான். ஒரு வேளை வேலை வாய்ப்புக்குப் போகிற போது ஏற்கனவே வசதி இருக்கிறது என்று சொன்னால் கூட அது கொஞ்சம் நியாயம் இருப்பதாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நியாயமும் இல்லாததை இதற்கும் பொருந்துகிறது என்கிறான். இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் சொன்ன தீர்ப்பை இந்த நீதிபதி தனது தடையாணையில், இதை விரிவாகச் சொல்ல நேரம் இல்லை, சொல்கிறார், இதற்கும் பொருந்தும் என்கிறான். ஆனால் அவன் சொன்னான் 1931 அடிப்படையில் எடுத்தது சரி என்று அப்பொழுது தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார் இவர். 9 நீதிபதிகள் சொன்ன தீர்ப்பை 2 நீதிபதிகள் மறுக்கிறார்கள். ஏனென்றால் இவர் தான் முன்னாடியே சிக்கல் பண்ணியவர். இவரைபற்றிச் சொல்வதானால மிக நீண்ட வரலாறு, ரொம்பத் திமிர் பிடித்தவன், நீதிபதியாக உட்கார்ந்தால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று நினைக்கிறார்கள். வரிசையில் நிற்பது வேறு எந்த நாட்டில் இருக்கிறது என்று கேட்கிறான். ஒருத்தனை அடித்துக்கொண்டு அவனை விட இவன் பின் தங்கியவன் என்று அடித்துக் கொள்வது வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று தீர்ப்பிலே எழுதுகிறான். எந்த நாட்டிலே சாதி இருக்கிறது என்று தெரியுமா மடையனுக்கு. பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்று எந்த நாட்டிலே இருக்கிறது. ஆனால் அவன் தீர்ப்பிலே எழுதுகிறான். இதற்கு முன் இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் எழுதினார்கள், யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயிக்கிற அளவு கோலை மக்களோடு தொடர்பு இல்லாத நீதிபதிகளாகிய நாங்கள் செய்ய முடியாது என்று தீர்ப்பிலே எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே வசந்தகுமார் வழக்கிலே ஓ. சின்னப்பரெட்டி எழுதினார். அதே வழக்கைச் சுட்டிக் காட்டுகிறார்கள். யார்

பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயிக்கிற அளவு கோலை மக்களோடு தொடர்பு இல்லாத நாங்கள் பட்டியலிட முடியாது, தீர்மானிக்க முடியாது; அதைச் செய்வது அரசு தான். அரசு வேண்டுமானால் அதை நிர்ணயிக்க ஒரு குழு போட்டுக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவன் சொல்கிறான், அது என்ன அரசு எது வேண்டுமானாலும் சொல்லலாமா, ஏற்றுக்கொள்வேனா நான் என்று சொல்கிறார்.

நீதிமன்றங்களின் கொடுங்கோல் என்பது - சட்டத்திருத்தத்தைப் பற்றிப் பேசினோம்.





இந்த சட்டத்திருத்தம் அல்ல, முதல் சட்டத்திருத்தத்தின் போது இன்னொரு சட்டத்தையும் திருத்தினார்கள். 31 என்கிற சொத்துடைமையைப் பற்றிய சட்டத்திருத்தம், 31 ஏ, 31 பி வந்தது. அப்பொழுது எதற்காக வந்தது என்றால், இடஒதுக்கீட்டிற்கு இங்கே சிக்கல், ஆனால் கேரளத்திலும், வங்கம், கர்நாடம் போன்ற மாநிலங்களில் நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்து பல நீதிபதிகள் தீர்ப்பு சொல்கிறார்கள். அதெல்லாம் தனிமனித சொத்துரிமைக்கு எதிரானது. அதனால தான் அந்த சட்டத்தோடு இந்த சட்டத்தையும் திருத்தினார்கள். 31 பி என்ற பிரிவை - 9 அட்டவணை என்ற ஒன்றை புதிய அட்டவணையை உண்டாக்கி அந்த அட்டவணையில் சேர்க்கப்படுகின்ற சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று சொல்லி அந்தச் சட்டத்திருத்தம் அப்போழுது தான் 1951 யிலே வந்தது. ஏனென்றால், இந்த நீதிபதிகள் புரட்சிகர நில மாற்றங்களைக் கூட அந்த நீதிபதிகள் ஏற்க மறுத்தார்கள். சிறு சிறு மாற்றங்களைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.1990க்குப் பின்னால் ஒரு புதிய போக்கு, பொதுவான மக்கள் நலம், ஒதுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் நலத்தை விட தனிமனித உரிமைகள் மேலோங்கிப் பேசப்பட்டன. இப்பொழுது நீதிபதிகள், அப்படித்தான் சொல்கிறான்.





எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, மேனகா காந்தி வழக்கு, நாகராஜன் வழக்கு என்று நிறைய வழக்கு வந்து இருக்கின்றன. அதிலே எல்லாம் தனிமனித உரிமைகளை பற்றிப் பேசுகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயம், இந்த அரசியல் சட்டத்தில் backward classes of the citizens என்று தான் சொன்னார்கள். தனி மனிதனைப் பற்றிப் பேசவில்லை. கிரீமி லேயரைப் பற்றிப் பேசவேண்டு மென்றால் விரிவாகப் பேசவேண்டும். கிரீமிலேயர் என்றால் ஒருமனிதனுடைய பொருளாதார நிலையைப் பற்றிப் பேசுவது.அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் தனிநபரைப் பற்றிப் பேசவில்லை. backward classes of the citizens என்று அந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசினார்களே தவிர, தனிமனிதனைப் பற்றிய பேச்சு அங்கே இல்லை. காரணம், மக்கள் புறக்கணிக்கப்பட்டதும், இழிவுபடுத்தப்பட்டதும் தனி மனிதர்களாக அல்ல, ஒட்டுமொத்த குழுக்களாகத்தான் புறக்கணிக்கப்பட்டார்கள், இழிவுபடுத்தப்பட்டார்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டார்கள். எனவே தான், அந்தச் சொல்லைப் போட்டார்கள். ஆனால் தனிமனிதனுடைய உரிமைகளைப் பேசுவதாக நமது நீதிமன்றங்களின் போக்கு போகிறது. சமுதாய நலனை விட தனிமனித நலனை உயர்த்திப்பிடிக்கிற போக்கு 1990க்குப் பின் வந்து விட்டது. இபோழுதெல்லாம், தீர்ப்புகளில் அதைத்தான் அதிகமாகப் புகுத்துகிறார்கள். நான் ஒன்று இடையிலே விட்டுவிட்டேன்.



இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் வேணுகோபால் செய்த பித்தலாட்டத்தை - 40 இடங்களில் தகுதி திறமை போய்விட்டது என்று பேசுகிறான். ஒன்றரை மார்க்குக்கு பேசுகிறான். பழங்குடியினராக இருந்தால் 4 மதிப்பெண்கள் தான் வேறுபாடு. ஆனால் இந்த மாதிரி அப்படியே 40 பேரும் மேல்படிப்பிற்குப் போகிற போது அவன் ஆய்வுக்கு எடுத்தான். எல்லாம் பட்டியல் வாங்கி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரிசையாக பார்த்தான். என்னத்த மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்தாய் என்ரு? அதில் பார்த்தால், மீதி இடங்கள் இருக்கின்றன அல்லவா 66.6, மூன்றில் இரண்டு இடங்களுக்கு வேறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினரை விட குறைவாக கட் ஆ·ப் மார்க்கு வாங்கியிருக்கிற 16 பேருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மற்ற இடங்களில்

கடைசி மதிப்பெண் வாங்கியிருக்கிற பழங்குடியின மாணவரின் மதிப்பெண்ணைக் காட்டிலும் குறைவாகப் பெற்றிருந்த 16 பேர் அந்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ்ஸில் படித்த பழைய மாணவர்கள் என்ற பெயரால் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்ததை நீதிபதி பார்த்தார். அது தப்பு, உடனே இப்போக்கை மாற்றவேண்டும் என்று சொன்னது உச்சநீதிமன்றம். இன்றுவரை மாற்றவில்லை. உச்ச நீதிமன்றம் 1999 யில் தீர்ப்புச் சொல்லி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை மாற்றவேயில்லை.





உச்சநீதிமன்றத்தை மதிக்கிறதேயில்லை. நம்ம ஆளுங்கள் தான் உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவன் மதிக்கவில்லை, இன்று வரை அதே நடைமுறைதான் இருந்துகொண்டு வருகிறது. அப்படியானால் தகுதி திறமை மதிப்பெண் அடிப்படையில் பார்ப்பார்களேயானால் தகுதியில்லாத 16 பேர் அந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதற்காக இடஒதுக்கீடு கொடுத்தானே அதற்கு இவன் என்ன சொல்கிறான். ஆக நம்முடைய மாணவர்கள் இப்படி போய்விட்டால் போய்விட்டது என்கிறான், காசு மட்டுமே கொடுத்தால் இடம் கொடுக்கின்ற தனியார் கல்லூரிக்கு எதிர்த்து தகுதி திறமை போய்விட்டது என்று இவன் என்றைக்காவது போராடியிருக்கிறானா? குறைவான மதிப்பெண் பெற்றவனெல்லாம் 20 இலட்சம், 25 இலட்சம் கொடுத்து 30 இலட்சம் கொடுத்து எம்.எஸ் வாங்குகிறான், அதையெல்லாம் பார்த்து அய்யோ தகுதி திறமை போய்விட்டது என்று என்றைக்காவது போராடியிருக்கிறானா? அரசுக் கல்லூரியில், இவன் செலவில்லாமல் படிக்கிற கல்லூரியில் வேற எவனும் வந்துவிடக் கூடாது. அவன் செலவு பண்ணுகிறவன் எப்படியோ போகட்டும். நாட்டு நலத்தைப் பற்றி அக்கறையிருந்தால் ஐ.ஐ.டி யில் படித்தவன் எவனும் ஐ.ஐ.எம் யில் படித்தவன் எவனும் - ஒரு தீர்மானம் போட்டோம் எங்கள் அமைப்பின் சார்பாக - இந்த உயர் கல்வி நிலையங்களில் படித்தவர்கள் கட்டாயம் 10 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனையோடு தான் சேர்க்கவேண்டும் என்று சொன்னோம். ஒருத்தன் கூட இந்தியாவில் இருப்பதில்லை. 80 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்குப் போய்விடுகிறான். உடனே வேலை இங்கே பேசுவதெல்லாம் தேச நலம் தகுதி திறமை எல்லாம் போய்விடுகிறது, நீ படித்த முடித்தவுடன் இந்தியாவிற்குப் பணியாற்றியிருக்கிறாயா? 80, 85 விழுக்காடு வெளிநாட்டிற்குப் போய்விடுகிறான். ஐ.ஐ.டி யைப் பொறுத்தவரை 85 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்கும் போய்விடுகின்றார்கள். ஏ.ஐ.ஐ.எம்.எஸ்ஸில் படித்தவன் 80 விழுக்காட்டினர் வெளிநாட்டிற்குப் போய்விடுகின்றான். அப்பறம் எதற்கு நீ இந்தியாவைப் பற்றிப் பேசுக்கொண்டு இருக்கிறாய். எங்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு, எங்களிடமிருந்து சுரண்டிக் கொடுக்கிற வரிப்பணத்தில் எங்களிடம் உறிந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் நீ படித்துவிட்டு, இங்கே பணியாற்றாமல் அங்கே போய்விடுகிறாய். நீ தேசத்தின் நலனைப் பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய்.





நாங்கள் சொன்னோம் ஒரு நிபந்தனை வை. ஒரு 15 ஆண்டுகள்; எம்.எஸ் படிக்கனும் என்றால் நிபந்தனை வைக்கிறான். நீ இவனுக்கும் வை 10 ஆண்டு 15 ஆண்டு இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்று. எவனும் ஐ.ஐ.டிக்கு சண்டை போடவே மாட்டான். இவன் சாதியை வளர்க்கிறது என்று தீர்ப்பு சொல்கிறான். இட ஒதுக்கீடு சாதியை வளர்க்கிறதாம். சாதிச் சான்றிதழ் அலமாரியில் இருக்கும். வேற யாருக்கும் தெரியாது, பட்டியல் வரும் போது தெரியும். அப்பறம் பேசுவதேயில்லை. இவன் ஐ.ஐ.டியிலே படித்துவிட்டு வெளிநாட்டிற்குப் போய்விட்டு, அங்கிருந்து திருமணத்திற்கு மட்டும் தன் ஊருக்கு வந்து தன் சாதில் தன் கோத்திரம் பார்த்து சாதி பார்த்து கலியாணம் பண்ணிவிட்டு திரும்ப அங்கே போய்விடுகிறான். இதிலே சாதி வளருவதேயில்லை. ஆனால், சான்றிதழில் இருக்கிற சாதியும் இட ஒதுக்ககீட்டிலே வருகிற சாதியும் சாதியை வளர்த்துவிடும் என்று அவன் பேசுகிறான். ஆனால் இதே தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி வழக்கிலே சொன்னார்கள், பிளந்து கிடக்கிற சாமுதாய்த்தின் வேற்றுமைகளை இட ஒதுக்கீட்டினால் பணிக்கு வருகிறவர்கள் தான் சரிப்படுத்துவார்கள் என்று எழுதுகிறார்கள். ஒன்பது நீதிபதி எழுதியதை இந்த இரண்டு நீதிபதி தப்பு என்கிறான். இவ்வளவு திமிறான போக்கு இது ஒன்றில் மட்டுமல்ல, நீங்கள் இந்திரா சஹானி வழக்கு என்பது மண்டல் வழக்கு என்பது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி. அதிலே தீர்ப்பிலே ஒன்று சொல்கிறான். பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தான் மத்திய அரசுப்பணிகளில் - அது கூடாது என்று விட்டான் தீர்ப்பிலே. ஏண்டா நீ கேட்டது பட்டுக் கோட்டைக்கு வழி என்னடா என்றால் கொட்டைப் பாக்குக்கு என்னமோ சொன்னானே என்கிற கதையாக, பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு பற்றி தான் வழக்கு, ஆனால் தீர்ப்பு சொல்கிறான் - தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் கொடுக்கப்படுகிற இட ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு மேல் கூடாது என்கிறான். அதில் நீதிபதிகளும் நீதிமன்றங்களும் செய்கிற கொடுமை. ஒவ்வொன்றுக்கும்: Untouchability என்கிற வார்த்தை - தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அப்பொழுது கோயில் வழக்கு ஒன்றில் சொல்கிறான், ‘Untouchability’ என்பதை மேற்கோள் குறிக்குள் போட்டு இருக்கிறார். அம்பேத்கர் அப்படிப் போட்டதற்கு ஒரு காரணம் - தீண்டாமை என்று ஒன்று இல்லை. தீண்டாமை என்பதாக சொல்லப்படுகிற ஒன்று என்ற பொருளுக்காக அப்படி போடுகிறார். ஆனால், இவன் சொல்கிறான், சட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மேற்கோள் குறியில் போட்டால் அதற்குத் தனி பொருள் உண்டு; சில இடங்களில் தீண்டாமை இருக்கலாம் என்பதற்காகத் தான் மேற்கோள் குறியில் இட்டார் என்று ஒரு தீர்ப்பிலே விளக்கம் சொல்கிறான், இண்டர்பிரடேசன், இவன் பாட்டுக்க விளக்கம் சொல்வான். கேரளாவில் மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் -



நாயர் சொல்வாராம், திருட்டுப் போனால் பரவாயில்லை சாவி என்கிட்டே தானே இருக்கிறது என்று. பெட்டியைத் தூக்கிக்கொண்டு μடிவிட்டானாம் திருடன். மனைவி சொன்னாளாம் பெட்டி திருட்டுபோயிருச்சுன்னு, நாயர், பயப்படாதே சாவி என்கிட்டே தானே இருக்கிறது என்று. அப்படித்தான் இவர்கள், நாடாளுமன்றம் என்ன சட்டம் போட்டாலும் சாவியை வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் அவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறான். இந்தப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லப்பட்டதற்காக, நாடாளுமன்றம் கூடி ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது. 16(4) தான் இட ஒதுக்கீடு. 16(4) A என்று ஒரு சட்டத்திருத்தம். பதவி உயர்வுகளிலும் இனி இட ஒதுக்கீடு இருக்கும் என்று ஒரு சட்டம். உடனே அதற்கு ஒரு மறுப்பு - இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கிலே தீர்ப்பு சொல்கிறான்: அதெல்லாம் கிடையாது, நீ பதவி உயர்விலே இட ஒதுக்கீடு கொடுத்தால் நேரடியாக வருவதையும் சேர்த்து 50 விழுக்காடுக்கும் அதிகமாக வந்து விடுகிறான். அதனால 50 விழுக்காடுக்கும் மேலே ஆகிவிடுகிறது. எனவே இது செல்லாது. திரும்ப 16(4) B என்று ஒரு சட்டத் திருத்தம். அதை கொண்டு வந்தான், அதற்கு என்ன சொன்னான். இல்லை இல்லை 335 என்று ஒரு பிரிவு இருக்கிறது - அது சொல்கிறது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பணி வாய்ப்போ வேளை வாய்ப்போ கொடுக்கிர பொழுது அரசு நிர்வாகத்தில் தகுதி திறமை (merit and efficiency) குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிறது. எனவே அது குறைந்து போய்விடுகிறது. அது ஒரு தீர்ப்பு. அதற்கு திருப்பி நம்ம ஆளுக 335க்கு பார்சியல் அமெண்ட்மெண்ட் என்று அதற்கு ஒரு சட்டத் திருத்தம். திருப்பியும் சொன்னான். இல்லையில்லை நீ பதவி உயர்விலே வருகிறவனுக்கெல்லாம் சீனியாரிட்டி கிடையாது என்று சொல்கிறான் ஒரு தீர்ப்பிலே. இல்லையில்லை கான்சிகுவன்சிஸ் சீனியாரிட்டி உண்டு என்று திருப்பி ஒரு சட்டத்திருத்தம். இருந்த வாய்ப்பைப் பறித்துவிட்டு அதை மீட்டு எடுப்பதற்கு நம்ம ஆளுகளுக்கு 1992 யிலிருந்து 2001 வரைக்கும் 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. 9 ஆண்டுகளாக இந்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு தீர்ப்பாகச் சொல்லி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கூட இட ஒதுக்கீடு இல்லாதது மாதிரி பார்த்துக்கொண்டான். இப்படிப்பட்ட சூழ்ச்சிகரமான நீதிமன்றத்தை இப்படியே நாம் எவ்வளவு நாளுக்கு அனுமதித்துக் கொண்டிருப்பது. ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றுகின்ற சட்டங்களைக் கூட யாரோ இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு செல்லாது என்று சொல்வதும், நம்ம இங்கே கூட அப்படி ஆனது. தமிழ்நாட்டில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி 1972-யில் ஒரு சட்டம் கொண்டுவந்தார் கலைஞர். ஒரு மனதாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், அப்பொழுது ஹண்டே உற்பட ஒரு பார்ப்பனர் சட்டமன்றத்தில் இருக்கிறார், எல்லோரும் சேர்ந்து அதை ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஒட்டுமொத்த தமிழ்நாடே ஏற்றுக்கொண்ட சட்டத்தை அங்கே ஒரு நீதிபதி செல்லாது என்று சொல்லிவிட்டான். அதைப் போலத்தான் எல்லாவற்றிலும். ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொன்னால் புரியும். நம்முடைய அரசுப் பணியாளர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை பணி நீக்கம் செய்தது தமிழக அரசு. வழக்கு நடந்தது; உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது வழக்கு. உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்தார்கள், தமிழ்நாடு அரசுடைய துணிவான் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்கள். ஒன்றே முக்கால் இலட்சம் அரசுப்பணியாளர்கள் நீக்கப்பட்டது துணிச்சலான நடவடிக்கையாம், அதற்குப் பாராட்டு. ஆனால் மருத்துவம் என்கிற அத்தியாவசிய சேவை, அதில் பணியாற்றிய 20 நாட்கள் பணிக்கு வராமல் போராடியவர்களுக்கு, வேலைக்குப் போகவில்லை என்றால் சம்பளமில்லை இது மிகச் சாதாரணமாக இருக்கிற சட்டம். சம்பளம் இல்லை என்கிறது மருத்துவத் துறை. அவன் நீதிமன்றத்திற்குப் போகிறான். நீதிபதிகள் தீர்ப்பு சொல்கிறார்கள் - வேலைக்கு வராத 20 நாட்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இன்றே முக்கால் இலட்சம் பேரை நீக்கியதற்குப் பாராட்டிய உச்சநீதிமன்றம் 20 நாட்கள் வேலைக்குப் போகாதவனுக்கு ஏன் சம்பளம் தரவில்லை என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள். நீ தானே சொன்னீயே நடவடிக்கை எடுக்க மாட்டேன்னு, அப்ப கொடுத்துவிடு சம்பளத்தை என்கிறான். நடவடிக்கை எடுக்க மோட்டோமென்பது பணி நீக்கம் இல்லை, இடை நீக்கம் இல்லை என்பது தான் நடவடிக்கை. ஆனால் இவன் சொல்கிறான் சம்பளத்தையும் கொடு என்கிறான்.



இன்னொன்றைக் கூடச் சொல்லலாம். சங்கராச்சாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்; கொலைவழக்கிற்கு பிணை போடுவதற்கு விடுமுறை நாளில் உயர் நீதிமன்றம் கூடுகிறது. அதையெடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்திற்குப் போனார்கள். உச்ச நீதிமன்றத்திற்குப் போனபொழுது அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை கூடத் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை போட்டல் தான் குற்றம் என்னவென்று தெரியும். ஆனால் அவர்கள் பிணை கொடுக்கும்போதே தீர்ப்பு மாதிரி சொன்னார்கள், இவருக்கு குற்றச் சதியில் எந்தவித தொடர்பும் இருப்பதற்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை. எனவே பிணை வழங்குகிறோம் என்று அங்கே பிணை வழங்குகிறான். குற்றச் சாற்று அறிக்கை கொடுக்கவில்லை, குற்றம் என்னவென்றே தெரியாது, ஆனால் இவன் சொல்லிவிட்டான் குற்றச் சதியில் இவருக்கு தொடர்பு இருப்பதற்கான அடிப்படை/நேரடி ஆதாரம் ஏதுமில்லை என்று. இப்படிச் சொல்லி பிணை கொடுத்துவிட்டு, ஆனால் வழக்கு நடக்கிற போது இந்த வாதத்தை பயன்படுத்தக் கூடாது என்று வேறு சொல்லிவிட்டான். இதை குற்றமில்லை என்றும் சொல்லிவிட்டு, வழக்கு நடக்கிறபோது பயன்படுத்தக் கூடாது என்று வேறு சொல்கிறான்.



ஆனால் இன்னொருத்தார் மதானி என்று ஒருவர் கோவை சிறையில் 126 கிலோவா உள்ளே வந்தவர் இப்பொழுது 46 கிலோ எடையோடு இருக்கிறார். ஒரு கால் இல்லாதவர். வழக்கு நடந்தது. 1300 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுவிட்டது. ஒரு சாட்சி கூட மதானி என்ற பெயரைச் சொல்லை அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லவில்லை. வழக்கு விசாரணையில் சாட்சிகள் கேட்டு முடித்தாகிவிட்டது, இனி வாதங்கள் தான் பாக்கியிருக்கிறது. இவர் மருத்துவத்திற்காக உச்சநீதிமன்றத்திற்கு பிணை கேட்டுப் போகிறார். அவன் சொல்கிறான், பிணை வழங்க முடியாது. 9 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டவனுக்கு, 126 கிலோவோடு சிறைக்கு வந்து இப்பொழுது 46 கிலோவாக இருப்பவருக்கு, கேரளாவினுடைய முதலமைச்சர் வந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டார், மதானிக்கு பிணை வழங்குங்கள் என்று தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து கேட்டார். மதானிக்கு பிணை மறுக்கப்பட்டது, சங்கராச்சாரிக்கு குற்றச்சாற்றெ பதிவு செய்யப்படும் முன் குற்றத்தில் இவருக்குப் பங்கேயில்லை என்று உச்சநீதிமன்றம் பிணை வழங்குகிறது. இந்த உச்சநீதி மன்றம் ஏன் இப்படி இருக்கின்றது? ஏன் என்றால், இதில் இட ஒதுக்கீடு இல்லை. இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது பல பிரிவுகளை அவர்கள் வைக்கிறார்கள். அதில் 312 என்கிற பிரிவு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி என்பதைப் போல இந்திய நீதிப்பணி என்ற ஒன்றை நிறுவவேண்டும் என்று சொல்கிறது. 1950-யிலேயே அரசியல் சட்டத்தை எழுதிவைத்தவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். மாவட்ட நீதிபதிகளுக்கு மேலான எல்லாப் பதவிகளும் ஒரு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். எப்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அதுபோல தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்திருத்திருக்கிறார்கள். அப்படி ஒருவேளை இருந்து இட ஒதுக்கீட்டில் நம்மவர்களும் வந்திருந்தால் கொஞ்சம் சில பார்வையாவது நமக்குச் சாதகமாக இருந்திருக்கும். ஏனென்றால் இன்றிருக்கும் 26 நீதிபதிகளில் இதுவரைக்கும் உச்சநீதிமன்ற வரலாற்றில், தாழ்த்தப்பட்டோர் 4 பேர் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். இந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் இந்த 60 ஆண்டுகளில் ஒருத்தர் தான் நீதிபதியாக இருந்திருக்கிறார். இரத்தினவேல் பாண்டியன்.

இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள். மீதி எல்லாம் அவர்கள் தான்.





ஏன் ஏ.ஆர். இலட்சுமணன் இருந்திருக்கிறாரே என்று சொல்லலாம்; ஆனால் அவர் உயர் சாதிக்காரர் தான். பார்ப்பனர் அல்லாதார் என்றாலும் உயர்சாதிக்காரன் தான். எல்லோருமே உயர்சாதிக்காரர்களாக உச்சநீதிமன்றத்தில் உட்கார்ந்துகொண்டு, ஏனென்றால் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை இருந்தது. உச்ச நீதிமன்றம் என்னென்ன செய்கிறது என்றால், அதை 1982 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தீர்ப்பு. அதில் சொன்னான் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் தான் குழு அமைக்கும். இவனைத் தேர்ந்தெடுக்க இவனே குழு அமைத்துக் கொண்டான். அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. மாநில அரசுப் பரிந்துரை எதுவும் கிடையாது இப்பொழுதெல்லாம். நேராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் அடுத்த நீதிபதிகளை நியமிப்பார்கள். அவன் தனது தீர்ப்புகளின் வழியாக தனக்கு தீர்ப்பு எழுதுகிற வாய்ப்பு இருக்கிறது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நாடாளுமன்றத்தின், ஏனென்றால் மூன்று தூண்கள் இருப்பதாகச் சொல்லுவார்கள். சட்டத்துறை, ஆட்சித் துறை, நீதித்துறை என்று. ஆனால் நீதித்துறையே எல்லாவற்றின் அதிகாரத்தையும் உறிந்துகொள்கிறான். ஆட்சி நடத்துவதே இவர்கள் என்பதைப் போல, எல்லாவற்றிற்கும். சுதர்சனம் நாச்சியப்பன் குழு அறிக்கை வெளியிட்டபோது, நாடாளுமன்றம் நியமித்த குழு, அறிக்கை எங்களிடம் கொண்டு வந்து கொடு என்று சொன்னான் உயர்நீதி மன்ற நீதிபதி. இவன் தான் சொன்னவன். அப்பறம் நாம் எதிர்ப்புத் தெரிவித்த பின்பு மாற்றிக் கொண்டார்கள் பின்னால். இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாகத்தினுடைய, இவனெல்லாம் சொல்கிறான் கேசவானந்தா பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தினுடைய அடிப்படை தகர்ந்து போகக் கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றம் என்பது நாடாளுமன்ற முறை என்பது குடியரசு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்வது தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடைய கருத்துக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டக் கருத்துக்களைக் கூட இவர்கள் மறுதளிக்கிறார்கள் என்கிற போது இவர்களுக்குக் கொடுத்திருக்கிற அளவுக்கு மீறிய அதிகாரத்தை நாமாகக் கொடுத்துவிட்டோமோ என்ற அச்சம் தான். ஏனென்றால் அவன் வந்து மறுக்கிறான். கேரளா முல்லைப்பெரியார் அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.





கர்நாடகா காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை ஏற்க மறுக்கிறது; இப்பொழுதும் ஏற்க மறுக்கிறது. ஆனால் நாம் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்கிற போது மட்டும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்கிறார் தோழர். சட்டமன்ற உறுப்பினர் சொன்னதைப் போல நாம் போதிய எழுச்சியை நமது கிளர்ச்சி உணர்வுகளை நாம் காட்ட மறந்துவிட்டோம், அப்படி இல்லாமல் ஆகிவிட்டோம் என்பது தான் காரணம். ஆக 50 பேர் 100 பேராக இருக்கிற உயர்சாதிக்காரன் தனக்கு இப்போ இன்னும் சொல்லப் போனால் வழக்கு தடை கூட அவன் சொல்கிறான் 1931 கணக்கெடுப்பு என்கிறான், என்.எஸ்.எஸ்.ஒ என்று ஒன்று இருக்கிறது - அவன் சொன்னான் இல்லை இல்லை குறைவாக சொல்கிறான். அவன் வந்து போன 5 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னபோது பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 விழுக்காடு என்றான். இப்ப சொல்கிறான் 42 விழுக்காடு. எப்படு 6 விழுக்காடு இந்த 5 ஆண்டுகளில் கூடியது என்று தெரியவில்லை. சரி அப்படியே இருந்தாலும் கூட நீ 42 வேண்டுமென்றாலும் வைத்துக் கொள் 36 வேண்டுமென்றாலும் வைத்துக் கொள். 27-யை விட அதிகம் தான் அது.





நான் கேட்பது 27. அந்த 27ம் கூட இப்பொழுது இந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் 9 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு தருகிறான். அதுவும் கான்பூர் போன்ற நிறுவனங்களில் 4 விழுக்கடு மட்டும் தான் இந்த ஆண்டு. எல்லா இடத்திலும் 9 இல்லை. சில இடங்களில் 4 விழுக்காடு தான் இந்த ஆண்டு. ஏனென்றால், நாம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்கிற இட ஒதுக்கீட்டு அளவிற்கு அந்த இடங்களை உயர்த்த வேண்டும். புது இடங்களை உயர்த்த வேண்டும். அவனுக்கு இடம் குறையாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் நீ வாங்கிய 27 இடங்களைத் தொடர்ந்து உனக்குத் தருகிறோம் என்றாலும் கூட, எனக்கு இடம் கொடுப்பதைப் பற்றி அக்கறையில்லை; அவர்கள் வந்துவிடக் கூடாது என்று தடுக்கிற அவர்களை அவ்வளவு சூழ்ச்சியோடும் திமிரோடும் நடந்துகொள்கிற அவர்களுக்கு எதிராக நாம் என்ன எழுச்சியைக் காட்டியிருக்கிறோம்? நாம் நம்முடைய போராட்டங்கள், நமக்குப் பெற்றுத்தருவதற்கு அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருக்கிறார்கள் என்று கருதிக்கொண்டு இருப்போமேயானால் நம்முடைய உரிமைகளை இழந்து விடுவோம். இருக்கிற உரிமைகளையும் இழந்து விடுவோம். புதிதாக ஒன்றும் இல்லை. இருக்கிற நமக்காக வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட 27 விழுக்காட்டில் 9 விழுக்காட்டை கொடுக்கலாம் என்கிற போதும் கூட அவர்கள் இவ்வளவு எச்சரிக்கையோடும் அவ்வளவு கிளர்ச்சியோடும் போராடுகிறார்கள். நாம், 60 விழுக்காடாக இருக்கிற நாம், பரிந்துரைக்கப்பட்டிருக்கிற 27 விழுக்காட்டை, பெண்களுக்கு 50 விழுக்காடு பெண்களுக்கு 33 விழுக்காடு தருவதற்கே தகராறு பண்ணுகிறார்கள். அதே போலத்தான் 60 விழுக்காடு மக்களுக்கு 27 விழுக்காடு, அதுவும் இந்த ஆண்டு கொடுப்பது 9 விழுக்காடு. இதற்கே அவர்கள் கவனமாக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்றால், சூழ்ச்சியாக நீதிபதிகள் சொல்கிறார்கள். நாம் களத்தில் இறங்கி வீதிகளில் இறங்கி நம்முடைய எதிர்ப்பை அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் காட்டினால் ஒழிய அவர்கள் கொஞ்சமாவது திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போதும் திமிறோடு செய்வார்கள் என்பது வேறு. ஆனால் நாம் இந்தக் கருத்துக்களைக் கொண்டுள்ள இயக்கங்கள், இதற்காக இயக்கங்கள் எடுக்கிற அமைப்புகள், அவர்களுக்குத் துணையாக நாமும் இந்தச் செய்திகளை மற்றவர்களிடம் பரப்புவதன் வழியாக பொதுக்கருத்தை உருவாக்குவதில் துணைபுரிய வேண்டும் என்று வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

நன்றி: திராவிட தமிழர்கள் வலைத்தளம்

Saturday, April 17, 2010

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே!

பாவலர் அறிவுமதி தொடர்கிறார்...




ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...


மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.


இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.


ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.


"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!


இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.


"வா" என்றான் அவன்.


"ஊகூம்" என்றாள் அவள்.


"வா" என்றான் மீண்டும்.


"இல்ல" என்றாள்.


"வா" என்றான் திரும்பவும்.


"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.


‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.


"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".



"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"



ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?



தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!



ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.



"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."



இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?



தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?



ஒரே காரணம்தான்...


கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)



ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?



விடுங்கடா சாமி.



(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்


உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது. உயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்

உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.

மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.

சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.

இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.

கட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.
நன்றி சீனி இஸ்மத்

Thursday, April 15, 2010

ஜூலை 2009 உருமுச்சி கலவரங்கள்

ஜூலை 2009 உருமுச்சி கலவரங்கள்[1]
ஜூலை 5,2009 அன்று மக்கள் சீனக் குடியரசின் சிங்ஜியாங் மாநிலத் தலைநகர் உருமுச்சியில் ஆரம்பமாயின. முதல்நாள் ஆர்ப்ப்பாட்டங்களின் போது 1000[2][3][4] முதல் 3000[5] வரையான உய்கூர் இன சிறுபான்மையினர்(இசுலாமியர்) ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டை சிறிதுநேரத்தில் இனக்கலவரமாக ஹான் சீனர்களைத் தாக்குவதில் திரும்பியது[6][7]. ஜூலை 7 அன்று நூற்றுக்கணக்கான ஹான் சீனர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் காவலர்களையும் உய்கூர்களையும் தாக்கினர்[8]. ஜூலை 8 அன்று சீனாவின் அதிபர் கூ சிங்தாவ் 35ஆவது ஜி8 மாநாட்டிலிருந்து அவசரமாக நாடு திரும்பினார்[9].



இந்த வன்முறை பலகாலமாக பெரும்பானமை இன ஹான் சீனர்களுக்கும் சிறுபான்மை உய்கூர்களுக்கும் இடையே புகைந்துவரும் இன வேறுபாடுகளின் வெடிப்பேயாகும். உய்கூர்கள் துருக்க இனத்தைச் சேர்ந்த இசுலாமியர். கலவரம் நிகழக் காரணமாக அமைந்தது, குவாங்டாங் மாநிலத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த இனச்சண்டையில் இறந்த உய்கூர் தொழிலாளர்கள் குறித்த சீன நடுவண் அரசின் மெத்தனமே[2][10][5]. அதிகாரிகள் கூற்றுப்படி, மொத்தமாக 184 பேர் இறந்தனர்; 1680 பேர்[11] காயமுற்றனர். பல வாகனங்களும் கட்டிடங்களும் சேதமடைந்தன[11][3]. காவலர்கள் கண்ணீர்புகை குண்டுகள், நீர்பீச்சிகள், கவச வண்டிகள் மற்றும் சாலைத்தடைகள் கொண்டு கலவரத்தை அடக்க முயன்றனர். அரசு ஊரடங்கு சட்டம் விதித்து அமைதி காத்தது[3][12][13]. இணைய அணுக்கத்தையும் கைபேசி சேவைகளையும் உருமுச்சியில் தடை செய்தது[14][15].
கலவரத்தின் காரணம் சர்ச்சைக்குள்ளானது. இறந்த இரு உய்கூர் தொழிலாளிகளின் பொருட்டே கலவரத்திற்கு முன்னோடியான போராட்டம் துவங்கியதாக இருப்பினும் சீன நடுவண் அரசு இந்தக் கலவரங்கள் வெளிநாட்டிலிருந்து உலக உய்கூர் பேரவையால் (World Uyghur Congress (WUC)) திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதாகக் கூறுகிறது[16]. WUC இன் தலைவர் ரெபியா காதிர் இந்தக் குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்[10].

நன்றி விக்கிபீடியா

தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள்

தமிழ்நாட்டில் பேசப்படும் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளேன் .

தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளை பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

பொருளடக்கம் [மறை]

1 தமிழ்



2 தெலுங்கு



3 கன்னடம்



4 உருது



5 மலையாளம்



6 குஜராத்தி



7 இந்தி



8 மராத்தி



9 ஆங்கிலம்



10 வங்காளம்



11 சிந்தி



12 ஒரியா



13 பஞ்சாபி



14 கொங்கணி



15 நேபாளி



16 துளு



17 அசாமிய



18 அரபி



19 மணிப்பூரி



20 காஷ்மீரி



21 தோர்கி



22 மைதிலி



23 சந்த்தாளி



24 சமஸ்கிருதம்



25 போடோ



26 பழங்குடிமொழிகள்




[தொகு] தமிழ்

இந்தியாவில் மொத்தம் 6,07,93,814 மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,98,916 மக்கள் வசித்து வருகின்றனர்.



[தொகு] தெலுங்கு

இந்தியாவில் மொத்தம் 7,40,02,856 மக்கள்தெலுங்கு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 35,27,594 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] கன்னடம்

இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] உருது

இந்தியாவில் மொத்தம் 5,15,36,111 மக்கள் உருது மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 942,299 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] மலையாளம்

இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] குஜராத்தி

இந்தியாவில் மொத்தம் 4,60,91,617 மக்கள் குஜராத்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 2,02,621 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] இந்தி

இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] மராத்தி

இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] ஆங்கிலம்

இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] வங்காளம்

இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] சிந்தி

இந்தியாவில் மொத்தம் 25,35,485 மக்கள் சிந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 7,375 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] ஒரியா

இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] பஞ்சாபி

இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] கொங்கணி

இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] நேபாளி

இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] துளு

இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர்


[தொகு] அசாமிய

இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] அரபி

இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர்

[தொகு] மணிப்பூரி

இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] காஷ்மீரி

இந்தியாவில் மொத்தம் 55,27,698 மக்கள் காஷ்மீரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 277 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] தோர்கி

இந்தியாவில் மொத்தம் 22,82,589 மக்கள் தோர்கி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 140 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] மைதிலி

இந்தியாவில் மொத்தம் 1,21,79,122 மக்கள் மைதிலி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 79 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] சந்த்தாளி

இந்தியாவில் மொத்தம் 64,69,600 மக்கள் சந்த்தாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 61 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] சமஸ்கிருதம்

இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] போடோ

இந்தியாவில் மொத்தம் 13,50,478 மக்கள் போடோ மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 29 மக்கள் வசித்து வருகின்றனர்.

[தொகு] பழங்குடிமொழிகள்

தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708நபர்களும், கொடகுமொழியை 111நபர்களும், காரோமொழியை17நபர்களும், கோண்டிமொழியை 30நபர்களும், ஹாலம்மொழியை 10நபர்களும், கர்பிமொழியை 29நபர்களும், காந்தேசிமொழியை 67நபர்களும், காரியாமொழியை 14நபர்களும், கோண்ட்மொழியை 20நபர்களும், கோடமொழியை 262நபர்களும், கோர்வாமொழியை 14நபர்களும், குரூக்மொழியை 76நபர்களும், லஹவ்லிமொழியை 33நபர்களும், லஹண்டாமொழியை 37நபர்களும், லுசாய்மொழியை 82நபர்களும், முண்டாமொழியை 30நபர்களும், முண்டாரிமொழியை 14நபர்களும், நிகோபரிசிமொழியை 25நபர்களும், பார்ஜிமொழியை 10நபர்களும், பார்சிமொழியை 8நபர்களும், தாடோமொழியை 56நபர்களும், திபேதிமொழியை 191நபர்களும் பேசி வருகின்றனர்

[தொகு] ஆதாரம்

மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2001அ



மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2001ஆ

நன்றி --விக்கிபீடியா

Wednesday, April 14, 2010

வெளிநாட்டு வாழ்க்கை முறை

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த வெளிநாட்டு வாழ்க்கை முறை மாற்றத்தை பற்றி முழுதாக புரிந்து கொள்ளாமல், நம் நாட்டில் இன்னும் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருப்பது வருந்ததக்கது.

வெளிநாட்டு வேலை மூலம், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கூட இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும், உலகின் இயற்கை தத்துவத்தின் படி ஒரு விதையை இழந்தால்தான் ஒரு விருச்சத்தை பெற முடியும், இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், இதில் கவனிக்க வேண்டியது இழப்பது ஒரு விதையானாலும் அந்த விருச்சதின் மூலம் கிடைப்பது பல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.


வரலாற்றை திரும்பி பார்த்தால் ரப்பர் தோட்டத்திலும், அடிமட்ட கூலி வேலைக்கும், நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.

பின்னாளில் காலம் மாற கல்வி கூட, தகுந்த வசதிகளுடன் கூடிய நாட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் (இது கூட ஒருவகை ரிமிக்ஸ் கூலி வேலை என்பதுதான் உண்மை).

ஆரம்பத்தில் ஒவ்வொரு நாட்டின் பண வீக்கத்தை பொருத்து, வேலைக்கு சென்ற நாட்டில் அடிப்படை வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்து அதில் மிச்ச படுத்திய பணத்தை நம் நாட்டில் கொண்டு வந்து மாற்றும் போது அது அவர்களுக்கு பெரிய பலனை தந்தது, அது அந்த காலம்.

அப்போது உலகசந்தையும் பொதுமயமாக இல்லை, எனவே ஒரு நாட்டில் தயாரிக்க படும் பிரபல பொருட்கள் அந்தந்த நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்ய பட்டு, நம் நாட்டில் இறக்குமதி விற்பனையுடன் சேர்த்து சந்தைக்கு வரும் போது அதன் விலை அதிகமாக இருந்தது, இதனால் அப்பொருட்களை அந்தந்த நாட்டில் குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

அது மட்டுமிலாமல், அப்போது நம் நாட்டில் வெளிநாட்டு பொருள்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது, ஆனால் இன்று மொபைல் போன் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் வரை தயாரிக்க படுவதே நம் நாட்டில் என்பது தான் உண்மை .

காரணம் குறைந்த விலையில் தயாரிப்பு பொருட்கள், குறைந்த ஊதியம் மட்டுமிலாமல் குறைந்த சலுகைகள் கொடுத்தாலே கிடைக்கும் தொழிலாளர்கள், இட வசதி, சுற்று புற சூழல் கேடு என அனைத்தும் வேறு நாடுகளை சேர்வதால், இன்று உலக நாடுகளின் பெரும்பாலான தயாரிப்புகள், இந்தியா மற்றும் சீனாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

இதன் காரணமாக, முன்பு போல் இல்லாமல் அனைத்து தரப்பு வேலைகளும் இப்போது நம் நாட்டில் கிடைக்கிறது, ஊதியமும் கிட்டதட்ட வெளிநாட்டுக்கு நிகராக இப்போது நம் நாட்டிலேயே பெற முடிகிறது.

ஆனால், இப்போதைய தேவை "இளைய தலைமுறைகள்", இவர்கள் வெளிநாட்டில் மட்டும் வேலை செய்ய நினைக்காமல் நம் நாட்டிற்கு தங்கள் உழைப்பை கொடுக்க முன் வர வேண்டும்.

வருடம் ஒருமுறை விடுமுறைக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து வெளிநாட்டு வாழ்கையை எடை போடாதீர்கள் நண்பர்களே!.

தெளிவாக பார்த்தால் அன்றும் இன்றும் நம்மை வெளிநாட்டு நிறுவங்கள் அதிகமாக அங்கிகரிக்கும் முறை இரண்டே இரண்டுதான்.

I - அடிமட்ட கூலி தொழிலாளர்கள்

II - நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

இவை இல்லாமல் மேல் தரத்தில் ஆராய்ச்சி போன்ற துறைகளில் செல்பவர்கள் விரல் விட்டு விட்டு எண்ணும் அளவில் தான் இருக்க கூடும், அப்படியே சென்றாலும் அவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பது அதிசையம் தான்.



அடிமட்ட தொழிலாளர்கள்

முதல் வரியில் சொன்னது போல், இன்றும் நம் மக்கள் இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது, இவர்களை வெளிநாட்டு ஒப்பந்த வேலைக்கு கவர்வது மிக எளிது. இங்கு இந்தியாவில் மாதம் ஆறாயிரம் கிடைக்கும் வேலைக்கு, அங்கு அறுபதாயிரம் என்ற ஒரு வரி விளம்பரம் போதும்.

இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் வருபவர்கள் தேவலம். ஆனால், இடை தரகர்கள் பேச்சை நம்பி இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவு செய்து, அதுவும் கடன் வாங்கி, இந்த வேலைக்கு வருபவர்கள் நிலை சொல்ல முடியாத வலியை கொடுக்கும்.

இவர்களை பொறுத்த வரை தங்கும் இடம் இலவசம், போக மாதம் அறுபதாயிரம் ஊதியம், இதில் மாதம் ஐம்பதாயிரம் மிச்ச படுத்தினால் கூட, வருடம் ஆறு லட்சங்கள் சேர்த்து விடலாம், என்பதுதான் இவர்களின் ஆரம்ப கனவாக இருக்கும்.

ஆனால், இவர்களில் முதல் முறை வரும் பலருக்கும் இங்கு அறுபதாயிரம் என்பது நம் ஊரில் ஆறாயிரம் கிடைப்பதை விட குறைவு என்ற பொருளியல் விபரம் தெரிவதில்லை.

மேலும் இங்குள்ள வேலைமுறை பெரும்பாலும் அவர்களுக்கு சரியான முறையில் எடுத்து சொல்லப்படுவதில்லை, அதிலும் தவறான இடை தரகர்கள் கையில் மாட்டுபவர்களின் நிலை மிக பரிதாபம், குறிப்பாக பெண்கள்.

குறைந்தது பனிரெண்டு மணிநேரம் முதல் பதினெட்டு மணி நேரம் வரை ஓய்வில்லாத கடும் வேலை, மாதத்தில் ஒரு நாள் மட்டும் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர அனுமதி, என்று மூன்று வருட இறுதியில் வாங்கிய கடன் வட்டியுடன் கட்டியது போக, மிஞ்சுவது என்னவோ ஒரு ஐம்பது ஆயீரம்தான் என்று சொன்னார்கள்.

இப்படி பார்த்தால், இங்கு இழப்பது ஒரு விதையல்ல, ஒரு இளைஞனின் மூன்று வருட வாழ்க்கை.

(நூறு இளைஞர்களை கொடு, இந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றி காட்டுகிறேன்!, என்று விவேகானந்தர் சொன்னதை இங்கு சற்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்).

கர்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்று, பின் தன் சொந்த குழந்தையை மற்றும் குடும்பத்தை மூன்று வருடம் கழித்து நேரில் பார்த்தவர்களின் கதை எல்லாம் இதில் உண்டு.

இதை பற்றி நான் கேட்டறிந்ததை எழுத முடியுமே தவிர, அதன் உண்மை வலியை, என் வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

ஆனால், இதை அனுபவித்தவர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து, இனி வரும் நம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி, அவர்களின் வெளிநாட்டு வேலை மோகத்தை அறவே நீக்க முடியும் இல்லையா?.


அப்படியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போல செல்ல இருப்பவர்களை, தகுந்த தரகர், நல்ல நிறுவனம், மேலும் சரியான வேலை முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.

மேலும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையப்பம் இடும்முன், அருகில் உள்ள அரசாங்க வெளிநாட்டு வேலை ஆலோசனை மையத்தை தொடர்புகொண்டு, இவை அனைத்தும் சரியான தகவல்களா? மற்றும் தான் செல்ல விருக்கும் விசாமுறை சரியானதா? என்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு செல்ல வழிகாட்ட வேண்டும்.


நடுத்தர தகுதி அடிப்படை தொழிலாளர்கள்

அடுத்தது படித்த, தொழில் தகுதி அடிப்படையில் வரும் நம் கணினி துறை உட்பட நடுத்தர பணியாளர்கள்.

படித்து முடித்ததும் முடியாததும், தனக்கு மட்டுமே திறமை இருப்பதாகவும் அதை நம் நாடு மதிக்கவில்லை என்று குறை சொல்பவர்களும் இதில் உண்டு.

ஆக, இவர்கள் படித்தவர்கள், நடுதரத்தில் இருந்து மேல் மட்டம் செல்ல துடிப்பவர்கள்.

எதோ ஒரு பதிவில் படித்த படி, "இந்த குடும்பத்தின் எதிர் காலமே உன் கையில் தான் இருக்கிறது என்று தலையில் திருநீறு போட்டு விமான சீட்டை கையில் கொடுத்து அனுப்பிய தமிழ்நாடும், ஆந்திராவும்தான் இதில் அதிகம்".

அடிமட்ட வசதி (அப்பா அம்மா சம்பாதித்தது) இருப்பதால் மேல் சொன்ன முறையில் இவர்களை வெறும் ஊதியத்தை சொல்லி, ஒரு வரி விளம்பரத்தில் கவர முடியாது.

ஆனால், இவர்களை கவர்வது அதை விட எளிது, ஏன் என்றால்! இவர்களின் அடுத்த தேவை, நாகரீக வாழ்க்கை முறை, நவீன வீடு மற்றும் குறிப்பாக "கார்".

எனவே, அதையே சற்று பெரிதாக, சொந்த வீடு, கார், மருத்துவ காப்பீடு மற்றும் வெளி நாட்டு குடியுரிமைக்கு நிறுவ பரிந்துரை என்று அதுவும் ஆங்கிலத்தில் சொன்னால் போதும்.

இதையே வேறு வேறு ஆங்கில வார்த்தைகளை கொண்டு சொல்லி, முடிந்த வரை இவர்கள் ஊதியத்தை குறைக்க அங்கும் ஒரு பச்சை தமிழன் அல்லது பக்கா இந்தியன், மனித வளத்துறை என்ற பெயரில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தேனை தடவி பேசி பேசியே விமானத்தில் ஏற்றி விட்டு விடுவார்கள்.

ஒரு வழியாக வண்ண வண்ண கனவுகளுடன் வெளி நாட்டில் வந்து இறங்கியவுடன், அங்கு ஒரு மனிதவளத்துறை குரல் சொல்லும்...

"சார்" (மருவாதி மருவாதியாம்), உங்களுக்கு ஒரு கார், அப்புறம் உங்களுக்கு ஒரு வீடு, நீங்க எந்த மாடல் வேணும்னாலும் தேர்வு செய்யலாம், அதற்கான வங்கி லோன் பணமாற்று, நம் நிறுவன பரிந்துரை மற்றும் உங்கள் ஊதிய சான்று காகிதங்கள் இதில் இருக்கு.

நீங்க வெறும் கையப்பம் மட்டும் போட்டா போதும்னு, படிக்க முடியாத அளவு சின்னதா எழுதி இருக்க ஒரு நூறு காகிதமாவது அதில் "நச்சத்திரம்" போட்ட ஒரு ஆயீரம் ஒப்பத்ததுடன் நம்ம முன்னாடி இருக்கும்.

(இது நாடு, நம்ம நாடும் இருக்கே!, எவனாவது மதிச்சானா? அப்படின்னு மனசுக்கு கீழ பிளாஷ் நியூஸ் ஓடும்).

என்னாடா இது! குடியுரிமை விண்ணப்பம் எதுவுமே இல்லன்னு கேட்டா?

இது எல்லாம் முடிஞ்சு, நீங்க ஒரு மூணு வருஷம் வருமான வரி கட்டியவுடன் வாங்கி விடலாம், அது ஒன்றும் பெரிய விசையம் இல்லை என்று சொல்லி, அப்போதைக்கு சமாளித்து விடுவார்கள்.

நம்மளும் நம்ம கலாச்சார படி "சரி வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டன்னு நம்பி"... மனசுக்குள்ள "வெற்றி நிச்சியம் இது வேத சத்தியம்" இல்லனா,"வெற்றி கொடி கட்டு"-ன்னு பாட்டு ஓட, சிரிச்ச முகமா (அதுதான் கடைசி சிரிப்பா பலருக்கு இருக்கும்) கையப்பம் போட்டு தள்ளுவோம்.

எல்லாம் முடிஞ்சு, நமக்கு கண்ணு தெளிவா தெரியும் போதுதான், "பிதா மகன் சூர்யா சூதாட வந்த லைலாவிடம் சொல்வது போல் " போல் விசையம் வரும்.


இப்ப பாருங்க (சார் மிஸ்ஸிங்)...கம்பெனி மொதல்லயே சொன்னா மாதிரி...

உங்களோட மாத ஊதியம் இரண்டு லட்சம், இதுல காருக்கான லோனுக்காக மாதம் ஒரு சிறிய தொகையா முப்பது ஆயீரம், இது வெறும் பத்து வருட பிடித்தம்தான்.

அப்புறம் பாருங்க உங்க வீட்டு லோனுக்காக ஒரு சிறிய தொகையா ஒரு தொண்ணூத்தி இரண்டாயீரம் பிடித்தம், இதுவும் ஒரு முப்பது வருடம் தான்.


(இப்படி சொந்த வீடு வாங்காதவர்கள், அதே தொகையை வாடகை வீட்டுக்கு கொடுத்து விட்டு, ரியல் எஸ்டேட் விலையை ராக்கெட் மாதிரி ஏற்றிவிட்ட பெருமையுடன், நம்ம ஊரில் ஒரு மூன்று படுக்கை அறை வீட்டை வாங்கி விட்டு தவணையுடன் வருட பராமரிப்புக்கு ஒரு ஒருலட்சம் வரை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.)

அத்தோட, உங்கள் மருத்துவ காப்பீடு இதர சகிதங்களுக்காக மாதம் ஒரு ஐய்யாயிரம் பிடித்தம் போக, மீதி தொகை மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும், மேலும் உங்கள் தேவைக்கு கடன் அட்டைகள் வந்து விடும் என்று சொல்ல, நமக்கு கடைசியாக "செருப்பை வைத்து சூதாடும் லைலா முகம்" போல் ஆகிவிடும்.

வேறு வழி, "உள்ளதை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனிடம் வேலைக்கு சேரும் கார்த்திக் போல" சேரும்படி ஆகிவிடும்.

ஏன் என்றால்? மீதம் வரும் எழுபதாயீரம் என்பது அடிப்படை மாத செலவுகளுக்கு ஆகும் தொகையை விட சற்று குறைவு (அதற்கு தான் அந்த கடன் அட்டைகள் என்பது இப்போது தான் புரியும்). ஆக, ஒட்டு மொத்தம் முப்பது வருட இளமையுடன் வாழ்கையை அடகு வைத்தாகி விட்டது.

இனி வரும் வாழ்க்கை சூத்திரம் மிக மிக எளிது.

அந்த கடனை எப்படி கட்டுவது!, இந்த கடனை எப்படி கட்டுவது?, கடனை கட்டும் வரை வேலை போகாமல் எப்படி பாதுகாப்பது!, வேலை போய் விட்டால் மாத தவணையை எப்படி கட்டுவது?, மாத தவணையை கட்ட அடுத்த வேலையை எப்படி பிடிப்பது!? ஆக மொத்தத்தில் "கடன்+கவலை+மனஉளைச்சல்=வெளிநாட்டு வாழ்க்கை" என்று மாறி விடுவதுதான் அதிகம்.

இதில் இன்னும் கொடுமை, நடுவில் பொருளியல் மந்தம், சுனாமி, குண்டு வெடிப்பு, என்று எது நடந்தாலும் வாங்கிய வீட்டின் விலை குறைந்து விடும்.
ஆனால், வங்கிக்கு வாங்கிய தொகை குறையாது, அதனால் வீட்டை விற்றும் கட்ட முடியாது, இப்படி வாழ்கையில் வெளிநாட்டு பெண் வந்தாலும் சரி அல்லது பெண் பெயரில் புயல் வந்தாலும் சரி, வயிற்றை கலக்குவது இவர்களுக்குத்தான்.

அதெல்லாம் சரி!, அப்படியும் ஏன்? அங்கு இருக்க வேண்டும் என்பது, இங்கு ஒரு கேள்வியாக கூடும்?

மேல் சொன்ன படி இளமை துடிப்பில் விளையாட்டாக ஆரமித்து விட்டதை, முடிக்காமல் அல்லது திரும்ப வந்து அங்கு புதிய வேலை தேடி, அதில் கிடைக்கும் வருமானத்தில் இங்கு இருப்பதை கட்டி முடிக்க முடியுமா? என்று குழம்பித்தான், இன்று அதிக சதவீதம் இருக்கிறார்கள், என்று சொன்னால் அது தவறாகாது என்று நினைக்கிறேன்.

மேலும் இடைப்பட்ட இந்த காலத்தில், இதை சமாளிக்க அதில் எடுக்க, அதை சமாளிக்க இதில் எடுக்க என்று வயது மட்டும் போய் ஆரமித்த இடத்திலேயே இருப்பவர்களும் உண்டு, கூடவே மன அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரழிவு போன்று அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பரிசும் உடலில் சேர்ந்து விடும்.

அவ்வளவு ஏன்! வருடம் ஒரு முறை விடுமுறையில் வந்து விட்டு போனால் கூட, அதை சமாளித்து நடை முறை வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது நான்கு மாதமாவது ஆகும், என்று சொல்பவர்களும் உண்டு.

இதற்காக இழந்ததுதான் எத்தனை எத்தனை, வாழ்க்கை, வயது, சுற்றம், சொந்தம், நட்பு, இத்யாதி...இத்யாதி...

இது உண்மையா! இல்லையா? என்று சந்தேகம் வந்தால், பத்து வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருக்கும் யாரையும் கேளுங்கள் (சிங்கப்பூர், மலேசியா போன்று அருகில் இருக்கும் நாட்டை தவிர).

சக நிகழ்வாக, அவர்கள் வந்திருக்கும் நேரத்தில் நடந்ததை தவிர, இந்த இடைப்பட்ட வருடங்களில் எத்தனை திருவிழாக்ளில், திருமணங்களில் அல்லது துக்கத்தில் கலந்து கொண்டீர்கள் என்று?.

இப்படி, தன்னை தானே தனிமை படுத்தி, இங்கு இருபதாயிரம் வாங்கும் ஒருவர் வாழும் அதே வாழ்கையை அங்கு இரண்டு லட்சம் என்ற பெயரில் வாழ்வதுதான் இன்றைய வெளிநாட்டு வாழ்கை.

இதில் நம் கலாச்சாரத்தின் வாடையே இல்லாமால், இயந்திரத்தோடு இயந்திரமாய் வளரும் குழந்தைகளின் நிலை சொல்லவா வேண்டும்.

கொஞ்சி மடியில் விளையாட வேண்டிய உறவுகளை, மாமா, தாத்தா, பாட்டி என்று தனக்கு தானே தனியாக தொலைபேசியில் நலம் விசாரித்து விளையாடுவது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

உலகிலேயே நாம்தான் மென் பொருள் தயாரிப்பில் சிறந்த அறிவாளிகள், ஆனால் நம் நாட்டை விட வெளிநாடுதான் நம்மை மதிக்கிறது என்று சொன்ன அனைவரிடமும் நான் கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

உலகிலேயே மென் பொருள் தயாரிப்பில் நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்பது உண்மையானால், நம்மை விட மென்பொருள் தயாரிப்பு அறிவில் குறைந்தவர்கள், எப்படி நம் தயாரிப்பை சோதித்து உலக தரமானது என்று ISO, BS சான்றிதழ் கொடுக்க முடியும்?

அதை வாங்க நாம் அல்லது நம் நிறுவனங்கள், ஏன் போட்டா போட்டி போட வேண்டும்?
ஆக, நமக்கு அன்றும் இன்றும் சிறந்த தொழிலாளியாக இருக்க மட்டுமே தெரியும், அவர்களுக்கு சிறந்த முதலாளியாக இருக்க தெரியும் என்பதுதான் உண்மை.

இதை வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லி, அதே உழைப்பை நாம், நம் சொந்த நாட்டுக்கு செய்வதன் மூலம், அடுத்து வரும் நம் தலைமுறை நம்மை போல சிறந்த தொழிலாளியாக மட்டும் இல்லாமல், உலக தரம் வாய்ந்த முதலாளியாக இருக்க முடியும் இல்லையா? அதன் பின் நாம் ICIS (Indian Certified International Standard) என்று மற்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க முடியும் இல்லையா? இனி வரும் நம் தேசத்தின் வருங்கால தூண்கள், இதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம், நோக்கம்.

பதிவை முடிக்கும் முன் கடைசியாக, ஒரு முறை விமானத்தில் சந்தித்த சீக்கியர் ஒருவர் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு இன்றுவரை நீங்கவே இல்லை.

நம் தென்இந்தியாவில் காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் வேட்டி துண்டுடன் வரும் ஒரு விவசாயியை பார்த்தால், அவரிடம் அத்தனை நில சொத்துக்களும் கையிருப்பு பணமும் தானியமும் இருக்கும்.

ஆனால், என்னதான் நாம் காரில் வெளிநாட்டு முத்திரையோடு சுற்றி வந்தாலும், நம் தபால் பெட்டியில் கடிதத்தை விட கடன் தவனை ரசீதுதான் அதிகம் இருக்கும்.

என்றுதான் மாறுமோ இந்த வெளிநாட்டு மோகம்?.

Thanks to  Mr.Akbarali al fajar